2001 ம் ஆண்டு புலிகளின் பெரு வெற்றிக்கு பின்னர் அதற்குள் எழுந்த அதிகார போட்டிகள் காரணமாக புலிகளின் தலைமையோடு அருகாகவும், நெருக்கமாகவும் தலைவரை புகழ்ந்து கொண்டு இருந்தவர்களின் கைகளிற்கு அதிகாரங்கள் கை மாறத் தொடங்கியிருந்தது.
இந்தப் புகழ்ச்சியானது பிரபாகரன் என்பவர் தலைவர் என்பதைத் தாண்டி தேசியத் தலைவர் சூரியத்தேவன், முருகன் என்று கட்டவுட்டுகளாகவும் கவிதைகளாகவும் பாடல்களாகவும் வெளிவரத் தொடங்கியியுமிருந்தது.
அதே நேரம் போராட்டத்தையும் மக்கள் விடுதலையை மட்டுமே குறிக்கோளாக கொண்டு தலைமைக்கு துதி பாடாமல் தூரமாக இருந்து இயங்கிக் கொண்டிருந்தவர்கள் பலரும் ஓரம் கட்டப் பட்டனர்.
அதன்போது கே.பியும் ஓரம் கட்டப் பட்டதோடு பரப்புரை. வர்த்தகம் .நிதி.வெளிநாட்டு அரசுகள் அமைப்புக்களுடனான தொர்புகள். ஆயுதபேரம்.வாங்குதல், வழங்கல் .ஆவணங்களை தயாரித்தல்.மருத்துவம் மற்றும் மருந்து தொழில் நுட்ப உபகரண பிவு என பல குழுக்களாக இயங்கிய வெளிநாட்டு பிரிவுகள் அனைத்தையும் ஒன்றிணைத்து அதனை அனைத்துலக செயலகத்தின் கீழ் கொண்டு வந்து ஒரு நிறுவனமயமாக்கல் முறையாக்கி புலிகளின் முதுகெலும்பு என சொல்லக் கூடிய வானளாவிய அதிகாரங்கள் அனைத்தையும்.கஸ்ரோ பொறுப்பெடுத்திருந்தார். (
தொடர்ந்து…
புலிகள் உலகாளவிய ரீதியில் போதைப் பொருள் கடத்தியதாக பாகம் ஒன்றில் கூறியிருந்தீர்கள். எந்தெந்த நாடுகள் ஊடாக போதைப் பொருள் கடத்தல் நடை பெற்றது என விளக்க முடியுமா?
ஆசியாவில் ஏன் உலகிலேயே மலிவாகவும், இலகுவாகவும் போதைப் பொருட்கள் கிடைக்குமிடமாக ஆப்கானிஸ்தான் விளங்குகிறது. இங்கு ஏற்றுமதிக்கெனவே போதைப் பொருட்கனை பயிரிடுகிறார்கள். அமெரிக்க சோவியத் யூனியன் பனிக்கால யுத்தத்தின்போது ரஸ்ய இராணுவத்தினரிற்குள் பரப்புவதற்காக அமெரிக்க உளவமைப்பே இந்த போதைப் பொருள் உற்பத்தியினை ஆப்கானிஸ்தானில் ஊக்குவித்திருந்தனர்.
ஆப்கானிஸ்தான் மற்றும் ஆப்கான் எல்லையாக உள்ள பாகிஸ்தான் கிராமங்களில் உற்பத்தியாகும் போதைப் பொருட்களிற்கும். இமய மலைச் சாரலில் இயற்கையாக விளையும் கஞ்சாவிற்கும் மேலை நாடுகளில் ஏகப் பட்ட கிராக்கி இருக்கிறது. அவற்றை தரை மற்றும் கடல் வழியாக மும்பைக்கு கொண்டு வரப் பட்டு அவை சரக்கு கப்பல்கள் மூலம் மேற்கு நாடுகளிற்கு பயணமாகும்.
