கோத்தாபய ராஜபக்சவின் அமெரிக்க குடியுரிமை துறப்பு தொடர்பாக பதிலளிக்க முடியாது என்று அமெரிக்க தூதுவர் அலய்னா ரெப்லிட்ஸ் தெரிவித்துள்ளார்.
நேற்று கொழும்பில் உள்ள தனது இல்லத்தில் குறிப்பிட்ட சில ஊடகவியலாளர்களைச் சந்தித்துப் பேசியபோதே அவர் இவ்வாறு கூறினார்.
இந்தச் சந்திப்பின் போது, அமெரிக்க பதிவாளர் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள, குடியுரிமை துறந்தவர்களின் பட்டியலில், கோத்தாபய ராஜபக்சவின் பெயர் இடம்பெறாமை குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டன.
அதுகுறித்து கருத்து வெளியிட்ட அமெரிக்க தூதுவர்,
“குடியுரிமையை கைவிடுவது ஒரு நிர்வாக செயல்முறையாகும். குடியுரிமையைக் கைவிடுவதற்கு அதற்கான படிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
எனினும், எந்தவொரு தனிப்பட்ட நபரினதும், குடியுரிமை துறப்பு தொடர்பாகவும் கருத்து வெளியிட முடியாது, அமெரிக்க சட்டங்கள் அதனை தடுக்கின்றன.
எனினும், ஒருவரின் குடியுரிமை துறப்பு விடயத்தில், அமெரிக்க பதிவாளரின் பதிவுகள் சில மாதங்கள் பிந்தியதாக இருக்கலாம்” என்றும் அவர் கூறினார்.