பாடசாலைக்கு சென்ற தமது பிள்ளை மாலை நேரம் பிணமாக வரும் போது ஒரு பெற்றோரின் மன நிலை எப்படி இருக்கும்? காலையில் எழுந்து பிள்ளைகளை தயார் செய்து பாடசாலைக்கு அனுப்பும் பெற்றோர் மீண்டும் அவர்கள் மாலை வீடு வந்து சேரும் வரை கல்வி போதிக்கும் ஆசிரியர்களிடம் பாதுகாப்பாக இருக்கின்றார்கள் என்ற நம்பிக்கையிலேயே தமது அன்றாட வேலைகளையும் தொழிலையும் செய்துகொண்டிருக்கின்றார்கள்.
எனினும் அண்மைக்காலமாக பாடசாலை மாணவ மாணவியர் தற்கொலை செய்துகொள்ளும் பல சம்பவங்களை அறிந்து அதன் பின்னணியை தேடும் போது பல பெற்றோரின் நிம்மதியும் சந்தோசமும் தொலைந்து போகக் கூடும்.
மாணவர்களை எவ்வாறு கையாள்வது, அவர்களிடம் எவ்வாறு ஒரு விடயத்தை தெளிவுபடுத்துவது, அவர்கள் தவறு செய்யும் போது எவ்வாறு திருத்துவது போன்ற பல கேள்விகளுக்கு விடையளிக்கத் தெரியாத பல ஆசிரியர்கள் இன்று பாடசாலைகளில் அனுமதி பெற்றுவிட்டதாலோ என்னவோ இவ்வாறான துரதிஷ்ட வசமான செய்திகளை அண்மைக் காலமாக கேட்க முடிகின்றது.
மாணவ, மாணவியரின் உளவியலை புரிந்துகொள்ளாத பல ஆசிரியர்கள் இன்னும் பாடசாலை ஒழுக்காற்றுக் குழுவிலும் ஏனைய முக்கிய பதவிகளிலும் இருப்பதால் இவ்வாறான துரதிஷ்டமான சம்பவங்கள் தொடர்வதற்கான வாய்ப்புக்கள் இல்லாமலில்லை.
அதிபர், ஆசிரியர்களின் திட்டுதல்கள், மற்றும் அச்சுறுத்தல்களால் மன உலைச்சலுக்கு உள்ளான பல மாணவ மாணவியர்கள் தமது உயிரை மாய்த்துக்கொண்ட பல சம்பவங்கள் பதிவாகியுள்ள நிலையில் இது தொடர்பில் கூடிய அவதானம் செலுத்தப்படவேண்டும்.
இந் நிலையில் தான் இந்தவாரம் ஆசிரியைகள் இருவர் கொடுத்ததாக கூறப்படும் தொடர் தொல்லையால் இந்த உலகுக்கு விடை கொடுத்த ஒரு மாணவியின் கதையை கேசரி வரைகின்றது.
சவ்மினி அபேக்ஷா சில்வா 15 வயதான மாணவி. சுற்றுலா நகரங்களில் ஒன்றான நீர்கொழும்பு, ஹப்புகொடை சென்.மேரிஸ் வித்தியாலயத்தின் 10ஆம் ஆண்டில் கல்வி கற்றுவந்த மாணவி . கடந்த 06 ஆம் திகதி அம்மாணவியை பாடசாலைக்கு அனுப்பி வைத்த பெற்றோர் அன்றைய தினம் மாலையாகும் போது அவரது மரண செய்தியையே கேட்க முடிந்தது.
இலக்கம் 4/5, பொடிகும்புர, ராகம என்ற முகவரியில் வசித்து வந்த அந்த மாணவி அவ்வளவு சீக்கிரம் உலகுக்கு விடை கொடுத்தது ஏன் என்ற கேள்வி அப்போது தான் எழுகின்றது.
எனினும் ராகம பொலிஸ் பிரிவின் வல்பொல ரயில் நிலையத்தை அண்டிய பகுதியில் ரயிலின் முன் பாய்ந்து சவ்மினி உயிர் துறந்திருந்தாள்.
