1980-கள் எம்.ஜி.ஆர் இரண்டாவது முறையாக முதல் அமைச்சர் பொறுப்பை ஏற்றிருந்தார். அந்த நேரம், ஜெயலலிதாவை எம்.ஜி.ஆர் ஒதுக்கி வைத்திருந்தார்.
கட்சிக்காரர்கள் யாரும் அவருடன் தொடர்பு கொள்ளக்கூடாது என்று கட்டளையிட்டு இருந்தார். அந்தக் கட்டளை கட்சிக்காரர்களுக்கானது மட்டுமே.
தமிழ் திரை உலகில் முடிசூடா மன்னனாகவும், முதலமைச்சராகவும் இருந்த எம்.ஜி.ஆரின் அந்தக் கட்டளையை சினிமா உலகமும் பின்பற்றத் தொடங்கியது.
அதனால், ஜெயலலிதாவுக்கு சினிமா வாய்ப்புகள் குறைந்தன. இதனால், சினிமா, எம்.ஜி.ஆர் என்ற இரண்டு விஷயங்களை மட்டுமே, தனக்கான ஆதார மையமாக வைத்திருந்த ஜெயலலிதாவின் உலகம் சுருங்கியது.
ஆனால், அவர் முடங்கிவிடவில்லை. நாடகங்கள் போட்டார். நடித்துக் கொண்டிருந்தார். அதை யாரும் தடுக்கவில்லை. ஆனாலும், ஜெயலலிதாவின் வாழ்க்கையில் மிக மிக சிரமமான காலகட்டமாகவே அது இருந்தது.அது கட்சியின் சீனியர்கள் சிலருக்கு ஜெயலலிதா மீது ஒருவித இரக்கத்தை ஏற்படுத்தி இருந்தது.
அந்த நேரம் மதுரையில் உலகத் தமிழ் மாநாடு நடத்த, முதலமைச்சர் எம்.ஜி.ஆர் திட்டமிட்டார். மாநாட்டின் சிறப்பு நிகழ்ச்சிகளாக நிறைய நாடகங்களும் இடம்பெற்றன.
‘காவிரி தந்த கலைச் செல்வி’ என்ற நாடகத்தை நடத்தும் வாய்ப்பை ஜெயலலிதாவுக்குக் கொடுக்கலாம் என எம்.ஜி.ஆரின் நம்பிக்கையைப் பெற்ற சீனியர்கள் பரிந்துரைத்தனர்.
பெரும் தயக்கத்துக்குப் பிறகு, எம்.ஜி.ஆர் ஒத்துக் கொண்டார். எம்.ஜி.ஆரின் சம்மதத்தால், ஜெயலலிதாவும் உற்சாகமானார். மதுரையில் நடைபெற்ற நாடகத்தை ஜெயலலிதா சிறப்பாக நடத்தியதைப் பார்த்த எம்.ஜி.ஆருக்கு, ஜெயலலிதா மீது இருந்த கோபம் தணிந்தது.
அ.தி.மு.க-வில் ஜெயலலிதா!
சசிகலா
சினிமா வாழ்க்கையில் தன்னோடு இணைந்து பலகாலம், பயணித்த ஜெயலலிதாவுக்கு கட்சியிலும் ஏதாவது பொறுப்பு கொடுக்கலாம் என்று நினைக்க ஆரம்பித்தார்.
அப்போது, எம்.ஜி.ஆர்-ன் உடல்நிலையும் கொஞ்சம் சரியில்லாமல் இருந்தது. ஒத்துக் கொண்ட அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் எம்.ஜி.ஆரால் போக முடியாத சூழல் அடிக்கடி ஏற்பட்டது.
அந்த நிகழ்ச்சிகளுக்கு வேறு சீனியர் தலைவர்களை அனுப்பினால், அதற்கான வரவேற்பு மிக மிக குறைவாகவே இருந்ததையும் எம்.ஜி.ஆர் உணர்ந்திருந்தார்.
இந்த வெற்றிடத்தை ஜெயலலிதாவை வைத்து நிரப்பலாம் என்று எம்.ஜி.ஆர் கணக்குப்போட்டார்.
கட்சியின் மற்ற சீனியர்களை தான் ஒத்துக் கொண்ட நிகழ்ச்சிகளுக்கு அனுப்பும்போது கூடும் கூட்டத்தைவிட ஜெயலலிதாவை அனுப்பினால் அதற்கு கூட்டம் அதிகம் கூடும் என்று அவர் கணித்தார். அது பொய்க்கவில்லை.
இதையடுத்துத்தான், கடலூர் மஞ்சக்குப்பத்தில் 1982-ம் ஆண்டு, நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், ஜெயலலிதாவை கொள்கை பரப்புச் செயலாளர் என்று எம்.ஜி.ஆர் அறிவித்தார்.
அதோடு சத்துணவுத் திட்ட உயர் மட்டக்குழு உறுப்பினர் பதவியையும் ஜெயலலிதாவுக்கு அளித்தார். ஏனென்றால், சத்துணவுத் திட்டத்தை, தனது செல்லப் பிள்ளையாகவே எம்.ஜி.ஆர். கருதினார்.
அதோடு, நாடாளுமன்ற மக்களவை எம்.பி. பதவியையும் ஜெயலலிதாவுக்கு எம்.ஜி.ஆர் வழங்கினார். எம்.ஜி.ஆரின் செல்லப்பிள்ளையான, சத்துணவுத் திட்டத்தை பிரபலப்படுத்தும் நிகழ்ச்சியை ஜெயலலிதா முதன்முதலில் கடலூரில் தொடங்கினார். அப்போது, கடலூர் மாவட்ட கலெக்டராக இருந்தவர், பின்னாளில் ஆசிட் வீச்சுக்கு ஆளான சந்திரலேகா.
