கொரியக் குடாநாட்டை அண்டியதாக போர்ப்பதற்றம் தீவிரமடைந்து வருகிறது. வடகொரியாவின் அணுகுண்டு சோதனை மிரட்டல், அணுசக்தி ஏவுகணைப் பரிசோதனைகள் போன்றவற்றின் தொடர்ச்சியாக, அமெரிக்கா தனது படைகளை அந்தப் பகுதியில் குவிக்கத் தொடங்கியிருக்கிறது.
மூன்று குண்டுகளைப் போட்டு உலகத்தையே அழித்து விடுவோம் என்று எச்சரிக்கிறது வடகொரியா. அமெரிக்காவின் விமானந்தாங்கிக் கப்பலை ஒரே நொடியில் அழித்து விடுவோம் என்றும் மிரட்டுகிறது.
இவ்வாறாக அவுஸ்திரேலியா, தென்கொரியா, ஜப்பான் என்று தனக்கு அருகே உள்ள அமெரிக்காவின் கூட்டாளிகள் எல்லோரையும் மிரளவைத்துக் கொண்டிருக்கிறது வடகொரியா.
கிம்-யொங்-உன் ஆட்சியில் வடகொரியாவுக்குள் என்ன நடக்கிறது என்பதே உலகிற்குத் தெரியாமல் இருக்கிறது.
ஈரான், ஈராக், லிபியா, சிரியா, ஆப்கானிஸ்தான் என்று பல்வேறு நாடுகளின் மிரட்டல்களையும், அச்சுறுத்தல்களை யும் சந்தித்து விட்ட அமெரிக்காவுக்கு வடகொரியா மட்டும் இன்னமும் விதிவிலக்காகவே இருந்து வருகிறது.
அமெரிக்கா நினைத்திருந்தால், எப்போதோ வடகொரியாவை நசுக்கியிருக்க முடியும். அங்கு ஆட்சிக்கவிழ்ப்பை ஏற்படுத்தியிருக்க முடியும். ஆனால் சீனா, ரஷ்யா போன்ற நாடுகளுடன் இறுக்கமான பிணைப்பைக் கொண்டிருந்த வடகொரியாவுக்குள் அமெரிக்காவினால் அவ்வளவு சுலபமாக உள்நுழையக் கூடிய சூழல் இருக்கவில்லை.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில், ஐ.நா. பாதுகாப்புச் சபையில் வடகொரியாவுக்கு எதிராக எத்தனையோ விசாரணைக் குழுக்கள் அமைக்கப்பட்டன. விசாரணைகள் நடத்தப்பட்டன. ஆனா லும் யாராலும் வடகொரியாவுக்குள் செல்லவோ அங்கு சென்று விசாரணை நடத்தவோ முடியவில்லை.
விசாரணை அறிக்கைகளின் அடிப்படையில் கூட வடகொரியாவைப் பணிய வைக்க முடியவில்லை. அதனால் வடகொரியா மீதான எல்லா விசாரணைகளுமே, அதிகபட்சம் ஐ.நா.வின் தடைகளைத் தாண்டிய எந்த நடவடிக்கையாகவும் அமையவில்லை.
இத்தனை தடைகளையும் தாண்டி வடகொரியா இன்னமும் அமெரிக்காவுக்கு எதிராக போர் முழக்கம் எழுப்புகிறது. அச்சுறுத்தல்களை விடுக்கிறது.
வடகொரியாவின் இந்த எச்சரிக்கைகளை அடுத்து, அமெரிக்கா தனது யு.எஸ்.எஸ் கார்ல்வின்சன் என்ற பாரிய விமானந்தாங்கிக் கப்பலை கொரிய கடற்பரப்புக்கு அனுப்பியிருக்கிறது. தென்கொரியாவில் ‘தாட்’ ஏவுகணை தடுப்பு நிலைகளை அமைத்து வருகிறது.
அமெரிக்காவுக்கு துணையாக ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகள் தமது போர்க்கப்பல்களை அனுப்புகின்றன. மொத்தத்தில், கொரிய குடநாடு போர்ப்பதற்றத்தில் மூழ்கியிருக்கிறது.
