துப்பாக்கியை காட்டி ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்திச் செல்லப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் வாக்குமூலத்தை பெற்ற பின்னர், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, வாக்குமூலம் பெற அழைக்கப்படவிருப்பதாக தெரியவருகிறது.
இதன் பின்னர், அன்றைய அரசாங்கத்தில் பொதுநிர்வாக அமைச்சராக இருந்த கரு ஜயசூரியவை ஒருவர் தொடர்புக்கொண்டு கீத் நொயார் கடத்திச் செல்லப்பட்டுள்ள சம்பவம் குறித்து தெரியப்படுத்தியுள்ளார்.
இதனையடுத்து கரு ஜயசூரிய உடனடியாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை தொடர்புக்கொண்ட போதிலும் அவர் உறங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் எப்படியாவது ஜனாதிபதியிடம் பேச வேண்டும் என கரு ஜயசூரிய கூறியதை அடுத்து, மகிந்த ராஜபக்ச தொலைபேசி இணைப்புக்கு வந்துள்ளார்.
மகிந்த ராஜபக்சவிடம் பேசிய கரு ஜயசூரிய, ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாகவும் அதனை திட்டமிட்டு எவரோ செய்துள்ளதாகவும் கீத் நொயாருக்கு ஏதேனும் நடந்தால், தான் அரசாங்கத்தில் இருந்து விலக நேரிடும் எனவும் கூறியுள்ளார்.
இதன் பின்னர் பதிலளித்துள்ள மகிந்த ராஜபக்ச, “கரு, குழம்பிக்கொள்ள வேண்டாம், அதனை நான் தேடிப்பார்க்கின்றேன்” எனக் கூறியுள்ளார்.
இதன் பின்னர், மகிந்த ராஜபக்ச, அன்றைய பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, அன்றைய இராணுவப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் மேஜனர் ஜெனரல் கபில ஹெந்தாவிதாரன, இராணுவப் புலனாய்வுப் பிரிவின் மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர ஆகியோருடன் தொலைபேசியில் தொடர்புக்கொண்டு உரையாடியதன் பயனாக, கீத் நொயார், மல்வானை பிரதேசத்தில் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டார் எனவும் கூறப்படுகிறது.