நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கொடநாட்டில் மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான 1600 ஏக்கர் எஸ்டேட் உள்ளது. இந்த எஸ்டேட்டுக்கு சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் இயக்குனர்களாக உள்ளனர்.
கடந்த 1992-ம் ஆண்டில் வாங்கப்பட்ட இந்த எஸ்டேட்டில் தேயிலை, கொய் மலர் ஆகியவை உற்பத்தி செய்யப்படுகிறது. ஜெயலலிதா முதல் அமைச்சராக இருந்த போது ஓய்வுக்காக கொடநாடு வந்து செல்வார்.
அப்போது இங்கிருந்து கொண்டே அரசு நிர்வாகத்தை வழிநடத்தி வந்தார். இதற்காக கொடநாடு எஸ்டேட்டில் 5 ஆயிரம் சதுரடியில் பிரமாண்ட சொகுசு பங்களா உள்ளது.
இதில் 93 அறைகள் உள்ளன. மேலும் ஹெலிபேடு வசதி, படகு குழாம் மினி தியேட்டர், கண்ணாடி மாளிகை, எஸ்டேட்டை சுற்றி பார்க்க பேட்டரி கார் வசதியும் உள்ளன.
சொகுசு பங்களாவில் வீடியோ கொன்பரன்சிங் மூலம் திட்டப்பணிகளை தொடங்கி வைக்கும் வகையில் வசதி செய்யப்பட்டு இருந்தது. ஜெயலலிதா வரும் நேரங்களில் பலத்த பொலிஸ் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டிருக்கும். அவர் இல்லாத நேரங்களில் தனியார் நிறுவனம் மூலம் பாதுகாப்பு அளிக்கப்படுவது வழக்கம்.
இந்த நிலையில் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு கடந்த பெப்ரவரி 14-ந் திகதி உச்ச நீதிமன்றத்தில் சொத்து குவிப்பு வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது.
இதில் சசிகலாவுக்கு 4 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இதற்கிடையே சொத்து குவிப்பு வழக்கில் கொடநாடு எஸ்டேட்டும் இணைக்கப்பட்டதால் அபராத தொகைக்காக பறிமுதல் செய்யப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது.
கொடநாடு எஸ்டேட்டில் தற்போது வடமாநிலத்தைச் சேர்ந்த காவலாளிகள் மட்டுமே சிலர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் 2 வாகனங்களில் 10-க்கும் மேற்பட்ட மர்மக் கும்பல் எஸ்டேட்டுக்கு வந்தனர்.
அங்கு எஸ்டேட் காவலாளிகளாக நேபாளத்தைச் சேர்ந்த ஹோம்கர், வடமாநிலத்தைச் சேர்ந்த கிஷன் பகதூர் ஆகியோர் பாதுகாப்பு பணியில் இருந்தனர். திடீரென வாகனங்களில் கும்பல் அதிரடியாக வந்ததால் காவலாளி ஹோம்கர், “நீங்கர் யார்? எங்கிருந்து வருகிறீர்கள்?” என்று கேட்டுள்ளார்.
ஆனால் மர்ம கும்பல் ஆவேசத்துடன் காவலாளி ஹோம்கரை சரமாரியாக தாக்கினர். இதில் நிலைகுலைந்து அவர் கீழே விழுந்தார். உடனே அவரது கை- கால்களை கும்பல் கட்டி போட்டனர்.
அப்போது மற்றொரு காவலாளி கிஷன் பகதூர் , கும்பலை தடுத்தார். இதில் கும்பல் தாக்கியதில் காவலாளி ஹோம்கர் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
மற்றொரு காவலாளி கிஷன் பகதூர் படுகாயத்துடன் உயிருக்கு போராடினார். பின்னர் சிறிதுநேரம் கழித்து வாகனத்தில் வந்த கும்பல் தப்பி சென்று விட்டனர்.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் நீலகிரி மாவட்ட பொலிசார் கொடநாடு எஸ்டேட்டுக்கு விரைந்தனர். அங்கு கொலையுண்ட காவலாளி ஹோம்கர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோத்தகிரி அரச ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் காயம் அடைந்த கிஷன் பகதூரை மீட்டு சிகிச்சைக்காக அரச ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கொடநாடு எஸ்டேட் காவலாளியை மர்ம கும்பல் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நள்ளிரவில் கொடநாடு பங்களாவுக்கு வந்த கும்பல் அ.தி.மு.க. கட்சியின் முக்கிய ஆவணங்கள் மற்றும் ஜெயலலிதாவுக்கு சொந்தமான சொத்து பத்திரங்கள், ஆவணங்களையும் எடுத்து சென்றிருக்கலாம் என பொலிசார் சந்தேகித்து வருகிறார்கள்.
கொடநாடு எஸ்டேட் காவலாளி படுகொலை சம்பவம் அரசியல் வட்டாரத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜெவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் காவலாளி கொலை செய்யப்பட்டதில் திருட வந்த கும்பல் தான் ஈடுபட்டிருக்க வாய்ப்பு உள்ளதாக எஸ்.பி. முரளி ரம்பா கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் சம்பவ இடத்தில் ஆய்வு நடத்தினார்.
சம்பவ இடத்தை பார்வையிட்ட பின்னர் எஸ்.பி. முரளி ரம்பா, நிருபர்களிடம் பேசுகையில்; இந்த சம்பவம் தொடர்பாக விசாரிக்க டிஎஸ்.பிக்கள் கொண்ட 5 படை அமைக்கப்பட்டுள்ளது.
