சோளம் பயிர்களை பாரியளவில் தாக்கி வரும் சேனா எனப்படும் படைப்புழுவின் தாக்கம் ஏனைய நெற் பயிர்களையும் தாக்கும் அபாயம் உள்ளதாக விவசாயத் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சேனா படைப்புழுக்களானது தற்போது நாடு முழுவதும் உள்ள சோளம் பயிர்செய்ககளை பாரியளவில் தாக்கி வருகின்றது. இந் நிலையில் இதன் தாக்கம் ஏனைய பயிர்களுக்கும் பரவும் நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயத் திணைக்களத்தின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் அதன் தாக்கத்திலிருந்து நெல் உள்ளிட்ட ஏனைய பயிர்களையும் பாதுகாக்க வேண்டிய கட்டாயம் தற்போது ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை சேனா படைப்புழுவை ஒழிப்பதற்காக உயிரியில் ரீதியில் கட்டுப்படுத்தும் வகையில் மூன்று நுண்ணுயிர்களை அறிமுகப்படுத்துவதற்கான ஆய்வுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
பௌதீக ரீதியிலான முறை,இந்த புழுவை கட்டுப்படுத்துவதற்கு மிகவும் பொருத்தமானதாகும். இதற்கு மேலதிகமாக புழுவை ஒழிப்பதற்காக வைரஸ்கள் உள்ளடக்கிய பொருட்கள் சிலவற்றையும் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்வதிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக சேனை பயிர்ச் செய்கை பூச்சியியல்துறை ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிறுவகத்தின் தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார்.
இந் நிலையில் சேனா படைப்புழுவை ஒழிப்பதற்கான வேலைத்திட்டத்தின் காரணமாக எதிர்வரும் இரண்டு வார காலப்பகுதியில் விவசாய திணைக்களத்தின் திட்டப் பிரிவை சேர்ந்த அதிகாரிகளுக்கான விடுமுறைகள் இவ்வாறு இரத்துச் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.