கை, கால்களைக் கட்டிய மனைவி; கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய ஆண் நண்பர்!- உயிருக்குப் போராடும் கணவர்
ஆண் நண்பருடன் இணைந்து தன் கணவரைக் கொடூரமாகக் கொலை செய்ய முயன்ற மனைவி கைது செய்யப்பட்டுள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் பல்கர் பகுதியைச் சேர்ந்தவர் பவிஷியா புர்ஹகோஹைன். 38 வயதான இவர் குயின்ஷியா என்ற 28 வயது பெண்ணைக் கடந்த 2014-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.
பவிஷியா கால் சென்டரில் வேலை செய்து வந்துள்ளார். குயின்ஷியா இல்லத்தரசியாக இருந்துவந்துள்ளார். இந்தத் தம்பதிக்கு 4 வயதில் இரட்டைக் குழந்தைகள் உள்ளனர்.
தற்போது வசாய் பகுதியில் வாழ்ந்துவரும் இவர்கள் இதற்கு முன்னதாக நைகோன் என்ற பகுதியில் வசித்துவந்துள்ளனர்.
அங்கு இருக்கும்போது குயின்ஷியாவுக்கு தன் பக்கத்து வீட்டுக்காரரான சட்விர் நாயர் (24) என்பவருடன் நட்பு ஏற்பட்டுள்ளது.
குயின்ஷியா வேறு பகுதிக்குச் சென்றதால் சட்விரைப் பார்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தான் இருக்கும் வசாய் அடுக்குமாடிக் குடியிருப்பிலேயே ஒரு வீட்டில் தன் நண்பரையும் அழைத்துவந்து தங்கவைத்துள்ளார்.
இவர்களின் விவகாரம் கணவர் பவிஷியாவுக்குத் தெரியவர சில முறை மனைவியைக் கண்டித்துள்ளார்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் கணவன் – மனைவி இடையே பெரிய பிரச்னை வெடித்துள்ளது.
குயின்ஷியாவை பயங்கரமாகத் திட்டிவிட்டு பவிஷியா தூங்கச் சென்றுவிட்டார். அந்த நேரத்தில் தன் ஆண் நண்பரை வீட்டுக்கு அழைத்துள்ளார் குயின்ஷியா.
இருவரும் சேர்ந்துகொண்டு தூங்கிக்கொண்டிருந்த பவிஷியாவின் கை, கால்களை அவர் அணிந்திருந்த உடையைக் கொண்டே கட்டியுள்ளனர்.
பின்னர் பவிஷியாவின் மார்பு மற்றும் தோள்பட்டை பகுதியில் கொதிக்கும் எண்ணெயை ஊற்றியுள்ளனர்.
தொடர்ந்து அவரது கண்களில் மிளகாய்ப் பொடி தூவி, சுத்தியலால் கால்களை உடைத்துள்ளனர். `தன்னை யாராவது காப்பாற்ற வர வேண்டும்’ என்ற நோக்கத்தில் கையில் கிடைத்த பாத்திரங்களையும் பொருள்களையும் வீட்டிலிருந்து வெளியில் தூக்கிப்போட்டுள்ளார் பவிஷியா.
சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.
“அருகிலிருந்தவர்கள்தான் எங்களுக்குத் தகவல் தெரிவித்தனர். விவரம் அறிந்து நாங்கள் வந்து பார்க்கும்போது பவிஷியா வலியில் துடித்துக்கொண்டிருந்தார்.
அவரின் உடல் தீக்காயங்களுடன் இருந்தது. இந்தக் கொடூரங்கள் அனைத்தையும் செய்த குயின்ஷியாவும் அவரின் நண்பரும், மிகவும் இயல்பாக சோஃபாவில் அமர்ந்திருந்தனர்.
அருகில் குழந்தைகள் நின்று அழுதுகொண்டிருந்தனர். நாங்கள் குழந்தைகளை மீட்டு அருகிலிருந்தவர்களிடம் கொடுத்து, உறவினர்களிடம் ஒப்படைக்கக் கூறினோம்.
தொடர்ந்து பவிஷியாவை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தோம். தற்போது அவரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.
பவிஷியாவின் நிலைக்குக் காரணமான இருவரையும் கைதுசெய்து சட்டப்பிரிவு 307 (கொலை முயற்சி) கீழ் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினோம்.
இருவரையும் வரும் ஆகஸ்ட் 20 வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்” என மணிக்பூர் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.