கியூபா நாட்டில் ஒழிக்கப்பட்ட பிரதமர் பதவிக்கு மீண்டும் உயிரூட்டும் வகையில் 43 ஆண்டுகளுக்கு பின்னர் மானுவேல் மர்ரேரோ-வை புதிய பிரதமராக அதிபர் மிகுவேல் டயஸ் கனேல் நியமித்துள்ளார்.
வட அமெரிக்க கண்டத்தில் உள்ள சிறிய தீவுநாடான கியூபாவில் சுமார் ஒரு கோடியே 15 லட்சம் மக்கள் வாழ்கின்றனர். அந்நாட்டின் அதிபராக பிடல் காஸ்ட்ரோ ஆட்சி செய்தபோது 1976-ம் ஆண்டில் பிரதமர் பதவி ஒழிக்கப்பட்டது. அவருக்கு பின்னர் அதிபராக பதவியேற்ற ரவுல் காஸ்ட்ரோ காலத்திலும் இதேநிலை நீடித்தது.
இந்நிலையில், 43 ஆண்டுகளாக வழக்கொழிக்கப்பட்ட பிரதமர் பதவிக்கு மீண்டும் உயிரூட்டும் வகையில் 24-2-2019 அன்று கியூபா பாராளுமன்றத்தில் புதிய அரசியலமைப்பு சட்டம் நிறைவேற்றப்பட்டது.
இதைதொடர்ந்து, அந்நாட்டின் சுற்றுல்லாத்துறை மந்திரியான மானுவேல் மர்ரேரோ-வை கியூபாவின் புதிய பிரதமராக அதிபர் மிகுவேல் டயஸ் கனேல் நியமித்துள்ளார்.
அவரது தலைமையில் 6 இணை மந்திரிகளை கொண்ட மந்திரிசபை நாட்டின் முக்கிய விவகாரங்களை கவனித்தாலும் அனைத்து அதிகாரங்களும் ஆளும் கம்யூனிஸ்டு கட்சியின் தலைவரான ரவுல் காஸ்ட்ரோ மற்றும் அதிபர் மிகுவேல் டயஸ் கனேல் ஆகியோரிடம் குவிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.