மூன்று சகோதர, சகோதரிகள் கொண்ட குடும்பத்தில் இரண்டாமவள் சவ்மினி. மூத்தவள் 19 வயதான சகோதரி. மூன்றாமவன் 10 வயதான சகோதரன். தனது சகோதரனின் உடைகளை கழுவுவது முதல் வீட்டின் அனைத்து வேலைகளையும் சவ்மியே பெரும்பாலும் செய்யப்பழகியிருந்ததாக குறிப்பிடும் அவளது பெற்றோர் அவளது இந்த திடீர் பிரிவை தாங்கிக்கொள்வது என்பது கடினமானது தான்.
ரயிலின் முன் பாய்ந்து பாடசாலை மாணவி தற்கொலை என்ற செய்தி ஊடகங்கள் ஊடாக பரவியது முதல் இந்த தற்கொலை தொடர்பிலான விடயங்களை கேசரி தேடத்தொடங்கியது.
ஏற்கனவே குருணாகல் நகரின் பிரபல பாடசாலையான ஜோன் கொத்தலாவல பாடசாலையின் அப்போதைய அதிபர் மாணவி ஒருவரை கேவலமாக திட்டியதில் அவர் மன உளைச்சலால் தற்கொலை செய்துகொண்டிருந்த சம்பவத்தை கேசரி வெளிப்படுத்தியிருந்தமை ஞாபகம் இருக்கலாம்.
இந் நிலையிலேயே இது தொடர்பிலும் தேடலை தொடங்கியது.
அப்போது எமக்கு ஒரு ‘ மெமரி சிப்’ தொடர்பான தகவல் ஒன்றை கேட்க முடிந்தது. அதாவது சவ்மினி கல்வி கற்று வந்த வகுப்பின் மாணவர்களுக்கு மத்தியில் ஒரு வீடியோ மற்றும் புகைப்பட கோப்பொன்று கையடக்க தொலைபேசிகளிடையே பரவத் தொடங்கியுள்ளதாம்.
அந்த வீடியோவில் ஹப்புகொட சென் மேரிஸ் கல்லூரியின் இரு ஆசிரியைகளின் ஓரினச் சேர்க்கை தொடர்பிலான பதிவுகளும் புகைப்படங்களுமே உள்ளதாக பாடசாலை முழுவது செய்தி பரவியுள்ளதை அறிய முடிந்தது.
எனினும் அந்த வீடியோ யாரால் பரப்பப்பட்டது, அதில் உள்ளது உண்மையில் அப்பாடசாலையின் ஆசிரியைகள் தானா போன்ற கேள்விகளுக்கு இன்று வரை பதில் இல்லை.
இது ஒரு புறமிருக்க அந்த வீடியோவில் உள்ளவர்கள் பாடசாலையின் ஒழுக்காற்று நடவடிக்கைகளுக்கு பொறுப்பான ஆசிரியையும் ஆங்கில பாடம் கற்பித்த ஆசிரியையுமே இருப்பதாக மணவர்கள் பரவலாக கதைத்துக்கொண்டிருந்துள்ளனர்.
‘ உண்மையில் இது அவர் தானா?…’பாரேன்.. ஒழுக்காற்று குழு டீச்சரின் படத்தை ..’ போன்ற பிரதிபலிப்பு வசனங்களுடன் சவ்மினியின் வகுப்பறையில் இந்த வீடியோ தொடர்பான கதை வளர்ந்துள்ளது.
எவ்வாறாயினும் இது தொடர்பில் தொடர்ந்தும் தேடிய போதுகல்வியிலும் விளையாட்டிலும் சவ்மினி மிகத்திறமையானவள் என்பதை நாம் தெரிந்துகொள்ள முடிந்தது. அத்துடன் ஒழுக்காற்றுக் குழுவின் ஆசிரியை சவ்மியுடன் மிக அன்பாக பழகுபவர் எனவும் அறிய முடிந்தது.
இந் நிலையில் தான் சவ்மினி தன்னுடன் பாசமான ஆசிரியையின் அசிங்கமான வீடியோ படம் ஒன்று பரவுவதை பொறுத்துக்கொள்ளாது தன்னுடன் நெருக்கமான மற்றொரு ஆசிரியையிடம் விடயத்தி கூறியுள்ளார்.
