சிக்கிம் விவகாரத்தில் எங்களின் பொறுமை இறுதி கட்டத்தில் உள்ளது என்று சீன பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.
சிக்கிம் எல்லை அருகே இந்தியா-சீனா-பூடான் நாடுகள் சந்திக்கும் முச்சந்திப்பான டோக்லாம் பகுதியில் சீன ராணுவம் மேற்கொண்ட சாலைப்பணிகளை இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்தினர்.
இந்தியாவின் வடகிழக்கு பகுதிகளுக்கு ஏற்படும் பாதுகாப்பு அச்சுறுத்தலை கருத்தில் கொண்டு இந்திய ராணுவம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டது.
இதனால் இரு நாடுகளுக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டு உள்ளதால், சிக்கிம் எல்லையில் இரு நாடுகளும் படைகளை குவித்து உள்ளன.
இந்தியா தனது படைகளை வாபஸ் பெற வேண்டும் என கூறி வரும் சீனா, இல்லாவிட்டால் கடும் விளைவுகள் ஏற்படும் என மிரட்டி வருகிறது.
இந்தியா இருதரப்பும் ராணுவத்தை பழைய நிலைக்கு திரும்ப அழைக்க வேண்டும் என கூறிவிட்டது. சீனா மிரட்டும் வகையில் தொடர்ச்சியாக அறிக்கையை வெளியிடும் நிலையில் இந்தியா தன்னுடைய நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது.
இந்த நிலையில், சிக்கிம் விவகாரத்தை பொறுத்தவரை சீனா மிகுந்த நல்லெண்னத்தை காட்டி வருவதாகவும் தங்களின் பொறுமை இறுதி கட்டத்தில் இருப்பதாகவும் இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் சீனா பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், நேற்று இந்தியா சீனா இடையேயான இரு தரப்பு உறவு சுமூகமான முறையில் மேம்பட வேண்டும் எனில், எல்லைப்பிரச்சினையில் அமைதி மற்றும் நல்லெண்ணம் அவசியம் என்று தெரிவித்தநிலையில் சீன பாதுகாப்புத்துறை இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
சீன பாதுகாப்புத்துறை செய்தி தொடர்பாளர் இது குறித்து கூறுகையில், “ இந்த பிரச்சினை ஏற்பட்டதில் இருந்தே, சீனா மிகுந்த நல்லெண்ணத்தை கடைப்பிடித்து தூதரக வாயிலாக இந்த பிரச்சினையை தீர்க்க இந்தியாவுடன் பேச்சுவார்த்தையை நாடியது.
சீன ராணுவமும் இரு தரப்பு உறவுகள் மற்றும் பிராந்திய அமைதியை நிலைநாட்டுவதற்காக உச்ச கட்ட பொறுமையை காட்டியது.
இருந்த போதிலும், நல்லெண்ணம்தான் முதன்மையான கொள்கை என்ற போதிலும், சீனாவின் பொறுமையானது இறுதி நிலையில் உள்ளது” இவ்வாறு அவர் தெரிவித்தார்.