ஜெயலலிதா-சந்திரலேகா-நடராஜன்
கடலூரில் ஜெயலலிதா நடத்திய சத்துணவுத் திட்ட நிகழ்ச்சி வெகுவாக கவனம் ஈர்த்தது. அதற்கு காரணம், அப்போது, கலெக்டர் சந்திரலேகாவிடம் மக்கள் தொடர்பு அதிகாரியாக இருந்த நடராஜன்.
அவர், முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் திட்டத்தை ஜெயலலிதா தொடங்கி வைத்ததை சிறப்பாக செய்தியாக்கினார். தமிழகம் முழுவதும் திறமையாகக் கொண்டு சேர்த்திருந்தார். ஜெயலலிதா-சந்திரலேகா-நடராஜன் காம்பினேஷன் செய்த வேலை, எம்.ஜி.ஆரை மகிழ்ச்சி அடைய வைத்தது.
ஜெயலலிதா நாடாளுமன்ற மக்களவை எம்.பி-யாகவும் இருந்த ஜெயலலிதாவுக்கு சந்திரலேகாவை வைத்தே, அரசாங்க விதிகள் மற்றும் நாடாளுமன்ற செயல்பாடுகள் பற்றி சொல்லிக் கொடுக்க வைக்கலாம் என்று நினைத்த எம்.ஜி.ஆர் அவரை சென்னைக்கு மாற்றிக் கொண்டுவந்தார்.
அப்போது, சந்திரலேகாவிடம் பி.ஆர்.ஓ-வாக இருந்த நடராஜனும் சென்னைக்கு ・டிரான்ஸ்பர்・வாங்கிக் கொண்டார். நடராஜன், தன் மனைவி சசிகலாவுடன், ஆழ்வார்பேட்டையில் குடியேறினார்.
அவர் பி.ஆர்.ஓ என்பதால், புகைப்படக்காரர்கள், வீடியோ எடுப்பவர்களின் தொடர்பு அவருக்கு இருந்தது. புகைப்படம் எடுப்பது பழைய மெத்தட்.
ஆனால், வீடியோ எடுப்பது புதிய மெத்தட். இது போட்டியில்லாத தொழிலும் கூட. அதனால், ஒரு வீடியோ கடை ஒன்றை ஆரம்பித்தால், அரசு சம்பளத்தைவிட கூடுதல் வருமானம் கிடைக்கும் என்று கணக்குப்போட்டார்.
வீடியோ என்றால் என்ன, வீடியோ கேசட் என்றால் எப்படி இருக்கும்? என்று தமிழகத்துக்கே தெரியாத காலத்தில், நடராஜன், ஜெமினி பார்சன் காம்ப்ளக்ஸில் வீடியோ கடை ஆரம்பித்தார்.
‘வினோத் வீடியோ விஷன்’ என்று அந்தக் கடைக்குப் பெயர்.
அது சசிகலாவின் அண்ணன் வினோதகனின் நியாபமாக இருக்கலாம் என்கின்றனர். சிலர், அந்தக் கடைக்குப் பெயர சசி வீடியோ விஷன்・தான் என்கிறார்கள்.
அந்தக் கடையைப் பார்த்துக் கொள்ளும் பொறுப்பு சசிகலாவுடையது. அரசு நிகழ்ச்சிகளை வீடியோ எடுக்கும் வாய்ப்புக்களை நடராஜன், தனது தொடர்புகள் மூலம் பெற்று, அவற்றை தனக்குச் சொந்தமான வீடியோ கடை மூலமே செய்து கொடுத்தார்.
சசிகலா வருகை ஆரம்பம்!
ஜெயலலிதாவுக்குப் பின்னால் சசிகலா…
அதேநேரத்தில் சந்திரலோகவும் ஜெயலலிதாவுக்கு, நாடாளுமன்றம் தொடர்பான ஆவணங்கள் விதிமுறைகளைப் பற்றிக் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார்.
அப்போது, ‘நீங்கள் ஓய்வு நேரத்தை எப்படிக் கழிப்பீர்கள்? நீங்கள் போனபிறகு, எனக்குப் பொழுதே போவதில்லை・என்று ஜெயலலிதா சந்திரலேகாவிடம் குறைபட்டுள்ளார்.
நான் வீடியோ கேசட்டுகளில் படம் பார்ப்பேன். என்னுடைய துறையில் பி.ஆர்.ஓ-வாக இருந்த ஒருவர் வீடியோ கடையும் வைத்துள்ளார். அவரிடம்தான் நான் கேசட் வாங்குவேன்.
உங்களுக்கும் தரச் சொல்கிறேன்என்று சொன்ன சந்திரலேகா, உடனடியாக நடராஜன் மூலம் அதற்கான ஏற்பாடுகளையும் செய்தார். நடராஜன், சசிகலாவிடம் ஆங்கிலப் படங்களின் வீடியோ கேசட்களை கொடுத்து போயஸ் கார்டனுக்கு அனுப்பினார். சசிகலாவின் போயஸ்கார்டன் பயணம் 1982-ம் ஆண்டு இப்படித்தான் தொடங்கியது.
போயஸ்கார்டனுக்குள் புதிதாக ஒரு பெண் நுழைந்துள்ளார் என்பதை அறிந்த எம்.ஜி.ஆர் என்ன செய்தார்?
சசிகலா, ஜெயலலிதாவின் உடன்பிறவா சகோதரியான கதை! – (பாகம்-1)