எந்த வருடத்தில் இருந்து புலிகள் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டனர்?
எண்பதுகளின் ஆரம்பத்திலேயே சிறிய அளவில் புளொட் அமைப்பும் புலிகளும் போதைப்பொருள் கடத்தலை தொடங்கியிருந்தாலும் 84 ம் ஆண்டு புலிகள் உறுப்பினர்கள் சிலர் மும்பையை மையமாக வைத்து கடத்தலை தொடங்கிய பின்னரே பரவலடைந்தது. சாதாரண கப்பல்கள் மூலமாக போதைப்பொருள் கடத்தலானது தொடங்கப்பட்டது. பின்னர் அவர்களே சொந்தமாக கப்பல்களை வாங்கி உலகளாவிய ரீதியில் செய்யத் தொடங்கியிருந்தனர்.
புலிகளின் இந்த போதைப் பொருள் வலையமைப்பை பொறுப்பாக நின்று வழி நடத்தியவர் யார்?
இது பல குழுக்களாக இயங்கியது. அதில் தெற்கு புன்னாலைக் கட்டுவனை சேர்ந்த சிறி என்பவர் முக்கியமானவராக நேபாளத்தில் இருந்து இயங்கினார். ஒரு தடைவை இந்திய எல்லைப் படையினருடன் நடந்த மோதல் ஒன்றில் கொல்லபட்டுவிட்டார் .
போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டு இறந்த புலிகளுக்கும் மாவீரர் பட்டம் வழங்கப்பட்டதா?
யாரிற்கும் மாவீரர் பட்டம் வழங்கப்பட்டிருக்கவில்லை. அது மட்டுமல்ல ஆயுதக் கப்பல்கள் தாக்கப்பட்டு அதில் இறந்துபோனவர்கள், விபத்தில் மற்றும் கடுமையாக நோய்வாய் பட்டு இயற்கை மரணம் அடைந்த எவருமே முறையாகப் பெயர்கள் அறிவிக்கப்பட்டு மாவீரர்களாக கெளரவிக்கப்படவில்லை.
விதிவிலக்காக கிட்டு சென்ற கப்பலில் இறந்தவர்களும் இறுதி சமாதான காலத்தின் போது தாக்கியழிக்கப்பட்ட ஒன்பது கப்பல்களில் இரண்டு கப்பல்களில் பயணித்தவர்களின் பெயர் விபரங்கள் மட்டுமே அறிவிக்கப்பட்டு அவர்கள் மாவீரர்களாக கெளரவிக்கபட்டிருந்தனர்.
இப்படியாக எத்தனை பேர் இறந்து போயிருப்பார்கள் என நினைக்கிறீர்கள்?
நூற்றியிருபதிற்கும் அதிகமானவர்கள் இறந்திருப்பார்கள் என நினைக்கிறேன். புலிகளின் தலைமை அவர்களை மாவீரர்களாக அறிவித்திருக்காவிட்டாலும். புலிகளின் ஆயுதத் தேவைகளிற்காக போதைப் பொருள் வியாபாரத்திலும் ஆயுதக் கடத்தல்களிலும் ஈடுபடும்போது கடலில் இறந்து போனவர்களிற்காக அவர்களோடு சேர்ந்து இயங்கிய நண்பர்கள் சிலர் நிக்கோபர் தீவுக்கூட்டத்தில் மனிதர்களற்ற ஒரு சிறு தீவில் அவர்களிற்கு ஒரு நினைவிடம் எழுப்பி அதில் அவர்களது பெயர்களை பதிவு செய்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட புலிகளுக்கும், புலிகளின் தலைமைக்கும் இடையான உறவு எப்படி இருந்தது?
