நாட்டில் தொடரும் சீரற்ற காலநிலையினால் மக்களின் இயல்புவாழ்க்கை பாதிப்படைந்துள்ளதுடன் 237,940 குடும்பங்களை சேர்ந்த 803,516 பேர் பாதிப்புக்குள்ளாகியுள்ளதோடு ஐவர் பலியாகியுள்ளனர்.
இவை தவிர மண்சரிவு மற்றும் வெள்ளம் காரணமாக 6 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன் 1,046 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இந்த சீரற்ற காலநிலை அடுத்த சில தினங்களுக்கும் தொடரும் என்பதால் மலைப்பாங்கான மற்றும் சரிவுகள் ஏற்படும் அறிகுறிகள் தென்படும் பகுதிகளில் வாழும் மக்கள் தொடர்ந்தும் விழிப்புடன் இருப்பது அவசியமாகும் என இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவுறுத்தியுள்ளது.
அதிகரிக்கும் மழைவீச்சியின் காரணமாக பல பாகங்களில் நீர்த்தேக்கங்களிலும் நதிகளிலும் நீரின் அளவு அதிகரித்து வருகின்றது. இவ்வாறு நீர் மட்டம் அதிகரித்தாலும் வெள்ளம் ஏற்படும் அபாயம் இதுவரையில் ஏற்படவில்லை. நீர்த்தேக்கங்களின் நீர்மட்டங்களும் சடுதியாக அதிகரித்திருக்கவில்லையென தெரிவிக்கப்படுகின்றது.
இந்த காலநிலையினால் தெற்கு அதிவேக நெடுஞ்சாலை மற்றும் கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலைகளிலும் பல விபத்து சம்பவங்கள் பதிவாகியதோடு அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் சாரதிகள் அவதானத்துடன் இருக்குமாறும் அவர்கள் மணிக்கு 60 கிலோமீற்றர் வேகத்தில் வாகனங்களைச் செலுத்துமாறும் அதிவேக நெடுஞ்சாலைகள் பராமரிப்பு மற்றும் திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.ஓப்பநாயக்க அறிவுறுத்தியுள்ளார்.
இதேவேளை, நாட்டின் பல பாகங்களில் நேற்று பெய்த கடும் மழையினால் கொழும்பு உள்ளிட்ட பல நகரங்களின் புற வீதிகள் நீரில் மூழ்கியுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி கேசரி வாரவெளியீட்டுக்குத் தெரிவித்தார்.
இதுவரையில் பதுளை மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களில் மாத்திரம் மண்சரிவு அபாயம் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர் பாரியளவு அனர்த்தங்கள் ஏற்படவில்லையென்றும் மேலும் தெரிவித்தார்.