உலகில் இத்தனை வருடங்களாக ஒரு குற்றவழக்கு பயணித்திருக்குமா எனத் தெரியவில்லை. வழக்கு ஓர் முடிவுக்கு வருமா வராதா என இன்னமும் பட்டிமன்றம் நடக்கின்றது படித்தவர்கள் மத்தியில்.
அத்தனை சட்டச் சிக்கல்கள்! அவ்வப்போது வழக்கு தொடர்பாக வெளிவரும் அதிர்ச்சி சம்பவங்கள் வேறு இதில் கிளைக்கதைகளாக உள்ளன.
இப்படி 30 ஆண்டுகளை நெருங்கிக் கொண்டிருக்கிறது ராஜிவ் காந்தி கொலை வழக்கு. குற்றவாளிகள் எனக் கூறப்பட்டவர்களில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவரும் வேலுார் மத்திய சிறையிலும் நளினி பெண்கள் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்குத் தண்டிக்கப்பட்ட குற்றவாளிகளுக்கான அடிப்படை உரிமைகள் அத்தனையும் மறுக்கப்படுவதாக சமூக அமைப்புகள் போராடி வருகின்றன.
இதுவரை பின்பற்றப்பட்டு வந்த ஆயுள்தண்டனைக்கான வழக்கமான காலகட்டத்தையும் தாண்டி அவர்கள் சிறையிலடைக்கப்பட்டிருப்பதும் சட்ட வல்லுநர்களிடையே ஆயுள் தண்டனையின் சட்ட வரையரை குறித்த வாதப்பிரதிவாதங்களை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்நிலையில் குற்றவாளிகளில் ஒருவரான நளினி, சிறையில் மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் தான் துன்புறுத்தப்படுவதாகக் கூறி கடந்த 13 ஆம் திகதி முதல் வேலுார் பெண்கள் சிறையில் உண்ணாவிரதம் இருந்து வந்தார்.
தன்னை புழல் சிறைக்கு மாற்றும்படி சிறைத்துறைக்குக் கோரிக்கை முன்வைத்து உண்ணாவிரதம் இருந்தார்.
இதனிடையே கடந்த 16 ஆம் திகதி நளினியை சிறையில் சந்தித்து விட்டு திரும்பியிருக்கிறார் அவரது வழக்கறிஞர் புகழேந்தி.
“மகள் திருமணத்துக்கும் சிறை மாற்றும் கோரிக்கைக்கும் சம்பந்தமில்லை. நளினி 25 ஆண்டுகளுக்கு மேலாக பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.
இதுவரை அவருக்குப் பெரிய அளவிலான தொல்லைகள் இருந்ததில்லை. இப்போது உள்ள கண்காணிப்பாளர் ராஜேஸ்வரிதான் நளினி தன்னை வேறு சிறைக்கு மாற்றக் கோரக் காரணம்.
நீண்ட கால சிறைவாசி என்பதால் நளினிக்கு சிறைவிதிகள் மற்றும் சிறைவாசிக்கான உரிமைகள் அனைத்தும் தெரியும்.
இதனால் சிறைவாசி களில் யாருக்கு எது நடந்தாலும் அதை எதிர்த்துக் கேட்பது அவரது வழக்கம். இது ராஜேஸ்வரிக்கு உறுத்தலாக இருக்கவே அவர் நளினியைக் கடந்த சில மாதங்களாக மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் துன்புறுத்தி வருகிறார்.
சமீப காலமாக அவரது துன்புறுத்தல் எல்லை மீறிப் போன நிலையில்தான், தன்னை வேறு சிறைக்கு மாற்ற சிறைத்துறைக்கு மனு செய்தார்.
ஆனால் அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதேசமயம் தனக்கு எதிராக மனு செய்த ஆத்திரத்தில் ராஜேஸ்வரி சில நாள்களாக நளினி மீது கோபத்தை வெளிப்படுத்த ஆரம்பித்தார்.
பொதுவாகவே கண்காணிப்பாளர் ராஜேஸ்வரி சிறைக்கைதிகளிடம் முரட்டுத்தனமாகவே நடந்து கொள்வார். அவரைக் கண்டாலே கைதிகள் அலறுகிறார்கள். நேரிடையாக அவர் எதிலும் தலையிட மாட்டார். கையாட்கள் போல எப்போதும் அவருடன் இருக்கும்
4 வார்டர்களும் சில சிறைவாசிகளும்தான் அவர் சொல்படி சிறைவாசிகளுக்குத் தொல்லை தருவார்கள். உடல் பிரச்சினையால் சமீபத்தில் தகுதியின்மை செய்யப்பட்டு ராஜேஸ்வரியின் பதவி உயர்வு தடைபட்டு விட்டதாக சொல்லப்படுகிறது.
