உலகெங்கும் கிளை பரப்பியிருக்கும் சரவண பவன் ஹோட்டல், தமிழகத்தின் அடையாளங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.
அதன் உரிமையாளர் ராஜகோபால் சுமார் 18 ஆண்டுகளுக்கு முந்தைய கொலை வழக்கில் சிக்கி ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளார். இது பலருக்கும் அதிர்ச்சியை அளித்தது.
வெளிநாடுகளில் கிளைகள் திறப்பின்போது ராஜகோபாலின் பெயர் செய்தியில் வந்தாலும், கொலை வழக்கில் தண்டனை பெற்றபோதுதான் அவர் ஊடக வெளிச்சத்தில் உலகெங்கும் காட்சியளித்தார்.
71 வயதாகும் அவர் எப்போதும் வெள்ளை வேட்டி, சட்டையுடன் நெற்றியில் சந்தனப் பொட்டுடன்தான் வலம் வருவார்.
தென் தமிழகத்தை சேர்ந்த வெங்காய வியாபாரியின் மகனான ராஜகோபால் 1981இ-ல் சென்னையில் மளிகைக் கடை ஒன்றை ஆரம்பித்தார்.
அது சென்னை மெட்ராஸ் என்று அழைக்கப்பட்ட காலம். அப்போதெல்லாம் பெரும்பாலானோர் உணவுக் கடைகளில் சாப்பிடுவதை வழக்கமாக கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் தனது முதல் உணவுக்கடை ஒன்றை ஆரம்பித்தார் ராஜகோபால்.
உணவுச் சுவையின் ரகசியத்தை அறிந்த அவர், தோசை, வடை, இட்லிகள் உள்ளிட்டவைகளை நல்ல சுவையுடன் வழங்கி பெயர் பெறத் தொடங்கினார்.
அந்தப் பெயர்தான் வெளிநாடுகளில் மட்டும் சுமார் 80 கிளைகளை நடத்தி வருவதற்கு முக்கிய காரணம்.
ஜோதிடர் ஒருவரின் பேச்சைக் கேட்டுதான் ராஜகோபாலின் போக்கு மாறியதாக கூறப்படுகிறது. தனது சென்னை கிளையில் பணி புரிந்து வந்த துணை மேலாளரின் மகள் ஜீவ ஜோதியை, மூன்றாவது மனைவியாக்கிக் கொள்ள வேண்டும் என்று ஜோதிடர் ஒருவர் ராஜகோபாலிடம் கூறியதாக தெரிகிறது.
இந்த பிரச்சினை 1990-களில் ஆரம்பித்தது. அப்போது ராஜகோபாலுக்கு 2 மனைவிகள் இருந்தனர். ராஜகோபாலை மணக்க ஜீவஜோதிக்கு மனம் இல்லை.
அதன் தொடர்ச்சியாக 1999இ-ல் சாந்தகுமார் என்பவரை ஜீவஜோதி மணம் முடித்துக் கொள்கிறார். அவர் விவகாரத்து பெற வேண்டும் என்று ராஜகோபால் தரப்பில் நெருக்கடி கொடுக்கப்பட்டதாக தெரிகிறது.
இதுதொடர்பாக சாந்தகுமார் – ஜீவஜோதி தம்பதியினர் காவல்துறையில் புகார் அளித்தனர்.
இந்த சம்பவம் நடந்த சில நாட்களில் சாந்தகுமார் கடத்தப்பட்டு கொல்லப்படுகிறார்.
பின்னாளில் சாந்த குமார் கொடைக்கானல் காட்டில் இருக்கும் பெருமாள் மலையில் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டார் என்பது தெரியவந்தது.
இதுதொடர்பாக சென்னை மேல் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் ராஜகோபாலுக்கு அயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
அதை எதிர்த்து அவர் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். இந்த வழக்கில் ராஜகோபாலுக்கு விதித்த ஆயுள் தண்டனையை உறுதி செய்து கடந்த மார்ச்சில் தீர்ப்பு வழங்கப்பட்டது.
“கடின உழைப்பு, வித்தியாசமான முயற்சியால் சமூகத்தில் முன்னுக்கு வர முடியும் என்பதற்கு ராஜகோபால் ஓர் உதாரணம்.
பெண்கள் விஷயத்தில் அவருக்கு இருந்த பலவீனமும், ஒருவரை கொலை செய்தாலும், தனது அதிகாரத்தின் மூலம் தண்டனையில் இருந்து தப்பிவிடலாம் என அவர் எண்ணியதும்தான் ராஜகோபாலின் வீழ்ச்சிக்கான காரணம்” என்கிறார் சென்னையை சேர்ந்த பத்திரிகையாளர் ஜி.சி. சேகர்.
உடல்நிலை காரணமாக தற்போது பிணையில் உள்ள அண்ணாச்சி ராஜகோபால் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 7) நீதிமன்றத்தில் சரணடைய உத்தரவிடப்பட்டுள்ளது.
அன்றையதினம் முதல் அவரது ஆயுள் தண்டனை ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நன்றி என்.டி டி.வி தமிழ்