இதனை அடுத்து அந்த ஆசிரியை சவ்மினி சொன்ன விடயத்தை ஒழுக்காற்றுக் குழுவின் தலைமை ஆசிரியருக்கு தெரிவித்ததுடன் சவ்மினியே இந்த விடயத்தை தன்னிடம் கூறியதையும் அவரும் இதனை பார்த்துள்ளதையும் குறிப்பிட்டுள்ளார்.
இதனையடுத்து ஒழுக்காற்றுக்குழுவின் தலைமை ஆசிரியர் கலவரமடைந்து சவ்மினியின் வகுப்பறைக்குச் சென்று அவளை மிக கோபமாக அழைத்து கேவலமாக திட்டித் தீர்த்துள்ளார்.
அத்துடன் பாடசாலையின் அதிபரிடமும் அவளை அழைத்துச் சென்று அவள் மீது குற்றச்சாட்டுக்களை சுமத்தியுடன் அவளின் தரப்பு நியாயங்களை கேட்க அந்த ஆசிரியை உள்ளிட்ட எவரும் தயாராகயிருக்கவில்லை.
இந்த நிலையில் தான் கடந்த 6 ஆம் திகதி ஆசிரியைகளின் ஓரினச் சேர்க்கை வீடியோ பதிவாகியுள்ளதாக கூறப்படும் மெமரி சிப் சவ்மினியிடமே உள்ளதாக ஆசியைகள் இருவரினாலும் குற்றம் சுமத்தப்பட்டு அதனை பெற்றுக்கொள்ள அவள் பலாத்காரமாக பாடசாலையிலிருந்து வீட்டுக்கு அழைத்து செல்லப்பட்டிருந்தாள்.
சவ்மினியின் பெற்றோர் தொழில் செய்வதால் பொதுவாக அவர்களது வீட்டில் பகல் நேரங்களில் யாரும் இருப்பதில்லை.
இந்நிலையில் ஒழுக்காற்றுக் குழுவின் ஆசிரியையும் ஆங்கில ஆசிரியையும் சேர்ந்த சவ்மினியை கட்டாயப்படுத்தி வீட்டை திறக்கச் செய்து ‘மெமரி சிப்’ பை தேட வைத்துள்ளனர்.
எனினும் அது தன்னிடம் இல்லை என அந்த மாணவி மீண்டும் மீண்டும் கூறி இறுதியில் தனது கையடக்கத் தொலைபேசியையும் அவர்களிடம் காட்டியுள்ளார். அப்படி ஒரு மெமரி சிப் எங்கு உள்ளது என்பதை மாலையாவதற்குள் தேடி தருவதாக அவள் கெஞ்சியுள்ளார்.
இதன்போது பகல் நேரங்களில் ஆளில்லாமல் அந்த வீட்டில் மிரட்டும் தொனியில் பெண்களின் குரல் கேட்பதை அவதானித்துள்ள சவ்மினியின் மாமா உடனடியாக அங்கு வருகை தந்துள்ளார்.
இதன் போது மாமாவும் ஆசிரியைகளிடம் விடயத்தை வினவ அவர்கள் முழுமையாக எதனையும் அவரிடம் குறிப்பிடாமல் ஏதோ மெமரி சிப் தேட வந்ததாக குறிப்பிட்டுள்ளனர்.
எனினும் ஆளில்லா வீட்டில் இவ்வாறு மாணவியை அச்சுறுத்தி தேடுவது குற்றம் என மாமா தெரிவித்ததுடன் சவ்மினி பயந்து போயுள்ளதை அவதானித்து அவளை பாடசாலைக்கு கூட்டிச் செல்ல வேண்டாம் எனவும் விட்டுச் செல்லுமாறும் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் ஆசிரியைகள் அவளை அதிபரிடம் கையளிக்க வேண்டும் என கூறி தாம் வந்த மோட்டார் சைக்கிளிலேயே அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது தனது மகளுக்கு ஏதேனும் ஒன்று நடந்தால் அதற்கு நீங்களே பொறுப்பு கூற வேண்டுமென சவ்மினியின் மாமா ஆசிரியர்களிடம் கடுந்தொனியில் குறிப்பிட்டுள்ளார்.
