வைத்தியசாலையில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டிருந்த யுவதி ஒருவர் தான் பிரசவிக்கவிருக்கும் குழந்தையை விற்பனை செய்ய முயல்வதாக நாவலப்பிட்டி பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து குறித்த பெண்ணிடம் விசாரணைகளை மேற்கொண்டதில் குறித்த யுவதி கொழும்பில் வீடொன்றில் வேலை செய்தபோது வீட்டு எஜமான் தனக்கு தினமும் மயக்க மருந்து கொடுத்து வல்லுறவுக்கு உட்படுத்தியதாக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டபோது குறித்த யுவதி பிரசவத்துக்கு அனுமதி பெறுவதற்காக வழங்கிய வதிவிட முகவரி பெயரும் போலியானது என தெரியவந்துள்ளதோடு தன்னை தான் வேலைசெய்த வீட்டு எஜமான் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக கூறியமையும் பொய்யென உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த பெண் மஸ்கெலிய பகுதியைச் சேர்ந்த திருமணமாகாத 23 வயதானவர் என்பதும் இவரின் தங்கை வெளிநாடொன்றுக்கு வேலைவாய்ப்பு பெற்றுச் சென்றிருந்த சமயம் தங்கையின் கணவருடன் ஏற்பட்ட தகாத உறவின் மூலமே கர்ப்பமுற்றிருப்பதாகவும் தெரியவந்துள்ளது. மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.