ஒக்டோபர் 26 ஆட்சிக் கவிழ்ப்பு மூலம், இழந்து போன செல்வாக்கை தூக்கி நிறுத்துவதற்கான ஒரு வாய்ப்பாக, இந்தப் புதிய அரசியலமைப்பு விவகாரத்தை கையில் எடுத்திருக்கிறது மஹிந்த தரப்பு
“புதிய அரசியலமைப்பு சமஷ்டி பண்புகளுடன் தான் வருகிறது. அரசியல்வாதிகளின் சொல்லாடல்களால் குழப்பமடைந்து விடக்கூடாது” இது, கொழும்பில் நடந்த தமிழரசுக் கட்சியின் மத்திய செயற் குழுக் கூட்டத்தில் இரா . சம்பந்தன் கூறியிருக்கின்ற விடயம்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் ஐக்கிய தேசியக் கட்சி அமைச்சர்களும் ஒற்றையாட்சியையும், பௌத்த மதத்துக்கான முன்னுரிமையையும் புதிய அரசியலமைப்பு உறுதிப்படுத்தும் என்று தெளிவாகக் கூறி வரும் சூழலில், தான் இரா.சம்பந்தன் இந்தக் கருத்தைக் கூறியுள்ளார்.
சமஷ்டித் தீர்வு ஒன்றையே தமிழர் தரப்பு வலியுறுத்தி வந்த நிலையில், புதிய அரசியலமைப்பு அத்தகைய ஒன்றாக இருக்கப் போவதில்லை என்பது உறுதியாகி விட்டது.
பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஏற்கனவே, தமிழர்கள் எதிர்பார்க்கும் – சமஷ்டித் தீர்வை புதிய அரசியலமைப்பு தராது என்று தெளிவாகக் கூறியிருந்தார்.
ஆனாலும், சம்பந்தனும் சுமந்திரனும் இந்தப் புதிய அரசியலமைப்பை எப்படியாவது நிறைவேற்றி விட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூட, இந்த அரசியலமைப்பு நிறைவேற்றப்படும் என்ற உறுதியான நம்பிக்கையை வெளியிடவில்லை. இப்போது இல்லாவிட்டாலும், பின்னராவது அது கொண்டு வரப்படும் என்று தான் கூறியிருக்கிறார்.
பாராளுமன்றத்தில் அறுதிப் பெரும்பான்மை பலம் கூட இல்லாத ஐக்கிய தேசியக் கட்சிக்கு, புதிய அரசியலமைப்பை நிறைவேற்ற, மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் கிடைக்கும் என்ற நம்பிக்கை இல்லை. அதைவிட சர்வஜன வாக்கெடுப்பும் வேறு நடத்த வேண்டியிருக்கும்
நான்கு ஆண்டுகளுக்கு முன்னர், இது தான் புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்குக் கிடைத்துள்ள பொன்னான காலம் என்று கருதப்பட்டது. இப்போதைய நிலையில், இது சாத்தியமில்லை என்று கருதக் கூடிய சூழலே தென்படுகிறது.
புதிய அரசியலமைப்பு இப்போது தேவையில்லை, அதனை தோற்கடிக்க முனைவோம் என்று அதன் உள்ளடக்கத்தின் சாதக, பாதகங்களைப் பற்றி கவலைப்படாமல் சூளுரைத்துக் கொண்டிருக்கிறது மஹிந்த அணி.
இப்படிப்பட்டதொரு நிலையில், புதிய அரசியலமைப்பு பற்றிய அதீதமான நம்பிக்கையில் சம்பந்தனும் சுமந்திரனும் மாத்திரமே இருக்கிறார்கள் . தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களும் கூட நம்பிக்கை யிழந்து போய் விட்டார்கள்.
அவர்கள் யாருமே இதுபற்றிப் பேசுவது கூட இல்லை. பேசுவதற்கும் தயங்குகிறார்கள்.