புலிகளின் தலைமைக்கு ஆயுதம் வந்து சேர்ந்தால் சரி என்கிற நிலைமை. அது எப்படி வந்தது எங்கிருந்து வந்தது என்ன வழியாக வருகின்றது என்று ஆராய்கின்ற அவசியம் எல்லாம் இருக்கவில்லை. அவரைப்பொறுத்தவரை ஆயுதங்கள் வந்து கொண்டிருக்கவேண்டும் சண்டை நடந்துகொண்டிருக்கவேண்டும். அவரை நான் அடிக்கடி துப்பாக்கி மட்டும் தூக்கத் தெரிந்த அப்பாவி அண்ணன் என்று சொல்வதுண்டு.
வெளிநாடுகளில் புலிகள் மீதான தடை ஏற்பட்டதற்கு, புலியெதிர்ப்பாளர்கள் மற்றும் மாற்றுக் கருத்தாளர்களின் பங்கும் பெரியளவில் இருந்ததாக கருதுகிறீர்களா?
இல்லை. புலிகள் மீதான தடைக்கு இந்த மாற்றுக் கருத்தாளர்களின் பங்கு என்பது ஒரு சதவீதம் இருக்குமா என்பது கூட சந்தேகமேயாகும். இந்த மாற்றுக் கருத்தாளர்கள் அல்லது புலியெதிர்ப்பாளர்கள் எனப்படுவோர், புலிகளிடம் ஜனநாயகம் இல்லை, அவர்கள் வன்முறையாளர்கள், படுகொலை செய்கிறார்கள் என வெளிநாடுகளில் கூட்டம் போட்டு பேசியும்.
பக்கம் பக்கமாக எழுதித் தள்ளியும், மனித உரிமை அமைப்புக்களிற்கு புகார் அனுப்பிக்கொண்டும் இருந்தார்கள்.
ஆனால், இவற்றால் புலிகள் மீதான தடை என்பது சாத்தியமாகவில்லை. ஏனெனில் இவர்களிற்கு புலிகள் அமைப்பினுள் என்ன நடக்கின்றது என்பது சரியாக தெரிந்திருக்கவில்லை.
அதே நேரம் அனேகமான ஜரோப்பிய நாடுகள் புலிகள் மீது மென்மை போக்கை கடைப்பிடித்திருந்ததோடு பல தனிப்பட்ட அரச மட்ட தொடர்புகளும் புலிகள் அமைப்பு சுதந்திரமாக இயங்கவும் வழி வகுத்திருந்தது. ஆனால் இந்த மென்போக்கை புலிகள் அமைப்பும் அவர்களது வெளிநாட்டு பொறுப்பாளர்களும் சரியாக பயன் படுத்திக் கொள்ளவில்லை.
வெளிநாடுகளில் பொறுப்பாக இருந்தவர்களிற்கிடையேயான போட்டிகளும், பொறாமைகளாலும் அவர்களே உள்ளே நடக்கும் இரகசியங்களை வெளிநாட்டு காவல் துறையினரிடம் போட்டுக் கொடுத்தார்கள்.
தாங்களே குட்டி நீதிமன்றம் போல் செயற்பட்டு வெளிநாடுகளில் தமிழர் பிரச்சனைகளிற்கு தீர்ப்பு கூறி தண்டனை கொடுத்தார்கள். இதனால் பாதிக்கப்பட்டவன் காவல்துறையில் போய் புகார் கொடுக்கத் தொடங்கினான்.
இவை எல்லாவற்றையும் விட பெரிய எதிர்ப்பு புலிகளிற்கு எதிராக சர்வதேசத்தில் உருவாகக் காரணம் புலிகளின் கரும்புலி தாக்குதலில் இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொல்லப் பட்டதும், தொடர்ந்தும் மக்களால் தேர்தெடுக்கப் பட்ட சிங்கள, தமிழ் ஆயுதம் தாங்காத அரசியல்வாதிகள் கொல்லப் பட்டதுடன், தொடர்ந்தும் பேச்சு வார்த்தைகளை புலிகள் தரப்பே குழப்பியதுமே மிகப் பாரதூரமான குற்றங்களாக சர்வதேசம் பார்த்தது.
