தன்னுடனான காதல் உறவை முறித்துக் கொண்ட தனது காதலரைத் தண்டிக்கும் முகமாக அவரது நாக்கை கடித்து அவரை நகரவிடாது வலியால் துடிக்க வைத்த சம்பவமொன்று கிழக்கு சீனாவில் அன்ஹுயி மாகாணத்திலுள்ள கியன்ஷான் நகரில் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, ஸொயு என்ற 26 வயது பெண்ணே தனது காதலரான லியு என்ற 23 வயதுடைய இளைஞரின் நாக்கை விடாது இறுகக் கடித்து அவரை வலியால் துடிக்க வைத்துள்ளார்.
ஸொயுவும் லியுவும் பல வருட காலமாக காதலித்து வந்த நிலையில் அண்மையிலேயே லியு அவருடனான உறவை முறித்துக்கொண்டார்.
சம்பவ தினம் தனது காதலரை வீதியில் கண்ட அந்தப் பெண் அவரை வழிமறித்து அவரிடம் இறுதியாக முத்தமொன்றைப் பகிர்ந்துகொள்ள விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
அதற்குக் காதலர் இணங்கவும் காதலி அவரை முத்தமிடுவது போன்று பாவனை செய்து திடீரென அவரது நாக்கை இறுகக் கடித்துள்ளார்.
வலி தாங்காது அந்தக் காதலர் கூச்சலிட்டு காதலியிடமிருந்து விடுபட முயற்சித்த போது, இந்தக் காட்சியைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவ்வழியாகச் சென்ற பாதசாரிகள் பொலிஸாருக்கு அழைப்பு விடுக்கவும் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் அந்தப் பெண்ணின் மீது மிளகுத் தூள் பிரயோகத்தை மேற்கொண்டு பெரும் போராட்டத்தின் மத்தியில் அவரிடமிருந்து அந்தக் காதலரை மீட்டுள்ளனர்.
இதனையடுத்து அந்தக் காதலர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மேற்படி சம்பவத்தை அவ்வீதி வழியாகச் சென்ற சிலர் தமது கையடக்கத் தொலைபேசி புகைப்படக்கருவியைப் பயன்படுத்தி காணொளிப்படமெடுத்து வெளியிட்டுள்ளனர்.