தேனி: தேனி மாவட்டம் குரங்கணி வனப்பகுதியில் நடைபெற்ற காட்டுத் தீயில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10-ஆக அதிகரித்துள்ளது.
குரங்கணி வனப்பகுதிக்கு மலையேற்ற பயிற்சிக்கு 36 பேர் வரை சென்றனர். அவர்களுள் 27 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள். நேற்றைய தினம் அங்கு காட்டுத் தீ மளமளவென பற்றி எரிந்தது.
அப்போது மலையேற்ற பயிற்சிக்கு சென்றவர்கள் நாலாப்புறமும் சிதறி ஓடினர். இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட நிர்வாகம் அவர்களை மீட்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டது.
அவர்களில் 27 பேரில் 10 பேர் எவ்வித காயமின்றி மீட்கப்பட்டுவிட்டனர். இந்த விபத்தில் 9 பேர் தீயில் கருகி பலியாகி விட்டதாக தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
அவர்களில் சென்னையை சேர்ந்த அகிலா, பிரேமலதா, புனிதா, சுபா, அருண், விபின் ஆகிய 6 பேரும், ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த விஜயா, விவேக், தமிழ்ச் செல்வி ஆகிய 3 பேரும் மொத்தம் சேர்த்து 9 பேர் வரை உயிரிழந்துவிட்டதாக ஆட்சியர் கூறியுள்ளார்.
இந்நிலையில் குரங்கணியிலிருந்து மீட்கப்பட்டவர்களில் சென்னை வேளச்சேரியை சேர்ந்த நிஷா மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார்.
இதனால் குரங்கணி மலை பகுதியில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10-ஆக உயர்ந்துவிட்டது.