அது மட்டுமல்ல இறுதியாக நடந்த பேச்சு வார்த்தைகளின்போது இந்த தடைகளை நீக்கி சுதந்திரமாக பேச்சு வார்த்தையில் புலிகள் ஈடுபடுவதற்கு சர்வதேசமும் இந்தியாவும் இரண்டு விடயங்ளை நிறைவேற்றுமாறு புலிகளிடம் கேட்டிருந்தார்கள்.
அவையிரண்டையும் புலிகளின் தலைமை நிராகரித்து விட்டிருந்தது மட்டுமல்லாமல் காலையில் பேச்சுவார்த்தைகளின் போது மேசையில் புலிகள் தரப்பு தாங்கள் சமாதானத்திலும் பேச்சு வார்த்தையிலும் உறுதியாக இருக்கிறோம் வன்முறையில் எமக்கு விருப்பம் இல்லையென்று சர்வதேசத்திடம் கூறிவிட்டு, மாலையில் புலம்பெயர் தமிழர்களின் கூட்டங்களில் தமிழ்ச்செல்வன் உரையாற்றும் போது இனி வரப் போவதுதான் இறுதி யுத்தம்.
யுத்தம் மூலமே தீர்வு எனவே தமிழர்கள் அனைவரும் தாராளமாக நிதியை வழங்குங்கள் எமக்கு பேச்சு வார்த்தைகளில் நம்பிக்கையில்லையென்று உரையாற்றுவார்.
அப்போது கை தட்டல் வானைப் பிளக்கும். இப்படிப் பேசவேண்டாம் வெளிநாட்டு புலனாய்வு பிரிவுகள் இவற்றை பதிவு செய்யும் என்று பல தமிழ் பத்திரிகையாளர்கள் தமிழ்ச்செல்வனிடம் எடுத்தும் சொல்லியிருந்தார்கள். அதற்கு அவரின் பதில் ‘அவங்கள் விசரங்கள் கிடக்கட்டும்’ என்பதாகவே இருந்தது. இதனால்தான் சர்வதேசம் புலிகளிடம் கடுமையாக நடந்து கொள்ளவேண்டி வந்தது.
சர்வதேசமும் இந்தியாவும் புலிகள் மீதான தடையை எடுப்பதற்கு இரண்டு விடயங்களை முன் வைத்தாக கூறினீர்களே, அவை என்ன?
பேச்சு வார்த்தை காலத்தில் புலிகளோடு அதிகார பூர்வமாக சர்வதேச தரப்பில் ஒரு குழு பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருந்த போது இன்னொரு குழுவினர் புலிகளின் இன்னொரு வெளிநாட்டு பிரிவினருடன் இரகசியமாக நோர்வேயில் பேச்சு வார்த்தை ஒன்றையும் நடத்திக் கொண்டிருந்தனர்.
அவர்கள் புலிகளிடம் இரண்டு கோரிக்கைகளை முன் வைத்திருந்தனர். முதலாவது கரும்புலிகள் அமைப்பை முற்று முழுதாக கலைத்து விடவேண்டும்.
இரண்டாவது வான் புலிகள் அமைப்பை கட்டியெழுப்பும் முயற்சிகளை தற்காலிகமாக கைவிடவேண்டும் என்பதே. இங்கு இன்னொன்றை கவனிக்க வேண்டும் உலக விடுதலைப் போராட்டக் குழுக்களிலேயே முதன் முதலாக வான் படையை கட்டியெழுப்பியவர்கள் புலிகள்அமைப்பு மட்டுமே.
அதனால் வான் புலிகள் என்பதனை மிக பலம் பொருந்திய ஒன்றாகவே அதீத கற்பனைகளை கொண்டதாக அன்றைய காலத்தில் சர்வதேசமும் இந்தியாவும் நம்பியிருந்தனர் என்பதும் உண்மை. இந்த கோரிக்கைகளை புலிகளின் தலைமை மறுத்திருந்தது.
