கொழும்பு – கொச்சிக்கடை ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வரர் தேவஸ்தான மகோற்சவ பெருவிழாவில் இரதோற்சவம் இன்று இடம்பெற்றது. கொழும்பு மாநகரின் புகழ்மிகு சிவாலயமான கொச்சிக்கடை ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வரர் தேவஸ்தான தேர்த் திருவிழாவின் கிரியைகள் இன்று அதிகாலை முதல் இடம்பெற்றன.
பூஜைகளை அடுத்து, சர்வலங்காரங்களுடன் பஞ்ச மூர்த்திகள் ஆலய உள்வீதி உலா இடம்பெற்று ஆலய வெளிவீதிக்கு எழுந்தருளினர்.
விநாயக பெருமான், சோமாஸ்கந்தர், சிவகாமி அம்பிகை, முருகப் பெருமான், சண்டேஸ்வரர் ஆகிய மூர்த்திகள் இரதங்களில் ஆரோகணிக்கப்பட்டு, தேர் பவனி ஆரம்பமானது.
மங்கள வாத்தியங்கள் முழங்க பக்தர்களின் அரோகரா கோஷத்துடன், தேர்த்திருவிழா சிறப்பாக இடம்பெற்றது.
பெருந்திரளான பக்தர்கள் இதன்போது தமது நேர்த்திக்கடன்களை நிறைவேற்றினர்.
பங்குனி உத்தர திருநாளான நாளை ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வரர் தேவஸ்தான மகோற்சவ பெருவிழாவில் தீர்த்தோற்சவம் நடைபெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.