இதன் பின்னரே அன்றைய தினம் மாலை ரயில் நிலையத்தில் தனது புத்தக பையை வைத்து விட்டு ரயிலின் முன் பாய்ந்து அந்த மாணவி தற்கொலை செய்துகொண்டாள். மாணவியின் சிதைந்த உடல் கம்பஹா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்ட நிலையில் புத்தகப் பை உள்ளிட்டவற்றை வைத்தே பெற்றோர் தனது மகளை அடையாளம் காண முடிந்தது.
இவ்வாறு தற்கொலை செய்து உயிரை மாய்த்துக்கொண்ட சவ்மினியின் தந்தை பின்னர் ஊடகங்களிடம் குறிப்பிட்ட கருத்துக்களும் அவதானிக்கத்தக்கவை.
அதாவது குறித்த தினம் மகளை பாடசாலையிலிருந்து வீட்டுக்கு அழைத்து வந்து மெமரி சிப் தேடிய ஆசிரியைகள் இருவரும் பின்னர் ஒரு இடத்துக்கு மகளை அழைத்துச் சென்று அச்சுறுத்தி அடித்து அந்த சிப்பை தருமாறு மிரட்டியுள்ளனர்.
எனினும் அவளிடம் அந்த சிப் இல்லாத நிலையில் அவள் எங்கிருந்து அப்படி ஒரு சிப்பை கொடுக்க முடியும் என அந்த மாணவியின் தந்தை கூறுகின்றார்.
இந் நிலையில் மாணவியின் தற்கொலைக்கு குறித்த இரு ஆசிரியைகளே காரணம் எனவும் அவர்கள் தூண்டி மாணவியை தற்கொலை செய்துகொள்ள வைத்துள்ளதாகவும் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் எழுந்தன.
அத்துடன் பாடசாலைக்கு முன்னால் பல பெற்ரோர்கள் ஒன்றிணைந்து அந்த இரு ஆசிரியைகள் இருவருக்கும் எதிராக குரலெழுப்பினர். இதனால் நிலைமை சிக்கலானது.
இந் நிலையில் அவ்விரு ஆசிரியைகளும் உடன் அமுலுக்கு வரும் வகையில் நீர்கொழும்பு, கந்தானை கல்விக் காரியாலயங்களுக்கு இடமாற்றப்பட்டனர். சம்பவம் தொடர்பிலும் கல்வி அமைச்சும் ராகம பொலிஸாரும் வெவ்வேறான விசாரணைகளை முன்னெடுக்க தற்போது சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையும் விஷேட விசாரணை ஒன்றை முன்னெடுத்திருப்பதாக அறியமுடிகின்றது.
இந் நிலையில் அந்த மாணவியின் இறுதிக்கிரியைகளின் போது கந்தானை பொது மயானத்தில் பெரும் திறளானோர் திரண்டிருக்க பாடசாலைக்கும் அதனை அண்டிய பகுதிக்கும் விஷேட பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.
‘ எனது அன்பு மகளுக்கு அந்த இரு ஆசிரியைகளும் எவ்வளவு மன உளைச்சலைக் கொடுத்திருப்பார்கள்…அதனால் தானே வாழ்க்கை வெறுத்தது…எம்மிடமாவது கூறியிருக்கலாம் தானே நாம் வேறு பாடசாலைக்கு உன்னை மாற்றியிருப்போம்…’ என சவ்மினியின் தாய் கதறியழுத காட்சிகள் அங்கிருந்தோரை கண்ணீர் கடலில் மூழ்கடித்தது.
இப்படியான நிலையில் தான் மிக முக்கியமான, விசாரணைகளுக்கு வலு சேர்க்கும் மற்றொரு விடயம் வெளிச்சத்துக்கு வந்தது.
அதாவது சவ்மினி கடவுளை விளித்து எழுதிய கடிதமே அது. தன்னை இந்த இரு ஆசிரியைகளும் துரத்தும் விடயத்திலிருந்து காப்பாற்றி நல்ல முறையில் கல்வி பயில கருணை காட்டுமாறு கோரி அந்த மாணவி பிரதேசத்தின் தேவாலயத்தின் வேண்டுதல் பெட்டியில் போட்டிருந்த கடிதமே இவ்வாறு கிடைத்துள்ளது.