புதிய அரசியலமைப்புத் தேவை, அது நடைமுறைக்குக் கொண்டு வரப்பட வேண்டும் என்பதெல்லாம் சரி, ஆனால் அந்த புதிய அரசியலமைப்பின் உள்ளடக்கமும், அதனை நிறைவேற்றுவதற்கான அரசியல் தற்துணிவும் பாராளுமன்ற பலமும், ஆட்சியாளர்களுக்கு இருக்கின்றதா என்பதே, இந்தக் கட்டத்தில் முக்கியமானது.
தற்போதைய நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியிடம், புதிய அரசியலமைப்பை நிறைவேற்றும் துணிச்சலோ, அதனை நடைமுறைப்படுத்துவதற்கான பெரும்பான்மை பலமோ கிடையாது.
புதிய அரசியலமைப்பை வைத்து, மஹிந்த அணி தொடுத்திருக்கின்ற அரசியல் பிரசாரங்களில் இருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்வதிலேயே ஐக்கிய தேசியக் கட்சி தீவிர கவனம் செலுத்தி வருகிறது. புதிய அரசியலமைப்பு நிறைவேற்றப்பட்டால், மாகாண அரசுகள் பலம் பெறும், மத்திய அரசு பலவீனமடைந்து, நாட்டுக்குப் பேராபத்து ஏற்படும் என்று கோத்தாபய ராஜபக்ச ஷ எச்சரித்துக் கொண்டிருக்கிறார்.
ஒன்பது துண்டுகளாக நாடு பிரியப் போகிறது என்கிறார் இன்னொருவர். தேசிய பாதுகாப்புக்கு ஆபத்து என்கிறார் மற்றொருவர்.
சமஷ்டி அரசு உருவாகும், வடக்கு, கிழக்கு இணையும், தனிநாடு உருவாகும் என்கிறார் வேறொருவர்.
ஆயுதங்களால் பிரபாகரன் பெற முடியாமல் போனதை, புதிய அரசியலமைப்பினால் சுமந்திரன் பெற்றுக் கொடுக்கப் போகிறார் என்கிறார்கள் வேறு சிலர்.
பௌத்தத்துக்கான முன்னுரிமை பறிபோகப் போகிறது என்று புலம்புகின்றனர் இன்னும் சிலர்.
இப்படி, புதிய அரசியலமைப்பை விமர்சனம் செய்வது என்ற பெயரில், அதன் உள்ளடக்கத்துக்குப் புறம்பான, விடயங்களை முன்னிறுத்தி மஹிந்த தரப்பு பிரசாரத்தில் இறங்கியிருக்கிறது.
ஒக்டோபர் 26 ஆட்சிக்கவிழ்ப்பு மூலம், இழந்துபோன செல்வாக்கை தூக்கி நிறுத்துவதற்கான ஒரு வாய்ப்பாக, இந்தப் புதிய அரசியலமைப்பு விவகாரத்தை கையில் எடுத்திருக்கிறது மஹிந்த தரப்பு.
ஐக்கிய தேசியக் கட்சி நாட்டை ஆபத்துக்குள் தள்ளிச் செல்கிறது என்று, சிங்கள பௌத்த வாக்காளர்களை நம்ப வைக்கின்ற முயற்சியில் தான் அந்த அணி தீவிர பிரசாரங்களை முன்னெடுக்கிறது,
இந்தக் கட்டத்தில், ஐக்கிய தேசியக் கட்சியைப் பொறுத்தவரையில், புதிய அரசியலமைப்பை விட, அடுத்து வரும் தேர்தல்களைத் தான் முக்கியமானதாக கருதுகிறது. அதில் தோல்வியடைந்து விடக் கூடாது என்பதே அவர்களின் முதல் நோக்கமாக இருக்கிறது.
