ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ப.சிதம்பரம் இன்று பிற்பகல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்தில் தன் தந்தை ப.சிதம்பரத்தின் உதவியுடன் மகன் கார்த்தி சிதம்பரம் ரூ.305 கோடி முறைகேடு செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த விவகாரம் தொடர்பாக சி.பி.ஐயும், அமலாக்கத்துறையும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. இதே வழக்கில் கடந்த வருடம் கைது செய்யப்பட்ட கார்த்தி சிதம்பரம் பிறகு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
தற்போது அதே விவகாரத்தில் ப.சிதம்பரத்துக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறி அவரை கைது செய்யவுள்ளதாக நேற்று முன் தினம் தகவல்கள் வெளியாகின.
இதையடுத்து நேற்று முன் தினம் இரவு சிதம்பரத்தைக் கைது செய்ய அவரது டெல்லி வீட்டுக்குச் சென்றது சி.பி.ஐ. ஆனால், அதிகாரிகள் சென்ற நேரத்தில் சிதம்பரம் வீட்டில் இல்லை.
நேற்று ஒரே நாளில் மட்டும் மூன்றுக்கும் மேற்பட்ட முறை சிதம்பரத்தைக் கைது செய்ய அவரது வீட்டுக்குச் சென்று தோல்வியுடன் திரும்பினர் அதிகாரிகள்.
கடந்த 24 மணி நேரமாக எங்கு இருந்தார் எனத் தெரியாத சிதம்பரம், நேற்று மாலை திடீரென காங்கிரஸ் அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
தொடர்ந்து தன் வீட்டில் வழக்கறிஞர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டிருந்தார் சிதம்பரம். அந்த நேரத்தில் மீண்டும் அவரது வீட்டுக்குச் சென்றுள்ளனர் சி.பி.ஐ அதிகாரிகள்.
ஆனால், வீட்டு வாசலில் காத்திருந்த காங்கிரஸ் தொண்டர்கள், அதிகாரிகளை வீட்டுக்குள் செல்ல அனுமதிக்கவில்லை.
இதையடுத்து வீட்டின் பின்புறம் உள்ள சுற்றுச்சுவரின் மீது ஏறிக் குதித்து உள்ளே சென்றனர் சில அதிகாரிகள். வீட்டின் உள் கதவு திறக்கப்பட்டிருந்தது, தன் வீட்டில் ஆலோசனையில் ஈடுபட்டிருந்த முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரத்தை நீண்ட போராட்டத்துக்குப் பிறகு கைது செய்தனர் சி.பி.ஐ அதிகாரிகள்.
டெல்லி காவலர்களின் உதவியுடன் சி.பி.ஐயின் மூன்று குழுக்கள் இணைந்து சிதம்பரத்தைக் கைது செய்தனர்.
சிதம்பரம் கைது செய்யப்பட்டபோது அவரது வீட்டு வாசலில் காத்திருந்த தொண்டர்கள் சி.பி.ஐக்கு எதிராகவும் மத்திய அரசுக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினர்.
கோஷம் எழுப்பியவர்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தியது டெல்லி போலீஸ். கைதுக்குப் பிறகு தன் வீட்டிலிருந்து நேரடியாக ஆர்.எம்.எல் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் சிதம்பரம்.
அங்கு அவருக்கு மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்பட்டன. பின்னர் அங்கிருந்து சி.பி.ஐ தலைமை அலுவலகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
இன்று காலை டெல்லியில் உள்ள சி.பி.ஐ தலைமை அலுவலகத்தில் சிதம்பரத்திடம் அதிகாரிகள் விசாரணை நடத்தவுள்ளனர்.
இதைத் தொடர்ந்து பிற்பகல் 12 மணிக்குச் சிறப்பு சி.பி.ஐ நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தபடவுள்ளார். கைது செய்யப்பட்ட சிதம்பரத்தை சி.பி.ஐ காவலில் எடுத்து விசாரிக்கக் கால அவகாசம் கேட்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதே நேரம் சிதம்பரம் தரப்பிலிருந்து ஜாமீன் கோரிக்கையும் வைக்கப்படும். ஒருவேளை சிபி.ஐ வழக்கில் சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்கப்பட்டாலும் அமலாக்கத்துறை அவரை கைது செய்ய வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஒரு புறம் சிதம்பரம் கைது நடவடிக்கை நடந்துகொண்டிருக்கும் போது அதே நேரத்தில் டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த கார்த்தி சிதம்பரம், “எந்தச் சம்பந்தமும் இல்லாத ஒரு வழக்கை உருவாக்கி அந்தச் சம்பவங்கள் 2008-ம் ஆண்டு நடந்ததாகக் கூறியுள்ளனர்.
அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக சோடிக்கப்பட்ட இந்த வழக்குக்கு 9 ஆண்டுகளுக்குப் பிறகு எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளனர்.
சி.பி.ஐ அதிகாரிகள் எனக்கு இதுவரை 20 சம்மன்கள் அனுப்பிவிட்டனர். நானும் அதை ஏற்று 11 நாள்கள் அவர்களின் உறவினராக இருந்து, அதிகாரிகளின் கேள்விக்குப் பதில் அளித்துள்ளேன்.
தற்போது எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கை உண்மையானதாகத் தெரியவில்லை. யாரையோ திருப்திப் படுத்தவே இந்தக் கைது நடந்துள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.