யாழ்ப்பாணம், புங்குடுதீவு மாணவியை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாக கூறப்படும் சந்தேகநபரை, விடுவிக்குமாறு உயர் பொலிஸ் அதிகாரியொருவர் கட்டளையிட்டதாக கூறப்படுவது தொடர்பில் இரகசிய பொலிஸார் (சி.ஐ.டி) மற்றும் பொலிஸ் விசேட விசாரணை பிரிவின் இரண்டு குழுக்கள் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவம் இடம்பெற்ற அண்மைய நாளொன்றில் அந்த சந்தேகநபரை கிராமத்தவர்கள் பிடித்து உப-பொலிஸ் பரிசோதகர்; மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிளிடம் ஒப்படைத்துள்ளனர்.
சந்தேகநபரை பொலிஸ்நிலையத்துக்கு கொண்டுவந்ததன் பின்னர், இந்த சந்தேகநபர், மாணவியை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய சம்பவத்துடன் தொடர்புடையவர் அல்ல என்று உயர்பொலிஸ் அதிகாரி தெரிவித்தததாகவும்.
அந்த உயர் அதிகாரி கூறியதன் பிரகாரம் சிறு முறைப்பாட்டு பிரிவு வாக்குமூலத்தை பெற்றுகொண்டு அச்சந்தேகநபரை விடுவித்ததாக பொலிஸூக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.
அவ்வாறு விடுவிக்கப்பட்ட சந்தேகநபரே, வெள்ளவத்தையில் வைத்து பிரதான பொலிஸ் பரிசோதகர் டுலரினால் பின்னர் கைதுசெய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
வவுனியா வர்த்தகரின் மகன் கடத்தல்: கப்பம் பெற்றவர் கைது
14-06-2015
வவுனியா பிரபல வர்த்தகரின் 5 வயது மகன் கடத்தப்பட்ட சம்பவத்துடன் வவுனியா பட்டானிச்சூர் புளியங்குளத்தைச் சேர்ந்த சந்தேக நபர்பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று முன்தினம் பாலர் பாடசாலைக்கு சென்று வீடு திரும்பிக்கொண்டிருந்த சிறுவன் கடத்தப்பட்டிருந்தான். இதனையடுத்து சிறுவனின் தந்தையிடம் 30 இலட்சம் ரூபா கப்பம் கோரப்பட்டிருந்த நிலையில் அத் தொகையை வழங்க முடியாது என தெரிவித்த நிலையில் 10 இலட்சம் தருமாறு கடத்தப்பட்ட நபரினால் வர்த்தகரிடம் கோரப்பட்டிருந்தது.
இதன் படி 10 இலட்சம் ரூபா குப்பை மேடொன்றில் வைக்கப்பட்டதன் பின்னர் சிறுவன் பாதுகாப்பாக விடுவிக்கப்பட்டிருந்தான். இதனையடுத்து வர்த்தகர் வவுனியா பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார்.
உடனடியாக சிறந்த முறையில் செயற்பட்ட வவுனியா பொலிஸார் கடத்திய நபரை மறுநாள் கைது செய்ததுடன் விளக்கமறியலில் வைப்பதற்கு நீதிமன்றத்தின் உத்தரவினை பெற்று விளக்கமறியலில் வைத்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இதேவேளை குறிப்பிட்ட சந்தேக நபர் சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தராக செயற்பட்ட நிலையில் நிதி மோசடி தொடர்பில் பணி நீக்கம் செய்யப்பட்டவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சிறுவர் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்ட ஆசிரியர் கைது
14-06-2015
வவுனியா பூவரசன்குளம் மகாவித்தியாலயத்தில் சிறுவர் துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டதாக அதே பாடசாலையின் ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட சிறுவர் உரிமை மேம்பாட்டு அதிகாரி ஜெ. ஜெயகெனடி தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
பூவரசன்குளம் மகாவித்தியாலயத்தில் சிறுமிகள் மீது தகாத முறையில் நடந்து கொண்டதாக தெரிவித்து பூவரசன்குளம் பொலிஸாரிடம் அப்பகுதி மக்களும் தாய் சிறுவர் இல்ல அருட் சகோதரி ஒருவரும் முறைப்பாட்டை பதிவு செய்திருந்தனர்.
இதன் பிரகாரம் சமய பாடம் கற்பிற்கும் குறித்த ஆசிரியர் சில நாட்களாக தலைமறைவாக இருந்தார். எனினும் இன்று பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு நீதிவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டதன் பிரகாரம் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் எனவும் அவர் தெரிவித்தார்.