வடகொரியா- அமெரிக்கா இடையே தோன்றியுள்ள இந்தப் போர்ப் பதற்றம் மூன்றாவது உலகப் போராக வெடிக்குமா என்று ஊடகங்கள் மக்களை மிரட்டத் தொடங்கி விட்டன.
கொரியக் குடாநாட்டில் போர் ஒன்று வெடிக்குமானால் அதன் தாக்கத்தை இலங்கையும் எதிர்கொள்ளும் நிலை ஏற்படுமா என்பதே இப்போது உள்ள கேள்வி.
அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையில் காணப்படுகின்ற நெருக்கத்தினால் தான் இந்தக் கேள்வி இப்போது எழுகிறது.
வடகொரியாவின் மிரட்டலை அமெரிக்கா தனக்கான அச்சுறுத்தலாக மாத்திரம் வெளிப்படுத்தவில்லை. அதற்கு அப்பால் இந்தோ-ஆசிய-பசுபிக் பிராந்தியத்துக்கான அச்சுறுத்தலாகவே வெளிப்படுத்த முயன்றிருக்கிறது அமெரிக்கா.
அது மாத்திரமன்றி, இந்தோ – ஆசிய – பசுபிக் பிராந்தியத்தில் தனது நெருங்கிய கூட்டாளிகளாக அமெரிக்கா அடையாளப்படுத்தியிருக்கின்ற நாடுகளில் இலங்கையும் ஒன்று என்பது பலருக்குத் தெரியாத செய்தி.
கடந்த ஏப்ரல் 26ஆம் திகதி அமெரிக்க பாராளுமன்றத்தில், ஆயுதப்படை சேவைகள் குழுவின் முன்னால், அமெரிக்காவின் பசுபிக் கட்டளைப் பீடத் தள பதி அட்மிரல் ஹரி பி ஹரிஸ், ‘இந்தோ- ஆசிய- பசுபிக் பிராந்தியத்தில் பாதுகாப்புச் சவால்கள்’ என்ற தொனிப்பொருளில் உரையாற்றியிருந்தார்.
இதன் போது தான் அவர், அமெரிக் காவுக்கும் அதன் இந்தோ -ஆசிய -பசுபிக் பிராந்தியத்தில் உள்ள கூட்டாளிகளுக்கும் வடகொரியா இன்னமும் பாரிய உடனடி அச்சுறுத்தலாக விளங்குகிறது என்று கூறியிருந்தார்.
“வடகொரியா மற்றும் ஐஎஸ் தீவிரவாதம் உள்ளிட்ட அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்கு பிராந்திய சக்திகளான இந்தியா, இந்தோனேசியா, மலேசியா, நியூசிலாந்து, சிங்கப்பூர், இலங்கை, வியட்னாம், போன்ற பிராந்திய சக்திகளுடன் அமெரிக்காவின் ஒத்துழைப்பு முன்னேற்றமடைந்துள்ளது.
இந்த ஒத்துழைப்புகளின் மூலம், விதிமுறைகளை அடிப்படையாகக் கொண்ட பாதுகாப்பு ஒழுங்கை வலுப்படுத்துவதுடன், பிராந்தியத்தில் அமைதியையும் செழிப்பையும் ஏற்படுத்த முடியும்” என்றும் அவர் கூறியிருந்தார்.
அட்மிரல் ஹரிசின் இந்தக் கருத்தின் மூலம், இந்தோ- ஆசிய- பசுபிக் பிராந்தியத்தில் அமெரிக்காவின் முதன்மைக் கூட்டாளி நாடுகளில் ஒன்றாக இலங்கை அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறது. இது ஒரு முக்கியமான விடயம்.
இலங்கைக்கும் , அமெரிக்காவுக்கும் இடையில், 2007ஆம் ஆண்டு மார்ச் மாதம் செய்து கொள்ளப்பட்ட கையகப்படுத்தல் மற்றும் குறுக்குச் சேவைகள் உடன்பாடு கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்து விட்டது.
