கனடாவில் இரவு நேரத்தில் கடைக்குள் நுழைந்து கொள்ளையடிக்க முயன்ற நபர்களை கடைக்காரர் தனியாக மல்லுகட்டி பொலிசிடம் பிடித்து கொடுத்த சம்பவம் வீடியோவாக வெளியாகியுள்ளது.
ஆல்பர்ட்டா, கால்கரியில் உள்ள பல்பொருள் அங்காடியிலே இக்கொள்ளை முயற்சி சம்பவம் இடம்பெற்றுள்ளது. கடையிலிருந்த சிசிடிவியில் பதிவான காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.
சம்பவத்தின் போது நிசார் அகமது என்ற ஊழியர் கடையில் தனியாக கடைக்குள் இருந்துள்ளார். அப்போது, திடீரென இரண்டு பேர் ஆயுதங்களுடன் முகமுடி அணிந்து கடைக்குள் நுழைந்துள்ளனர்.
கொள்ளையர்களை கண்டு முதலில் அதிர்ச்சியடைந்த நிசார் அகமது, பின்னர், தைரியமாக கொள்ளையர்களுடன் மோதி ஒருவரின் முகமுடியை கிழித்துள்ளார்.
இறுதியில் கொள்ளையர்களிடமிருந்து தப்பி கடைக்கு வெளியே ஓடி வந்த நிசார், கடையின் கதவுகளை மூடி தடைகளை அமைத்துள்ளார்.பொருட்களை எடுத்துக்கொண்டு தப்பி முயன்ற கொள்ளையர்கள், தடைகளை தகர்க்க முயன்றுள்ளனர்.
பின்னர், கண்ணாடியை உடைத்து தப்ப முயல இறுதிவரை நிசார் அகமது கொள்ளையர்களிடம் போராடியுள்ளார்.இதை கண்ட சம்பவயிடத்திலிருந்த ஒருவர் பொலிசாருக்கு தகவல் அளித்து நிசாருடன் சேர்ந்து கொள்ளையர்களை பிடிக்க உதவியுள்ளார்.
சம்பவயிடத்திற்கு பொலிசார் விரைந்த நிலையில் நிசாரிடம் சிக்கிய கொள்ளையனை பொலிசார் கைது செய்துள்ளனர்.
இறுதியில், அவனுடன் முகமுடி அணிந்து கொள்ளையடிக்க வந்த பெண்ணையும் பொலிசார் கைது செய்துள்ளனர்.தனியாக கொள்ளையர்களிடம் போராடிய நிசார் அகமதை பொலிசார் உட்பட பலர் பாராட்டியுள்ளனர்