அத்துடன் அந்த கடிததில் உள்ள தகவல்களின் பிரகாரம் அவ்விரு ஆசிரியைகளும் நீண்ட காலமாக இந்த மாணவியை உடல் உள, சித்திரவதைகளுக்கு உள்ளாக்கியிருக்க வேண்டும் என எண்னத்தோன்றுகின்றது.
‘கடவுளே… நான் பாடசாலையில் படும் கஷ்டம் உனக்காவது தெரியவில்லையா…இயேசு நாதரே, எதிர்வரும் மாதத்திலிருந்தாவது நல்லபடியாக வாழும் சூழலை உருவாக்கி தா இறைவா.
நான் செய்யும் ஒவ்வொறு வேளையிலும் எது சரி, எது தவறு என எனக்கு சுட்டிக்காட்டு இறைவா.கடந்த வருடம் எனது வாழ்க்கையில் நடந்தஎல்லா துயரங்களையும் மறந்து பிரச்சினைகளின்றி நல்லபடியாக வாழ வழிகாட்டு இறைவா.
ஆசிரியர் குழாமில் உள்ள எந்தவொரு ஆசிரியரிடமிருந்தும் இதன் பின்னர் ஏச்சு பேச்சுக்கள் வாங்காமல் இருக்க எனக்கு கருணை செய்தருள்வாயாக.
எனதிறைவா ,எனக்கு தெரியும் அவர்கள் இருவரும் அவர்கள் என்னுடன் கோவித்துக் கொண்டதால் எனக்கு தந்த கஷ்டங்கள். அது உனக்கும் தெரியும். இறைவனே இதற்கு மேலும் அந்த கஷ்டங்களை அனுபவிக்க எனக்கு சக்தி இல்லை. அதனால் நாளையுடன் ஆரம்பமாகும் மாதத்துடன் அவர்கள் இருவரையும் முன்னரை போன்று என்னுடன் அன்பாக பழக கருணை செய்வாயாக.
இறைவனே, அதே போன்றே எனது பாடசாலைக்குள் ஒரு பெண் பிள்ளையாக எனது நண்பர்கள், நண்பிகளுடன் சந்தோசமாக பழக எனக்கு சந்தர்ப்பதை வழங்குவாயாக. எனது இறைத் தந்தையே பாடசாலைக்குள் பல விதமாக என்னைப் பற்றி ஆசிரிய ஆசிரியைகள் தவறாக எண்ணிக்கொண்டிருக்கின்றார்கள். அந்த எண்ணங்களை மாற்றி நல்லபடியாக என்னை எண்ணும் படி நிலைமைகளை சீராக்குவாயாக.
இதன் பிறகு நல்ல பிள்ளையாக என்னை வாழ கருணைகாட்டுவதுடன் எனது உள்ளத்தில் உள்ள அனைத்து சங்கடங்கள், கவலைகளையும் நீக்கிவிடுவாயாக. அத்துடன் அந்த ஆசிரியயைகளுடனும் முன்னரை போன்றே அன்பாக பழகக் கூடிய நிலைமையையும் ஏற்படுத்தி தருவாயாக.’ என அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த கடிதத்தை அடிப்படையாக கொண்டு நோக்கும் போது இந்த கடிதமானது கடந்த மே மாதம் 31 ஆம் திகதி எழுதப்பட்டிருக்கலாம் என எண்ணத்தோன்றுகின்றது.
அத்துடன் அதில் குறிப்பிடப்பட்டுள்ள காரணங்களை பார்க்கும் போது ஏதோ ஒரு பின்னணி இந்த தற்கொலையின் பின்னணியில் இருக்க வேண்டும் என்பதை உறுதி செய்கின்றது. அத்துடன் குறித்த இரு ஆசிரியைகளும் ஏதோ ஒரு விதத்தில் இந்த மாணவியுடன் முரண்பட்டிருப்பதியும் அந்த கடிதம் தெளிவு படுத்துகின்றது.
அதனால் இதனை வெறும் தற்கொலையாக பார்க்காது அதன் பின்னணி தொடர்பில் ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பது உசிதமானது.
