உத்தரப் பிரதேச சட்டசபையில் ஜி.எஸ்.டி கூட்டத்தின் போது பெண் எம்.எல்.ஏ.க்கள் உள்பட பலர் குறட்டைவிட்டுத் தூங்கிய வீடியோ காட்சிகள் வலம் வந்து கொண்டிருக்கின்றன.
உத்தரபிரதேச சட்டசபைத் தேர்தலில் பா.ஜ., வெற்றி பெற்று, முதல்வராக யோகி ஆதித்யநாத்தின் ஆட்சி நடந்து வருகிறது.
பா.ஜ., ஆட்சி அமைந்த பின்னர் மே 15-ம் தேதி சட்டசபைக் கூட்டம் தொடங்கியது. முதல் கூட்டுக் கூட்டத்தில் கவர்னர் ராம்நாயக் உரையாற்றினார்.
சட்டசபை நிகழ்ச்சிகள் தூர்தர்ஷன் மூலம் நேரடியாக ஒளிபரப்பும் செய்யப்பட்டது. எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.
சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டதாகக் கூறி சட்டசபையில் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன. அப்போது கவர்னர் ராம்நாயக்கின் மீது காகிதப் பந்துகளும் வீசப்பட்டன.
ஜி.எஸ்.டி மசோதா ஏற்கெனவே பாராளுமன்றத்தில் தாக்கல் ஆகிவிட்டது. இப்போது மாநிலங்களில் நிறைவேற்றப்பட உள்ளது. ஏற்கெனவே மாநிலத்தில் ஜி.எஸ்.டி அமல்படுத்தப்படும் என யோகி ஆதித்யநாத் ஒப்புதல் அளித்துவிட்டார்.
மாநில சட்டசபையில் இன்று ஜி.எஸ்.டி கூட்டம் நடைபெற்றது. அப்போது எம்.எல்.ஏ.க்கள் பலர் குறட்டைவிட்டு தூங்கி உள்ளனர். இதுதொடர்பான வீடியோக்கள், புகைப்படங்கள் வெளியாகி சர்ச்சை ஏற்பட்டுள்ளது.