பேச்சு வார்த்தை காலங்களில் மனிதவுரிமை அமைப்புக்களின் அழுத்தங்களிற்கு பணிந்து குழந்தைப்போராளிகள் பலரை பத்திகையாளர்களின் முன்னால் விடுவித்ததைப் போல கரும்புலிகள் அமைப்பை கலைக்காவிட்டாலும், ஒரு ஒப்புக்காகவேனும் பத்திரிகையாளர்கள் மற்றும் சர்வதேச கண்காணிப்புக் குழுவினரின் முன்னால் ஒரு தொகை கரும்புலிகளை சாதாரண படையில் இணைத்து கரும்புலிகளை கலைத்து விட்டதாக புலிகளின் தலைமை அறிக்கையொன்றை விடச் சொல்லி பலர் வைத்த கோரிக்கையை புலிகளின் தலைமை கடுமையாக மறுத்து விட்டிருந்தது.
அடுத்ததாக உலக நாடுகளில் இருந்து புலிகளின் மீதான தடையை நீக்குவதற்கு முதலாவதாக இந்தியா தனது தடையை நீக்கவேண்டும்.அதற்கு ராஜீவ்காந்தியின் கொலை ஒரு பெரும் தடையாகவும், இந்தியாவிற்கு பெரிய கெளரவ பிரச்சனையாகவும் இருந்தது.
புலிகள் மீதான இந்தியாவின் தடையை நீக்குவதற்கு பொட்டம்மானை தம்மிடம் ஒப்படைத்து விடுமாறு இந்திய அரசு சார்பில் கோரிக்கை வைத்தார்கள். பொட்டம்மானை ஒப்படைத்ததன் பின்னர் தலைவர் பிரபாகரனை இந்தியத் தரப்பு கேட்கக் கூடாது என்று எழுத்து மூலம் தரவேண்டும் என்றும் பேச்சு வார்ததைகளில் ஈடுபட்டவர்கள் கேட்டுக்கொண்டிருந்தனர்.
இந்த விபரங்களும் புலிகளின் தலைமைக்கு அறிவிக்கப் பட்டது. இந்தக் கோரிக்கையும் சுவரில் எறிந்த பந்தைப் போல புலிகளின் தலைமையால் நிராகரிக்கப் பட்டு திரும்பி வந்ததும் பெரும் பின்னடைவாக அமையக் காரணமாக அமைந்தது.
விடுதலைப் புலிகளின் முக்கிய தூண்களில் ஒருவரான பொட்டம்மானை, இந்திய அரசு சரணடையச் சொல்வதை எந்த விதத்தில் விடுதலைப் புலிகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என கருதுகிறீர்கள்?
ஈழத் தமிழ் இனத்தின் விடுதலைக்காக ஆயிரக் கணக்கான இளம் சந்ததியினர் மாவீரர்களாகியும் தங்கள் பெயர்களே வெளி உலகத்திற்கு தெரியாமல் பல கரும்புலிகள் உயிரைக் கொடுத்தும் உள்ளனர்.
அதே இனத்தின் விடுதலைக்காக அந்த மக்களின் எதிர்காலத்திற்காக பல தடைகள் நீங்கி அதற்காக இன்னாரு பாதை திறப்பதற்காகவும் பொட்டம்மானை இந்தியாவிடம் விசாரணைக்காக ஒப்படைத்திருப்பதில் தவறேதும் இல்லை என நினைக்கிறேன்.
அதே நேரம் பொட்டம்மானை இந்தியா உடனே தூக்கில் போட முடியாது. எனவே பல பிரபலமான வக்கீல்களை வைத்து வாதடியிருக்கலாம். எனவே மீண்டும் மீண்டும் பொட்டம்மானை இந்தியாவிடம் விசாரணைக்காக ஒப்படைக்குமாறு வைத்த கோரிக்கை புலிகளின் தலைமையால் நிராகரிக்கப் பட்டிருந்தது இவையும் பேச்சு வார்தைகள் இறுக்கமடைய காரணமாக அமைந்தது.