இந் நிலையில் தான் எமக்கு மீண்டும் அந்த மெமரி சிப் தொடர்பான ஞாபகம் வருகின்றது. உண்மையில் குறித்த இரு ஆசிரியயைகளுக்கு இடையில் அவ்வறான ஒரு தவறான உறவு இருந்ததா?, அது சவ்மினிக்கு தெரிந்திருந்தா என்ற சந்தேகம் இங்கே எழுகின்றது.
உண்மையில் இரு ஆசிரியைகளுக்கும் இடையே அவ்வாறானதொரு தொடர்பு இல்லை என்றால் எதற்காக அந்த ‘ மெமரி சிப்‘பை பற்றி இவ்வளவு அலட்டிக்கொள்ள வேண்டும். அல்லது வேறு ஏதாவது பழிவாங்கல்களுக்காக இப்படி ஒரு கதை கட்டப்பட்டதா போன்ற பல கேள்விகளுக்கு இன்னும் விடை இல்லை.
இப்படியான கட்டதில் தான் நாம் அந்த மெமரி சிப் தொடர்பிலான தேடல்களுக்குள் சென்றோம். எனினும் அப்படி ஒரு வீடியோ காட்சிகளையோ படங்களையோ எம்மால் அவதானிக்க முடியவில்லை.
இந் நிலையில் அந்த வீடியோ தொடர்பான தகவல்களை நாம் தேடினோம். வீடொன்ருக்குள் குறித்த ஆசிரியைகள் தன்னினச் சேர்க்கையில் ஈடுபடுவதைப் போன்று அந்தவீடியோவில் பதிவாகியிருந்ததாகவும் அவை அந்த வீட்டின் ஜன்னல் ஊடாக கையடக்கத் தொலைபேசியில் படம் பிடிக்கப்பட்டிருப்பதாகவும் பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எமக்கு குறிப்பிட்டனர்.
எனினும் அந்த வீடியோவில் என்ன இருக்கின்றது என்பதும் அந்த வீடியோ பதிவாகியுள்ள மெமரி சிப் தற்போது யாரிடம் உள்ளது என்பதும் கடவுளுக்கே வெளிச்சம்.
அப்படியான வீடியோ ஒன்று இல்லை என்றால் ஏன் அந்த மெமரி சிப்பை அந்த ஆசிரியைகள் தேடவேண்டும். ஆகவே இந்த மாணவியின் தற்கொலைக்கான அடிப்படைக் காரணம் தொடர்பான தகவல்கள் அந்த மெமரி சிப் கண்டு பிடிக்கப்படுவதன் ஊடாகவே வெளிச் சத்துக்கு கொண்டுவரப்படலாம்.
அத்துடன் தற்போது இந்த மாணவியின் தற்கொலை தொடர்பில் விசாரணை செய்து வரும் பொலிஸார் மேலதிக நடவடிக்கைகள் குறித்து சட்ட மா அதிபரை நாடியுள்ளதாக அறிய முடிகின்றது. சட்ட மா அதிபரின் ஆலோசணைக்கு அமைய மேலதிக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படலாம்.
இதேவேளை மேல் மாகாண கல்வித் திணைக்களத்தினால் குறித்த மாணவி தற்கொலை செய்துகொண்ட ரயில் தண்டவாளம் அருகே நேற்று விஷேட சோதனை நடவடிக்கை ஒன்றும் இடம்பெற ஏற்பாடாகியிருந்தது.
மாணவி ரயிலின் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டமை தொடர்பில் வழங்கப்பட்டுள்ள முரண்பாடான வாக்கு மூலங்களை அடுத்தே இந்த பரிசோதனை மேற்கொள்ள தீர்மானித்ததாக குறித்த திணைக்களத்தின் பணிப்பாளர் விமல் குணரத்ன குறிப்பிட்டார்.
அத்துடன் குறித்த மெமரி சிப்பை கண்டு பிடிக்க தொடர்ந்தும் விசாரணைகள் இடம்பெறுவதாக பொலிஸார் குறிப்பிட்டனர். அந்த விசாரணைகள் சவ்மினியின் உயிரை பறித்தது ரயிலா? ஆசிரியைகளா? என்பதை உலகுக்கு தெளிவு படுத்தும் அதுவரை நாம் அவதானத்துடன்…..
–எம்.எப்.எம்.பஸீர்–