இந்த உடன்பாட்டைப் புதுப்பித்துக் கொள்வதற்கு அமெரிக்கா விருப்பம் வெளியிட்டிருந்தது. ஆனால் இன்னமும் இந்த உடன்பாடு கையெழுத்திடப்படவில்லை.
இது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சு பேச்சுக்களை நடத்தி வருவதாக அரசாங்கத்தினால் கூறப்பட்ட போதிலும், இன்னமும் அதுபற்றிய இறுதி முடிவுகள் எடுக்கப்படவில்லை.
இருந்தாலும், இந்தோ- ஆசிய- பசுபிக் பிராந்தியத்தில் வடகொரியா உள்ளிட்ட சக்திகளின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்காக இலங்கை உள்ளிட்ட பிராந்திய சக்திகளுடன் ஒத்துழைப்பை அமெரிக்கா கொண்டுள்ளது என்று அட்மிரல் ஹரிஸ் கூறியிருப்பது கவனிக்கத்தக்கது.
அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையில் ஆகக்கூடிய பாதுகாப்பு ஒத்துழைப்புகளை பரிமாறிக் கொள்வதற்கான உடன்பாடு என்றால், அது கையகப்படுத்தல் மற்றும் குறுக்குச் சேவைகள் உடன்பாடு தான்.
அந்த உடன்பாடு தற்போது நடைமுறையில் இல்லாத நிலையில், முன்னேற்றகரமான ஒரு பாதுகாப்பு ஒத்துழைப்பு இலங்கையுடன் இருப்பதாக அட்மிரல் ஹரிஸ் கூறியிருப்பது கவனிப்புக்குரிய விடயமாக உள்ளது.
இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் இரகசிய பாதுகாப்பு உடன்பாடு ஏதும் செய்து கொள்ளப்பட்டிருக்கிறதா என்ற சந்தேகத்தை இது ஏற்படுத்துகிறது.
அதேவேளை, கையகப்படுத்தல் மற்றும் குறுக்குச் சேவைகள் உடன்பாடு மீண்டும் புதுப்பித்துக் கொள்ளப்பட்டால், அமெரிக்கா தனது இராணுவத் தேவைகளுக்காக இலங்கையின் தளங்களைப் பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்புகள் உள்ளன.
அமெரிக்க போர்க்கப்பல்கள் இந்தியப் பெருங்கடல் வழியாக பயணம் மேற்கொள்ளும் போது, தங்கிச் செல்வது மற்றும் ஏனைய தேவைகளுக்காக இலங்கையின் துறைமுகங்கள், விமான நிலையங்களை பயன்படுத்திக் கொள்ளக் கூடும்.
அத்தகையதொரு சந்தர்ப்பத்தில், வடகொரியா அல்லது அதனுடன் இணைந்து போர் ஒன்றில் பங்கேற்கக் கூடிய நாடுகளுக்கு இலங்கையின் தரை அல்லது கடற்பரப்பும் கூட இலக்கு வைக்கப்பட வேண்டிய தெரிவுகளாக அமையலாம்.
இலங்கைக்கும் வடகொரியாவுக்கும் சில இரகசிய உறவுகள் காணப்பட்டன. தற்போதைய அரசாங்கத்தின் காலத்திலும் அந்த உறவுகள் நீடித்ததாக ஐ.நா. விசாரணை அறிக்கை ஒன்றில் அம்பலத்துக்கு வந்திருந்தது,
ஐ.நா ..பாதுகாப்புச் சபையில் கடந்த பெப்ரவரி 27ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கை ஒன்றின் 103 ஆவது பந்தியில், வடகொரியாவுக்கும் இலங்கைக்கு உள்ள உறவுகள் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டிருந்தது.
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தனவை 2015 நவம்பரில் வடகொரிய இராஜதந்திரி ஒருவர் சந்தித்தமை தொடர்பாக அந்த அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.
