சிறுநீரகம் விற்பனை செய்வதற்காக 21 இளைஞர்களை இலங்கைக்கு அனுப்பியுள்ளதாக ஹைதராபாத்தில் கைது செய்யப்பட்ட 3 பேர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.
தொழில்வாய்ப்புக்காக மாரு என்ற இளைஞர் ஒருவரை இலங்கைக்கு அழைத்துசென்று அங்கு சிறுநீகரத்தை அகற்றும் போது அவர் உயிரிழந்ததாக ஏற்கனவே செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்தநிலையில் மாருவுடன் சிறுநீரக விற்பனை தொடர்பில் மின்னஞ்சலில் தொடர்பை ஏற்படுத்தியவர்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் மூன்று பேரை ஹைதராபாத் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போது கடந்த சில மாதங்களில் மாத்திரம் தம்மால் 21 பேர் இலங்கைக்கு சிறுநீரக சத்திர சிகிச்சைக்காக அனுப்பப்பட்டதாக கைது செய்யப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் எம்.பி.ஏ மாணவராவார். இந்த மூவரும் இலங்கையில் உள்ள மருத்துவர் ஒருவருடன் தொடர்பை கொண்டிருந்தனர்.
சிறுநீரக விற்பனையின்போது இந்த மூவருக்கும் அதிக தரகுப்பணம் கிடைத்ததாக விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.
கைது.செய்யப்பட்டவர்களில் ஒருவரான ஸ்ரீனிவாஸ் என்பவர் ஏற்கனவே இலங்கைக்கு சென்று சிறுநீரகத்தை விற்பனை செய்தப்பின்னர் இந்தியாவுக்கு திரும்பியிருந்தார்.
அவரே இலங்கை மருத்துவருடன் இணைந்து இந்தியாவில் உள்ளவர்களை இலங்கைக்கு அனுப்பும் முயற்சிகளை ஆரம்பித்தார்.
இந்த விற்பனையின் போது ஒரு சிறுநீரகத்துக்கு 30 லட்சம் முதல் 50 லட்சம் வரை கிடைப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் சிறுநீரகத்தை தானம் செய்பவருக்கு 15 லட்சம் வரை வழங்கப்படுகின்றன.