இந்த ஆத்திரத்தில் அவரது செயல்கள் எல்லை மீறிவீட்டதாகச் சொல்கிறார்கள். மற்ற சிறைக்கைதிகள் வேறு வழியின்றி இதை சகித்துக் கொண்டாலும், சிறைவிதிகளை நன்கறிந்த நளினியால் அப்படி சகித்துக் கொள்ள முடியவில்லை. எதற்கும் பயப்படாமல் ராஜேஸ்வரியின் தவறுகளைத் தட்டிக்கேட்பார்.
இதன் எதிரொலியாக மேற்சொன்ன வார்டர்கள் மற்றும் சிறைவாசிகள் அவரை அவதூறாகப் பேசுவது, ஆத்திரம் உண்டாக்கும் அளவு யாரையோ பேசுவது போல் அவரைப் பேசுவது, அவருக்கான எந்த விஷயத்தையும் தாமதமாக வழங்குவது எனத் தொடர்ந்து தொல்லை தந்து வருகிறார்கள்.
நளினியின் உதவும் குணத்தால் பெண் சிறைவாசிகள் சிலர் அவருக்கு சிற்சில உதவிகளைச் செய்வார்கள்.
அவர்களையும் மன உளைச்சலுக்கு ஆளாகும் அளவு கொடுமைப்படுத்தி நளினியை அவர்களிடமிருந்து தனிமைப்படுத்தி வைத்திருக்கிறார் ராஜேஸ்வரி. இதனால் நளினி கடந்த சில நாள்களாகவே தீவிர மனஉளைச்சலில் இருந்தார்.
இனி பொறுத்துக் கொள்ள முடியாது என்ற நிலை உருவானபின்னர்தான் தன்னை வேறு சிறைக்கு மாற்றக் கோரி உண்ணாவிரதம் இருந்துவருகிறார் அவர்.”
இவ்வாறு கூறினார்புகழேந்தி.
“சிறைத்துறை தரப்பில் உத்தரவாதம் எதுவும் அளித்துள்ளார்களா” எனக் கேட்கப்பட்ட போது “ஏ.டி.ஜி.பி சைலேந்திரபாபு, டி.ஐ.ஜி பாஸ்கர் மற்றும் சில உளவுப் பிரிவு அதிகாரிகள் இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
“நளினியின் மகள் திருமணம் விரைவில் நடக்கவுள்ளது. அதனால் நீண்ட விடுப்பு கேட்டு விண்ணப்பிக்க இருக்கிறோம். ராஜிவ் வழக்கில் நளினி உள்ளிட்டவர்களுக்காக சட்டமன்றத்தில் சாதகமான தீர்மானத்தை இயற்றியது தமிழக அரசு.
பிரிவு 435 இன் கீழ் தமிழக அரசுக்கு இந்த உரிமை உள்ளதா இல்லையா என்பது குறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் கடந்த 2 ஆண்டுகளாக நடந்து வருகிறது.
‘ 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வசிக்கும் சிறைவாசிகளை அவர்கள் எத்தனை கொடூரக் குற்றம் புரிந்தவராக இருந்தாலும் அவரது குற்றத்தின் தன்மையைக் கணக்கில் கொள்ளாமல் மனிதநேயத்துடன் அவரை விடுவிக்கலாம்’ என்ற ஓர் ஆணையை 1994 ஆம் ஆண்டு தமிழக அரசு பிறப்பித்தது.
ஆனால், உச்சநீதிமன்றத்தில் நடந்து வரும் ராஜிவ் கொலைக்குற்றவாளிகளை விடுதலை செய்வது தொடர்பான மாநில அரசின் உரிமை குறித்த வழக்கு, இந்த ஆணையின் கீழ் நளினி வெளிவர முட்டுக்கட்டையாக உள்ளது.
ஏற்கெனவே விடுதலை தொடர்பாக நளினி தொடுத்த வழக்கில் தீர்ப்பு கூறிய சென்னை உயர்நீதிமன்றம், 94 ஆம் ஆண்டின் அரசாணையைக் குறிப்பிட்டு ‘வழக்கு முடிவுற்றால் நளினியின் விடுதலை குறித்து பரிசீலிக்கலாம்’ எனக் கூறியுள்ளது.
உச்சநீதிமன்ற வழக்கினால் மாநில அரசின் முன்விடுதலை திட்டத்தின்படி நளினி விடுதலையாவது ஏற்கனவே 2 ஆண்டுகள் தாமதமாகி விட்டது. இன்னும் எத்தனை ஆண்டுகள் வழக்கு நீடிக்கும் என்பதும் தெரியாது.
ஆகவே அதன் அடிப்படையில் வழக்கு முடிவுற்று தீர்ப்பு வரும் வரை நளினிக்கு நீண்ட விடுப்பு வழங்க வேண்டும் எனக் கேட்கவுள்ளோம்” என்றார் வழக்கறிஞர் புகழேந்தி.
ராஜிவ் கொலைவழக்கின் குற்றவாளிகளின் விடுதலையை அடுத்தத் தலைமுறையாவது பார்க்குமா?
இதுவே பரிதாபம் நிறைந்த கேள்வி.