அங்கோலாவைச் சேர்ந்த பிரதிநிதி ஒருவர், வடகொரிய இராஜதந்திரியான கிம் ஹையோக் சான், அங்கோலாவில் உள்ள மற்றொரு இராஜதந்திரியான ஜொன் சோல் யங் ஆகிய மூவரும், 2014 ஆம் ஆண்டுக்கும், 2016ஆம் ஆண்டுக்கும் இடையில் மூன்று தடவைகள் இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டிருக்கின்றனர். கப்பல் கட்டும் திட்டங்கள் தொடர்பாக பேச்சு நடத்தவே இவர்கள் கொழும்பு வந்திருந்தனர்.
கப்பல் கட்டும் நிபுணர்கள் என்ற போர்வையில் இவர்கள், இலங்கையின் கடற்படை கப்பல் கட்டும் தளத்தில், கடற்படைக்கான ரோந்துப் படகுகளைக் கட்டுவது தொடர்பாக 2015 நவம்பர் 5ஆம் திகதி பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருடன் பேச்சு நடத்தியிருந்தனர்.
இதுகுறித்து இலங்கையிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு இன்னமும் பதில் கிடைக்கவில்லை என்று ஐ.நா. நிபுணர் குழு அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.
வடகொரியா எதற்காக இலங்கையில் கடற்படைக் கப்பல்களைக் கட்டுவதற்கு முனைந்தது என்பது கேள்விக்குரிய விடயம்.
இரகசியமாக இலங்கைக்குள் தனது செயற்பாட்டை விரிவுபடுத்த வடகொரியாவும் முயற்சிகளை முன்னெடுத்திருக்கிறது என்பது இந்த அறிக்கையின் ஊடாக வெளிப்பட்டிருக்கிறது.
இதன் மூலம் வடகொரியாவும் இலங்கை விடயத்தில் ஆர்வம் கொண்டிருக்கிறது என்பது உறுதியாகியிருக்கிறது. இது மாத்திரமன்றி, இன்னொரு சம்பவமும் அண்மையில் நடந்திருக்கிறது.
கடந்த மார்ச் மாதம் இரண்டாம் வாரத்தில், வடகொரியாவைச் சேர்ந்த நான்கு பேருக்கு இலங்கை அரசாங்கம் வீசா வழங்க மறுத்திருந்தது. இலங்கை- வடகொரிய நட்புறவுச் சங்கத்தினால், கட்டுநாயக்கவில் மார்ச் 17ஆம் திகதி நடத்தப்பட்ட கருத்தரங்கு ஒன்றில் பங்கேற்பதற்கு அவர்கள் இலங்கை வரவிருந்தனர்.
நான்கு வடகொரியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டுப் பிரதிநிதிகளை இந்தச் சங்கம் அழைத்திருந்தது. ஆனால், தென்கொரியாவுடனான உறவுகளை பாதித்து விடும் என்று கூறி வடகொரியர்களுக்கு வீசா வழங்க அரசாங்கம் மறுத்து விட்டது.
இந்தக் கருத்தரங்கை நடத்தியவர்களுக்கும் கூட்டு எதிரணிக்கும் தொடர்புகள் இருப்பதாக தெரியவந்துள்ளது என்று கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று கூறியிருந்தது.
வடகொரியர்களுக்கு வீசா வழங்குமாறு கூட்டு எதிரணியினர் வெளிவிவகார அமைச்சுடன் தொடர்பு கொண்டு கேட்டிருந்தனர். ஆனால், அதற்கு வெளிவிவகார அமைச்சு மறுத்து விட்டது.
வடகொரிய நட்புறவுச் சங்கத்தின் அந்தக் கருத்தரங்கு நடந்த போது தென்கொரிய வெளிவிவகார அமைச்சர் யுன் பியங் சே இலங்கையில் பயணம் மேற்கொண்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர் அமெரிக்காவின் அரவணைப்புக்குள் வந்திருக்கும் இலங்கையை வடகொரியாவும் கண்காணித்து வருகிறது என்பது உறுதியாக தெரிகிறது.
இப்படியானதொரு சூழலில் கொரிய குடாநாட்டில் தோன்றி வரும் போர்ப்பதற்றத்தின் தாக்கத்தை, இலங்கை எவ்வாறு எதிர்கொள்ளாமல் இருக்க முடியும்?
-சுபத்திரா-