இந்தியாவில் கொள்ளையர்களை துணிவுடன் விரட்டியடித்த சண்முகவேல் – செந்தாமரை தம்பதிக்கு, அதீத துணிவுக்கான சிறப்பு விருது வழங்கப்பட்டது.
இந்தியாவில் திருநெல்வேலி மாவட்டம் கடையம் அருகேயுள்ள கல்யாணிபுரத்தைச் சேர்ந்தவர் சண்முகவேல் (78); இவருடைய மனைவி செந்தாமரை.
கடந்த 11ம் திகதி இரவு 9 மணிக்கு, வீட்டு முற்றத்தில் சண்முகவேல் அமர்ந்திருந்தார். அப்போது அங்கு வந்த முகமூடி அணிந்த நபர், சண்முகவேல் கழுத்தில் துண்டை போட்டு இறுக்கி, அவரை கொலைசெய்ய முயன்றார்.
சண்முகவேலின் அலறல் சத்தம்கேட்டு, வீட்டுக்குள் இருந்த செந்தாமரை ஓடிவந்து அந்த நபர் மீது செருப்பு, பிளாஸ்டிக் சேர் போன்றவைகளை தூக்கி வீசினார். அப்போது, மறைந்திருந்த இன்னொரு முகமூடி நபர் ஓடிவந்து தம்பதியை தாக்க முயன்றார்.
கொள்ளையன் பிடியில் இருந்து தப்பிய சண்முகவேலு, கொள்ளையர்களை நோக்கி சேர்களை தூக்கி வீசினார். இதையடுத்து அந்த கொள்ளையர்கள், சண்முகவேலுவை அரிவாளால் தாக்க முயற்சித்தனர்.
இருந்தாலும், தம்பதியினர் துணிச்சலாக, சளைக்காமல் எதிர்த்து போராடினர். சிக்கிக் கொள்வோம் என பயந்த கொள்ளையர்கள், அங்கிருந்து தப்பி ஓடினர்.
வீட்டில் பொருத்தப்பட்டிருந்த ‘சிசிடிவி’ கேமராவில் பதிவான இந்த காட்சிகள், சமூக வலைத்தளங்களில் பரவியது. இதையடுத்து, கொள்ளையரை எதிர்த்து வீரமுடன் போராடிய அந்த தம்பதிக்கு பாராட்டுகள் குவிந்தன.
இந்நிலையில், கொள்ளையர்களை விரட்டியடித்த தம்பதிக்கு வீர தீர விருது வழங்க, தமிழக அரசுக்கு நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா சதீஷ் பரிந்துரை செய்தார்.
இதையேற்ற அரசு, அந்த தம்பதிக்கு ‘அதீத துணிவுக்கான விருது’ வழங்கப்படும் என அறிவித்தது.
இதையடுத்து அம்பாசமுத்திரம் தாசில்தார் வெங்கடேஷ், அந்த தம்பதிகளை விமானம் மூலம் சென்னைக்கு அழைத்துச் சென்றார். அவர்கள், நேற்று (14ம் திகதி) மாலை தலைமைச் செயலரை சந்தித்தனர்.
இதையடுத்து, சென்னை கோட்டை கொத்தளத்தில் இன்று (15ம் திகதி) நடைபெற்ற சுதந்திர தின விழா நிகழ்ச்சியில், சண்முகவேல் – செந்தாமரை தம்பதிக்கு ரூபாய் 2 லட்சத்துக்கான காசோலை, தங்க பதக்கம், சான்றிதழ் ஆகியவற்றை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.