எனவே, புதிய அரசியலமைப்பை வைத்து செய்யப்படும் பிரசாரங்களைத் தோற்கடிக்க, அந்தக் கட்சி செய்யும் பிரசாரங்கள் தமிழ்த் தேசியக். கூட்டமைப்பைச் சந்தியில் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது.
ஒற்றையாட்சி அரசியலமைப்புத் தான் வரும், சமஷ்டி கிடையாது, பௌத்தத்துக்கான முன்னுரிமை பாதுகாக்கப்படும் என்றெல்லாம் ஐ.தே.க. செய்யும் பிரசாரங்கள் கூட்டமைப்புக்கும் அதன் வாக்கு வங்கிக்கும் ஆபத்தாக மாறியிருக்கிறது.
புதிய அரசியலமைப்பு இப்போது வராது போனாலும், ஒற்றையாட்சியை அனைவரும் ஏற்றுக்கொண்டுள்ளார்கள், இதுவே மிகப்பெரிய வெற்றி என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூட கூறியிருக்கிறார்.
தமிழர்கள் 1950களில் சமஷ்டி கேட்டார்கள், பின்னர், தனிநாடு கேட்டார்கள், போர் முடிந்த பின்னரும் சமஷ்டியை கேட்டார்கள் – இப்போது, ஒற்றையாட்சியை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். இது மிகப்பெரிய வெற்றி என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறியிருந்தார்.
சம்பந்தன் ஒரு பக்கத்தில் சமஷ்டிப் பண்புகளுடனான அரசியலமைப்புத் தான் வரும் என்கிறார். சமஷ்டி இல்லாவிட்டாலும், அதன் குணாம்சங்களைக் கொண்ட அரசியலமைப்பு உருவாக்கப்படும் என்று சுமந்திரன் கூறினாலும், ஒற்றையாட்சியை தமிழர்கள் ஏற்றுக்கொண்டு விட்டார்கள் என்று பிரதமர் ரணில் கூறியிருப்பது முரண்பாடானதாக உள்ளது.
இவர்கள் மூவரும் கூறிய கருத்துக்கள் சரியானவை என்றால், தமிழர்களை சம்பந்தனும் , ரணிலும் ஏமாற்றுகின்றனர் என்று மஹிந்த அணியினர் கூறும் குற்றச்சாட்டடை சரியென்றே கருத வேண்டும்.
ஏனென்றால், சமஷ்டிப் பண்புகளுக்கும், அதன் குணாம்சங்களுக்கும், ஒற்றையாட்சித் தன்மை நேர் எதிர்மாறானது. அதிகாரக் குவிப்பை வலியுறுத்தும் ஒற்றையாட்சியும், அதிகாரப் பகிர்வை வலியுறுத்தும், சமஷ்டியும் எவ்வாறு ஒரே கோட்டில் வர முடியும்?
சம்பந்தன், சுமந்திரன், ரணில் விக்கிரமசிங்க ஆகிய மூவரும், கூறுகின்ற விடயங்கள் சரியானவையாக இருந்தால், இந்த இரண்டும் ஒரே கோட்டில் வர வேண்டும்.
முதலில் சமஷ்டி என்ற பெயர்ப்பலகை இருக்காது. அது அவசியமில்லை என்றனர். அதன் பண்புகள் மாத்திரம் போதும் என்றனர்.
தமிழர் தரப்பில் இத்தகையதொரு விட்டுக்கொடுப்புக்குத் தயாராக இருந்தாலும், அரச தரப்பு ஒற்றையாட்சி என்ற பெயர்ப்பலகையில் தான் தொங்கிக் கொண்டிருக்கிறது என்பதை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உறுதிப்படுத்தியிருக்கிறார்.
ஒற்றையாட்சியில் தொங்கிக் கொண்டிருக்கும் அரச தரப்பு, எப்படி சமஷ்டியின் பண்புகளை ஒத்த ஒரு அரசியலமைப்பை உருவாக்கித் தரும் என்ற கேள்வி மக்கள் மத்தியில் இருக்கிறது.
