சென்னை: கோச்சடையான் படத்துக்காக வாங்கிய ரூ.20 கோடி கடனுக்காக ரஜினி மனைவி லதாவின் நிலத்தை ஏலம் விட வங்கி முடிவு செய்துள்ளதாக பரபரப்பு எழுந்துள்ளது.
ரஜினி, தீபிகா படுகோன் நடித்த படம் ‘கோச்சடையான்‘. 3டி மோஷன் கேப்சர் முறையில் உருவான இப்படத்தை ரஜினியின் இளைய மகள் சவுந்தர்யா இயக்கினார்.
ஈராஸ் நிறுவனத்துடன் இணைந்து மீடியா ஒன் குளோபல் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்தது. இப்படத்தின் தயாரிப்பு செலவுக்காக மீடியா ஒன் நிறுவனம் எக்சிம் வங்கியிடம் ரூ.20 கோடி கடன் பெற்றது.
இதுபற்றி வங்கி வெளியிட்ட அறிவிப்பில்,‘மீடியா ஒன் குளோபல் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் கடன் கணக்கில் 2014 ஜூலை மாத நிலவரப்படி 22 கோடியே 21 லட்சத்து 85ஆயிரத்து 865 ரூபாய் வசூலாக வேண்டி உள்ளது. உரிய காலத்தில் இந்த தொகை வசூலாகவில்லை.
இதற்கு பிணையாக வைக்கப்பட்ட லதா ரஜினியின் பெயரில் சென்னை பல்லாவரம் அடுத்த திருமுடிவாக்கத்தில் உள்ள 2.13 ஏக்கர் சொத்தை வங்கியின் உடைமையாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பான சொத்தை வேறுயாரும் விற்பது, வாங்குவது தொடர்பான நடவடிக்கையை வங்கியின் கவனத்துக்கு வராமல் ஈடுபடுவது தடை செய்யப்படுகிறது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனால் சினிமா வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக மீடியா ஒன் குளோபல் நிறுவனம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘எக்சிம் வங்கியிடமிருந்து எங்கள் நிறுவனம் ரூ.20 கோடி கடன் வாங்கியது.
இதனை வங்கிக்கு நிறுவனம் திருப்பி செலுத்த தயாராக உள்ளது. வரும் 2015 மார்ச் மாதம் 31ம் தேதிக்குள் இந்த கடனை முழுவதுமாக கட்டி முடிப்பதற்கான ஏற்பாடுகளை நிறுவனம் செய்து வருகிறது.
இதுதொடர்பாக வங்கி அதிகாரிகளிடமும் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடனுக்கு உத்தரவாதம் அளித்த லதா ரஜினிகாந்த் உள்ளிட்டவர் மீது இதுபோன்ற செயலில் ஈடுபடுவது சரியல்ல என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.