காவலாளி அறையில் கண்ணாடி உடைந்துள்ளது. இங்கு இருந்த கண்காணிப்பு கெமரா ஆய்வு செய்யப்படுகிறது. எஸ்டேட் உள்ளே யாரும் நுழையவில்லை. மாவட்டம் முழுவதும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
வாகன சோதனை நடத்தப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார். சசிகலா சிறை, தினகரனிடம் விசாரணை என சசி தரப்புக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ள சூழலில் இந்த கொலை அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த எஸ்டேட் தற்போது தினகரனில் கட்டுப்பாட்டில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
மலையில் மர்ம கோட்டை எப்படி உருவானது?
இந்த கொடநாடு பங்களா எப்படி வாங்கப்பட்டது? நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் இருந்து சுமார் 12 கி.மீ. தூரத்தில் உள்ளது கொடநாடு எஸ்டேட். குளிர்ச்சியும் பசுமையும் குலாவும் ரம்மியமான இந்தப் பகுதியில்தான் ஜெயலலிதா தனக்கான பங்களாவை உருவாக்கினார்.
ஜெயலலிதா தமிழ்நாட்டின் முதல்வராக முதன் முறையாக பொறுப்பேற்ற பின்னர் 1992 ஆண்டு 17 கோடி ரூபாய்க்கு கொடநாடு எஸ்டேட் வாங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
விரிவாக்கம்
இது வாங்கப்படவில்லை என்றும் அபகரிக்கப்பட்டது என்றும் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் ஜெயலலிதா மீது அப்போது எழுந்தன. முதலில் 900 ஏக்கர் மட்டுமே வாங்கப்பட்ட நிலையில், அடுத்தடுத்து அருகில் உள்ள வேறு தோட்டங்கள் வாங்கப்பட்டு இதனுடன் இணைக்கப்பட்டு சுமார் 3,000 ஏக்கர் இடமாக விரிவாக்கப்பட்டது.
சொகுசு பங்களா
இதன் பின்னர் 5 ஆயிரம் சதுர அடியில் பிரம்மாண்டமான சொகுசு பங்களா ஜெயலலிதா ஓய்வெடுப்பதற்காக மட்டுமே கட்டப்பட்டது. ஜெயலலிதா சென்னையில் இருந்து கொடநாட்டிற்கு ஹெலிெகாப்டரில் செல்வதற்கு ஏற்ற வகையில் ஹெலிபேட் அங்கே அமைக்கப்பட்டது.
மர்ம பங்களா
இந்த எஸ்டேட்டில் கட்டப்பட்டுள்ள ஜெயலலிதா தங்கி ஓய்வெடுக்கும் பிரமாண்ட பங்களாவை யாரும் பார்த்துவிடாத படி கட்டப்பட்டுள்ளது. வெளியில் இருந்து யாரும் இந்த பங்களாவை பார்த்துவிட முடியாது. அந்த அளவிற்கு இந்த பங்களா வடிவமைக்கப்பட்டுள்ளது.
படகு குழாம்
ஜெயலலிதா மகிழ்ச்சியாக இருப்பதற்காக படகு குழாம் கொடநாடு எஸ்டேட்டில் அமைக்கப்பட்டது. தேயிலைத் தொழிற்சாலை மற்றும் தோட்டத்தை ஜெயலலிதா சுற்றிப் பார்ப்பதற்காக பெட்டரி கார்கள் தயார் நிலையில் பங்களாவில் வைக்கப்பட்டிருந்தன. இந்த கார்கள் செல்வதற்காக சிறப்பு வீதிகளும் அங்கே அமைக்கப்பட்டிருந்தன.
கெடுபிடி
ஜெயலலிதா ஓய்வெடுப்பதற்காக செல்லும் இந்த எஸ்டேட்டில் அந்தப் பகுதியில் வாழும் ஏழை எளிய மக்கள் கடுமையான கெடுபிடிகளுக்கு ஆளாக்கப்பட்டனர். சாதாரணமாக சுற்றித் திரிந்த மக்கள் அந்த எஸ்டேட்டின் அருகில் செல்வதற்கு கூட அஞ்சி வாழ்ந்தனர்.
11 நுழைவு
வாயில் அனைத்து வசதிகளும் அடங்கிய கொடநாடு எஸ்டேட்டில் நுழைய மொத்தம் 11 நுழைவு வாயில்கள். இதில் எந்தப் பக்கம் யாரும் எளிதில் நுழைந்துவிட முடியாது. இந்த எஸ்டேட்டில் சுமார் 600 தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர் என்றால் அவர்கள் மட்டும் உரிய அனுமதி அட்டையுடன் உள்ளே பயந்து பயந்து சென்றுவந்தனர்.
யாருக்கு சொந்தம் ?
வி.கே. சசிகலா, இளவரசி, வி.என். சுதாகரன் ஆகியோர்கள்தான் மர்மம் மிகுந்த கொடாநாடு எஸ்டேட்டி இயக்குநர்கள். ஜெயலலிதாவுக்கு இதில் 10 சதவீத பங்குகள் மட்டுமே உள்ளன என்று கூறப்படுகிறது.
ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் இந்த கொடநாடு எஸ்டேட் பறிமுதல் செய்யப்படும் என்ற நிலை இருந்தது. ஆனால் அண்மைய உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பால் அது தப்பியது.