உள்ளடக்கம் தான் முக்கியம் சொல்லாடல் முக்கியமில்லை என்ற சம்பந்தன்- சுமந்திரன் தரப்பு வாதம் சரியாக இருக்கலாம். ஆனால், அந்தச் சொல்லாடல் தான், அரசியல் தலைவிதியை நிர்ணயிக்கப் போகிறது.
சிங்கள மக்களிடம் போய், ஒற்றையாட்சியை விட்டுக் கொடுப்போம் என்று எந்த சிங்களத் தலைவராலும் கூறமுடியாது. ஆனால், தமிழ்த் தலைவர்கள், தனிநாட்டுக் கோரிக்கையைக் கைவிட்டு விட்டோம் என்று துணிந்து கூறுகிறார்கள். சமஷ்டியையும் கைவிட்டு விடும் நிலைக்கு வந்திருக்கிறார்கள்.
சமஷ்டி என்ற சொல் வராத அதன் பண்புகளை ஏற்கத் தயார் என்ற நிலைக்கு வந்திருக்கிறார்கள். இதனைக் கூட சிங்களத் தலைமைகள் ஏற்றுக் கொள்ளத் தயாரா என்பது கேள்வி.
சிங்கள மக்களை திருப்திப்படுத்துவதற்காக- அவர்களின் ஆதரவைப் பெறுவதற்காக, சிங்களத் தலைவர்கள் கூறுகின்றதை கவனத்தில் கொள்ள வேண்டியதில்லை என்றும், புதிய அரசியலமைப்பு சமஷ்டி பண்புகளுடன் தான் வரும் என்றும் சம்பந்தன் கூறியிருக்கிறார்.
இந்தக் கட்டத்தில், ஒரு கேள்வி, சிங்கள மக்கள் விரும்பாத ஒன்றை – அவர்களுக்கு ஒன்றைக் கூறி இன்னொன்றை செய்து, ஒரு அரசியலமைப்பை நிறைவேற்ற முடியுமா? அவ்வாறு நிறைவேற்றினால் தான் அது பிரச்சினைகளுக்கு தீர்வாக அமைந்து விடுமா?
இரா.சம்பந்தன் கடந்த பல ஆண்டுகளாக ஒரு விடயத்தை வலியுறுத்தி வந்தார், அனைத்து மக்களும் ஏற்றுக்கொள்ளக் கூடிய தீர்வு ஒன்றை உருவாக்குவோம் என்பதே அது.
சிங்கள மக்களுக்கு சிங்களத் தலைமைகள் ஒன்றைக் கூறி விட்டு இன்னொன்றைச் செய்தால், அது அனைத்து மக்களும் ஏற்றுக் கொள்ளக் கூடிய தீர்வாக இருக்குமா?
புதிய அரசியலமைப்பாக இருக்கட்டும், இனப்பிரச்சினைக்கான தீர்வாக இருக்கட்டும், எதுவானாலும் அது சிங்கள மக்களின் ஒப்புதலின்றி நிறைவேற்றப்பட்டால் அது வெறும் குப்பை தான்.
அடுத்து வரும் ஆட்சி அதனை தூக்கியெறியும். அதற்கான பலத்தை சிங்கள மக்கள் நிச்சயம் கொடுப்பார்கள்.
சிங்கள மக்களும், தலைமைகளும் விட்டுக்கொடுப்புக்கும், நீதி, நியாயங்களுக்கும் தயாரில்லாத வரைக்கும், புதிய அரசியலமைப்பு சாத்தியமாகாது. இந்த நிலைதான் இன்றுள்ள யதார்த்தம்.
இதற்குப் பின்னரும், புதிய அரசியலமைப்பு பற்றிய மிகையான கற்பனைகளை ஊட்டிக் கொண்டிருப்பது, அரசியல் தலைமைகளுக்கு நல்லதல்ல.