இன்று சர்வதேசப் பெண்கள் தினம். இதுவரை நுழையாத பல புதிய தொழில்களில், நவீன துறைகளில் பெண்கள் இன்று சாதனைகள் படைக்கின்றனர்.
இதெல்லாம் வெளிச்சத்துக்கும் வருகிறன்றன. ஆனால், ஆண்கள் மட்டுமே தடம் பதிக்கும் பாரம்பரியத் தொழில்களில், எளிய வாழ்வாதாரத் துறைகளில் பெண்கள் ஆங்காங்கே சாதித்துக்கொண்டும், உழைத்துக் கொண்டும்தான் இருக்கிறார்கள்.
ஊடக வெளிச்சத்தை, விளம்பரத்தின் பிரகாசத்தை இவை எட்டுவதில்லை. மீன்பிடித் தொழில் என்பது பெரிதும் ஆண்கள் மட்டுமே செய்யும் தொழில்.
அதிலும் கடலில் மீன் பிடிப்பவர்களாக பெண்களைப் பார்ப்பது அரிது. ஆனால், ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்ஹா அருகே உள்ள சடமுடையான்வலசை, பிச்சைமூப்பன்வலசை, ஆதஞ்சேரி, தோணித்துறை ஆகிய மீனவ கிராமங்களில் உள்ள மீனவப் பெண்கள் கடலில் தனியாக சென்று மீன் பிடித்து வருகின்றனர்.
தலைமுறை தலைமுறையாக அப்பகுதி மீனவப் பெண்கள் கடலில் தொழில் செய்து வருகின்றனர். பெண்கள் அதிகாலை ஐந்து மணியளவில் கடற்கரையில் இருந்து வல்லம் என அழைக்கப்படும், இஞ்சின் பொருத்தப்படாத படகு மூலம் கரையில் இருந்து ஒரு நாட்டிகல் மைல் (மூன்றரை கிலோமீட்டர்) தூரம் சென்று கடலில் பாசி வளர்ப்பது, மீன் பிடிப்பது, நண்டு பிடிப்பது, கனவாய் பிடிப்பது, இறால் பிடிப்பது போன்ற பல்வேறு கடல் தொழில்களை செய்து வருகின்றனர்.
பெண்கள் தனித் தனியாகவும், மூன்று நான்கு பெண்கள் சேர்ந்து ஒரு குழுவாகவும் மீன் பிடித்து வருகின்றனர். இப்படி குழுவாக பிடித்து வரும் மீன்களை சம பங்குகளாகப் பிரித்து கொள்வார்கள்.
பாரம்பரிய முறைப்படி மீன் பிடிப்பு
தூண்டில் இட்டு மீன்பிடித்தல், கரைவலை முறையில் மீன் பிடித்தல், கூண்டு வைத்து மீன் பிடித்தல்,நண்டு மற்றும் இறால் வலைகள் ஆகியனவற்றை பயன்படுத்தி தமிழர்களின் பாரம்பரிய முறைப்படி இவர்கள் மீன் பிடித்து வருகின்றனர்.
விசைப்படகு வைத்திருக்கும் மீனவர்கள் ஆழ்கடலுக்குச் சென்று இறால், கணவாய் போன்ற ஏற்றுமதி ரக மீன்களைப் பிடித்து வருகின்றனர்.
அவை வெளி மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ஆனால், பெண்கள் பிடித்து வரும் மீன்கள் உள்ளூர் மீன் தேவையை பூர்த்தி செய்கின்றன.
இது குறித்து பேசிய மீனவ பெண் ராஜலெட்சுமி “காலையில் ஆறு மணிக்கு குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு,மீன் பிடிக்க கடலுக்குள் செல்வோம். பின் பகல் இரண்டு, மூன்று மணிக்கு மேல் திரும்பி வருவோம்,
நண்டு வலை, மீன் வலை, கூண்டு ஆகிய அனைத்து வகை வலைகளையும் பயன்படுத்தி மீன் பிடிக்கிறோம்” என்று கூறினார்.
மீன்பிடித்து விட்டு கரை திரும்பிய மீனவர் புதுவருஷம் பிபிசி தமிழிடம் பேசுகையில் “நள்ளிரவு ஒரு மணிக்கு பெண்கள் அனைவரும் சேர்ந்து மீன் பிடிக்க கடலுக்குள் செல்வோம்.
பின் ஏழு மணிக்கு மீன் பிடித்து விட்டு கரைக்கு திரும்புவோம் ஆனால் கடல் பாசி எடுக்க சென்றால் காலையில் ஏழு மணிக்கு சென்று பகல் இரண்டு மணியளவில் கரை திரும்புவோம்.
இப்படித்தான் ஆண்டாண்டு காலமாக செய்கிறோம். இதுதான் எங்களது வாழ்வாதாரம். சில நேரங்களில் கடலில் திடீரென அலைகள் வேகமாக அடித்தால் படகு கவிழ்ந்து விடும் ஆனாலும் நாங்கள் தன்னம்பிக்கையை விடாமல் எதிர் நீச்சலிட்டு உயிர் தப்புவோம்.
கடலில் நீந்தி அருகில் உள்ள தீவுகளில் தஞ்சம் அடைவதும் உண்டு” என்று அவர் கூறினார்.
முனீஸ்வரி என்ற மீனவர் பேசுகையில் “எங்கள் வலைகளில் ஒரு நாளில் இரண்டு அல்லது மூன்று கிலோ மீன்கள் மட்டுமே கிடைக்கும்.
அதில் வீட்டுக்குத் தேவையான மீன்களை எடுத்து கொண்டு மீதத்தை மார்கெட்டில் விற்போம். நாங்கள் பிடிக்கும் மீன்களுக்கு கிலோ ஒன்றுக்கு 60 ரூபாய் முதல் 70 ரூபாய் வரை கிடைக்கும் என்று தெரிவித்தார்.