புலிகளிற்கு ஆயுத வழங்கலில் முக்கியமாக ஈடு பட்டிருந்த உங்கள் நண்பரான கே.பி.(குமரன் பத்மநாதன்) என்பவர் உண்மையில் கைது செய்யப் பட்டாரா? அல்லது சரணடைந்திருந்தாரா?
கே.பி எனது நண்பர் என்பதைவிட நாங்கள் ஒரு அமைப்பில் இயங்கினோம் என்பதுதான் சரியானது. அதே நேரம் அவர் கைது செய்யப்பட்டதை செய்திகளில் அறிந்திருந்தேன். பின்னர் அவருடன் பேசக் கிடைத்த சந்தர்ப்பத்தின் போதும் தான் கைது செய்யப் பட்டதாகவே என்னிடம் கூறியிருந்தார்.
கே.பி விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து ஏன் நீக்கப்பட்டார்?
நான் ஏற்கனவே குறிப்பிட்டது போல் 2001 ம் ஆண்டு புலிகளின் பெரு வெற்றிக்கு பின்னர் அதற்குள் எழுந்த அதிகார போட்டிகள் காரணமாக புலிகளின் தலைமையோடு அருகாகவும், நெருக்கமாகவும் தலைவரை புகழ்ந்து கொண்டு இருந்தவர்களின் கைகளிற்கு அதிகாரங்கள் கை மாறத் தொடங்கியிருந்தது.
இந்தப் புகழ்ச்சியானது பிரபாகரன் என்பவர் தலைவர் என்பதைத் தாண்டி தேசியத் தலைவர் சூரியத்தேவன், முருகன் என்று கட்டவுட்டுகளாகவும் கவிதைகளாகவும் பாடல்களாகவும் வெளிவரத் தொடங்கியியுமிருந்தது. அதே நேரம் போராட்டத்தையும் மக்கள் விடுதலையை மட்டுமே குறிக்கோளாக கொண்டு தலைமைக்கு துதி பாடாமல் தூரமாக இருந்து இயங்கிக் கொண்டிருந்தவர்கள் பலரும் ஓரம் கட்டப் பட்டனர்.
அதன்போது கே.பியும் ஓரம் கட்டப் பட்டதோடு பரப்புரை. வர்த்தகம், நிதி, வெளிநாட்டு அரசுகள் அமைப்புக்களுடனான தொர்புகள். ஆயுதபேரம், வாங்குதல், வழங்கல், ஆவணங்களை தயாரித்தல், மருத்துவம் மற்றும் மருந்து தொழில் நுட்ப உபகரண பிவு என பல குழுக்களாக இயங்கிய வெளிநாட்டு பிரிவுகள் அனைத்தையும் ஒன்றிணைத்து அதனை அனைத்துலக செயலகத்தின் கீழ் கொண்டு வந்து ஒரு நிறுவனமயமாக்கல் முறையாக்கி புலிகளின் முதுகெலும்பு என சொல்லக் கூடிய வானளாவிய அதிகாரங்கள் அனைத்தையும்.கஸ்ரோ பொறுப்பெடுத்திருந்தார்.
கே.பி நீக்கப்பட்டதற்கு சொல்லப்பட்ட காரணம் என்ன?
சொல்லப்பட்ட ஒரேயொரு காரணம், அதை நான் சப்பைக் காரணம் என்றே சொல்வேன். ஆயுதங்கள் வாங்கியதில் சரியாக கணக்கு காட்டவில்லையென்பதுதான். புலிகளின் மாதாந்த வருமானமே எவ்வளவு என்று தலைமைக்கே சரியாக தெரியாத போது கணக்கு சரியில்லையென்று கஸ்ரோ தலைமையிடம் வைத்த குற்றச்சாட்டும் அதனை தலைமை ஏற்றுக் கொண்டதும் நகைச்சுவையானது.
