ஐநாவின் உண்மை நீதி இழப்பீடு மற்றும் மீள நிகழாமைக்கான விசேட அறிக்கையாளர் பாபியன் சல்வியோலி , பலவந்தமாக காணாமல் போகச்செய்யப்படுதல் குறித்த ஐநாவின் செயற்குழுவின் உறுப்பினர்கள், சட்டவிரோத படுகொலைகளிற்கான ஐநாவின் விசேட அறிக்கையாளர், சித்திரவதை குறித்த ஐநாவின் விசேட அறிக்கையாளர் உட்பட ஐநாவின் பல நிபுணர்கள் இணைந்து இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.
ஆகஸ்ட் 18 ம் திகதி இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இலங்கையின் புதிய இராணுவ தளபதியாக நியமித்துள்ளார் என தெரிவித்துள்ள ஐநா நிபுணர்கள் இலங்கையின் 25 வருட கால உள்நாட்டு யுத்தத்தின் போது அவர் பாரிய மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்படுவதால் ஐநா மனித உரிமை ஆணையாளர் உட்பட பலர் இந்த நியமனம் குறித்து கரிசனை வெளியிட்டுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறான குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் சவேந்திர சில்வாவை இலங்கை இராணுவத்தின் உயர் பதவிக்கு நியமித்தமை பாதிக்கப்பட்ட மக்களை அவமரியாதை செய்யும் நடவடிக்கை எனவும் ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் இது இலங்கையில் குற்றங்களில் ஈடுபட்டவர்கள் நீதியின் பிடியிலிருந்து விடுவிக்கப்படும் கலாச்சாரம் நீடிப்பதை காண்பிக்கின்றது என தெரிவித்துள்ள ஐநா நிபுணர்கள் குழுவினர் இது அரச ஸ்தாபனங்கள் மீதான சமூகத்தின் நம்பிக்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தி மேலும் ஸ்திரமின்மையை ஏற்படுத்தலாம் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
சவேந்திர சில்வா மீதான குற்றச்சாட்டுகள் குறித்து உரிய முறையில் விசாரணைகள் இடம்பெறவில்லை எனவும் ஐநா நிபுணர்கள் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
யுத்தத்தின் போது இடம் பெற்ற பாரதூரமான மனித உரிமை மீறல்கள் மற்றும் துஸ்பிரயோகங்களிற்கு பொறுப்புக்கூறுவதற்கு இலங்கை தானாக முன்வந்தது என தெரிவித்துள்ள ஐநா நிபுணர்கள் குழுவினர் இந்த குற்றங்கள் குறித்து விசாரணை செய்து நீதியை நிலைநாட்டுவதில் போதியளவு முன்னேற்றம் இல்லாமை குறித்து கடும் கவலை வெளியிட்டுள்ளனர்.
இலங்கை அரசாங்கத்தினால் இந்த குற்றச்சாட்டுகளையும் ஏனைய குற்றச்சாட்டுகளையும் விசாரணை செய்ய முடியாவிட்டால் விசாரணை செய்வதற்கு இலங்கை அரசாங்கம் விரும்பாவிட்டால் சர்வதேச சமூகம் இந்த குற்றங்களிற்கு பொறுப்புக்கூறப்படுவதை உறுதி செய்வதற்காக சர்வதேச நியாயாதிக்கம் உட்பட ஏனைய வழிமுறைகளை ஆராயவேண்டும் எனவும் ஐநா நிபுணர்கள் குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.