இனப்படுகொலை பிரேரணை ஏற்றுக் கொள்ளப்படாததால் கோபமுற்ற வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் செங்கோலை தூக்கி வீசினார்.
வடமாகாண சபையின் 20 ஆவது அமர்வு கைதடியில் உள்ள வடமாகாண சபை பேரவை கட்டடத்தில் நடைபெற்றது. இன்றைய அமர்வில் இனப்படுகொலை தொடர்பான சிவாஜிலிங்கத்தின் பிரேரணை எடுத்து கொள்ளப்படுவதாக இருந்தது.
அப் பிரேரணை தொடர்பில் தனக்கு ஆட்சேபனை இருப்பதாகவும், மேலும் ஆதாரங்கள் திரட்டப்பட்டு ஒரு வலுவான பிரேரணையாக கொண்டு வரப்பட வேண்டும், ஆனால் இப்பிரேரணை கொண்டுவருவதற்கான காலம் இதுவல்ல ஜனாதிபதி தேர்தல் முடிவடைந்த பின்னர் அதனை கொண்டுவருவதே சிறந்தது ஏனெனில் இக் காலப்பகுதியில் கொண்டு வரப்பட்டால் இப் பிரேரணையே தேர்தல் பிரச்சார கூட்டங்களில் பயன்படுத்தப்படும் என முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
அதனை அடுத்து அவைத்தலைவர் அடுத்த வருடம் ஜனவரி மாதம் 15ம் திகதிக்கு அப்பிரேரணையை ஒத்தி வைப்பதாக தெரிவித்ததுடன், சபையையும் எதிர்வரும் 11ம் திகதிக்கு ஒத்திவைத்தார்.
சிவாஜிலிங்கம் தனது பிரேரணை இன்றைய தினமே ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். இல்லாவிடின் 11ம் திகதி அமர்வில் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் அடுத்த வருடம் வரை கால அவகாசம் தேவையில்லை என தெரிவித்தார்.
அல்லது இன்றைய தினம் இப் பிரேரணை தொடர்பில் சபையில் வாக்கெடுப்பு நடாத்துமாறு கோரினார். அதனை எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசாவும் ஏற்றுக்கொண்டு அப்பிரேரணை தொடர்பில் வாக்கெடுப்புக்கு விடுமாறு கோரினார்.
அதற்கு அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் 11ம் திகதி அமர்வு வரவு செலவுத் திட்டம் தொடர்பான அமர்வு அதன் போது பிரேரணை ஏற்றுக்கொள்ளபட மாட்டாது எனவும் இச் சபையில் வாக்கெடுப்பு நடாத்த அனுமதிக்க மாட்டேன் எனவும் தெரிவித்து சபையை ஒத்திவைப்பதாக கூறி தனது ஆசனத்தை விட்டு எழுந்தார்.
அதனால் கோபமடைந்த சிவாஜிலிங்கம் விரைந்து சென்று அவைத்தலைவர் முன்பாக இருந்த செங்கோலை தூக்கி வீசினார். அதில் செங்கோலின் சிறு பகுதி சேதமடைந்தது.
சிவாஜிலிங்கத்தின் இச் செயற்பாட்டால் ஆளும் கட்சி உறுப்பினர்களிடையே கருத்து மோதல்களும் ஏற்பட்டது.
இலங்கையில் இனப்படுகொலை நடைபெற்றது என்ற இந்த பிரேரணை சிவாஜிலிங்கத்தால் கடந்த 6 மாதங்களுக்கு முன்பாகவே வடமாகாண சபையில் கொண்டுவரப்பட இருந்தது.
அந்த பிரேரணை தொடர்பில் வடமாகாண சபையின் ஆளும் கட்சியான தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் இடையில் பெரும் சர்ச்சை எழுந்தது.
அதனை அடுத்து தமிழ் தேசிய கூட்டமைப்பு எட்டு பேர் கொண்ட குழுவை அமைத்து மாகாண சபையில் இந்த தீர்மானம் கொண்டுவர முடியுமா என ஆராய்ந்து தெரிவிப்பதாகவும் அதுவரை இந்த பிரரனையை ஒத்தி வைக்குமாறும் தெரிவித்து இருந்தது.
பல காலமாக இழுத்தடிப்பு செய்யப்பட்டு வந்ததால் சிவாஜிங்கம் தரையில் அமர்ந்தும், கறுப்பு பட்டி அணிந்தும் கடந்த அமர்வுகளின் போது போராட்டங்களை நடாத்தி வந்தார். என்பது குறிப்பிடத்தக்கது
கிழக்கு மாகாண சபையிலும் செங்கோலை தூக்கி சென்ற மாகாண சபை உறுப்பினர்
04-12-2014