சுனாமியின்போது காணாமல் போன தங்களது குழந்தை என அநாதரவான நிலையில் பொலிஸாரால் மீட்கப்பட்ட சிறுமிக்கு இரு குடும்பங்கள் சட்ட ரீதியாக உரிமை கோரியுள்ளன.
கிழக்கு மாகாணத்தின் கல்முனை பகுதியில் அநாதரவான நிலையில் நடமாடிக்கொண்டிருந்த வேளை குறித்த சிறுமி அண்மையில் பொலிஸாரால் மீட்கப்பட்டிருந்தார்.
இந்நிலையிலேயே குறித்த சிறுமி சுனாமியின்போது காணாமல் போன தங்களது குழந்தை என இரு குடும்பங்கள் சட்ட ரீதியாக உரிமை கோரியுள்ளன.
இவ்வாறு கல்முனையை சேர்ந்த தமிழ் குடும்பமொன்றும் அம்பாந்தோட்டையை சேர்ந்த முஸ்லிம் குடும்பமொன்றும் தனித்தனியாக உரிமை கோரும் மனுக்களை வழக்கறிஞர்கள் மூலம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளன.
இதேவேளை, குறித்த சிறுமி அறநெறி பாடசாலைக்கு சென்றிருந்தவேளை சுனாமியின் பின்னர் காணாமல் போயிருந்ததாக தமிழ் குடும்பம் உரிமைகோரும் அதேவேளை, சுனாமியின் போது மூன்று வயது குழந்தையாக இருந்த குறித்த சிறுமி தந்தையின் கையிலிருந்து தவறிப் போன குழந்தையே என முஸ்லிம் குடும்பம் உரிமை கோரியுள்ளது.
இந்நிலையில், கடந்த மாதம் கல்முனை பொலிஸாரால் மீட்கப்பட்ட இந்த சிறுமி நீதிமன்ற உத்தரவின் பேரில் தற்போது அம்பாறையிலுள்ள சிறுவர் பாதுகாப்பு நிலையமொன்றில் தங்கவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.