கே.பி கொம்பனியின் நீக்கம் நடைபெறாமல் போயிருந்தால் விடுதலைப் புலிகளின் போராட்டத்தின் முடிவு எப்படி இருந்திருக்கும்?
கே.பி கொம்பனி புலிகளின் தலைமையால் நீக்கப் படாது போயிருந்தால் புலிகள் நிலங்களை இழந்து பலவீனமடைந்திருந்தாலும், புலிகளிற்கு ஆயுதங்கள் தொடர்ந்தும் கிடைத்தபடியே இருந்திருக்கும்யுத்தம் நீண்டுகொண்டேயிருந்திருக்கும். ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம் புலிகளின் தலைமை கூண்டோடு அழிந்து போகாமல் காப்பாற்றப் பட்டிருக்கும்.
கே.பியை தொடர்ந்து வெளிநாட்டு நிருவாகப் பொறுப்புக்கு தலைமையேற்ற காஸ்ட்ரோவின் செயற் பாடுகளை எப்படிப் பார்க்கிறீர்கள்?
ஒரு நாளின் 24 மணி நேரத்தில், சில நேரங்களில் 20 மணிநேரங்கள் விழித்திருந்து இயங்க வேண்டியதுதான் புலிகளின் வெளிநாட்டு பிரிவு. ஏனென்றால் புலிகளின் வெளிநாட்டு பிரிவு அவ்வளவு முக்கித்துவம் வாய்ந்தது.
ஆனால் ஒரு நாளைக்கு வெறும் அரை மணிநேரம் மட்டுமே எழுந்து உட்காரக் கூடிய கஸ்ரோவிடம் அனைத்துலக செயலக பொறுப்பு போய் சேர்ந்ததும், அவரின் கீழான அனைத்து பொறுப்பக்களும் புதியவர்களிடமும் புலிகள் அமைப்பால் வெளிநாடுகளிற்கு அனுப்பி கல்வி பயின்றவர்களிடமும் ஒப்படைக்கப் பட்டது.
கணணித் தொழில் நுட்ப அறிவும், ஆங்கில அறிவும் இருந்தால் ஆயுதங்களை வாங்கி விடலாமென புதியவர்கள் நினைத்தார்கள். நவீன ஏவுகணைகள் வாங்குவதற்காக புதிய ஆயுத முகவர்களை தேடிப் போனார்கள்.
ஒரு காலத்தில் போலி மனிதர் என பழைய கட்டமைப்பினர் ஒதுக்கி வைத்திருந்த தமிழகத்தை சேர்ந்த ஒரு பாதிரியாரையும் மீண்டும் தங்களுடன் இணைத்தார்கள்.
அவரும் பல ஆயுத முகவர்களை புதியவர்களிற்கு அறிமுகப் படுத்தினார். கஸ்ரோ தலைமையிலான புதியவர்கள் ஆயுத முகவர்கள் என நம்பி பேரங்கள் நடத்திய அனைவருமே வெளிநாட்டு உளவமைப்புளின் ஆட்களாக இருந்தனர்.
அவர்களால் இறுதியில் பணத்தையும் இழந்ததோடு, ஆயுதங்களை கொண்டு போய் சேர்க்க முடியவில்லை. எல்லாவற்றிக்கும் மேலாக புலிகள் தரப்பில் ஆயுத பேரத்தில் ஈடுபட்ட அனைவரும் கைதாகி சிறைகளில் வாடுகிறார்கள்.
தொடரும்…
அருளினியன்-
”றோ’ தான் புலிகளை அழித்து முடித்ததா? என்கிறீர்களா? “சாத்திரி” பேசுகிறேன் (பாகம்-1)