மலையக மக்கள் இலங்கைக்கு சுமார் 200 வருடங்களுக்கு முன்னர் தென்னிந்தியாவிலிருந்து இராமேஸ்வரம் ஊடாக படகுமூலம் பாக்கு நீரிணையைக் கடந்து மன்னாரை வந்தடைந்து, அங்கிருந்து மலையக பகுதிகளுக்கு நடந்து வந்தனர்.
வரும் வழியில் சிலருக்கு அம்மை நோய் ஏற்பட்டுள்ளது. அச்சந்தர்ப்பத்தில் காடுகளில் அம்மனுக்கு சிறிய கோயில்களை அமைத்து வழிபட்டு தங்கள் பயணங்களை தொடர்ந்தனர். சிலருக்கு வருத்தம் அதிகரித்தால் இடையே விட்டுவிட்டு வந்துவிடுவார்களாம்.
அம்மனின்மேல் அவர்கள் வைத்த நம்பிக்கையால் அம்மை நோய் குணமடைந்து பின்னால் வரும் கூட்டத்துடன் மலையகத்திற்கான பயணத்தை தொடர்ந்துள்ளதாக வரலாற்றுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவ்வாறான ஒரு சந்தர்ப்பத்திலேயே மாத்தளையில் உள்ள அம்மன் கோயில் உருவானதாக தெரிவிக்கப்படுகிறது.
மன்னார் வழியாக தம்புள்ள, மாத்தளை வந்தடைந்து மக்கள் தங்கி இருந்த இடமே மாத்தளை கோயில் என்றும் அப்போது அங்கு மரத்தின் அடியில் அம்மனை வைத்து வழிபட்டு வந்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன.
அந்த மரம் தற்போதும் மாத்தளை ஆலயத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
அம்மன் வழிபாட்டில் மலையக மக்களின் வாழ்வியலுக்கு நெருங்கிய தொடர்புகள் காணப்படுகின்றன.
அதன் காரணமாகவே தோட்டங்கள்தோறும் அம்மன் ஆலயங்கள் காணப்படுகின்றன. அம்மன் 1008 அவதாரங்களைக் கொண்டவராக போற்றப்பட்டாலும், இந்த 1008 அவதாரங்களில் பக்தர்களின் வழிபாட்டிற்கேற்ப அந்த அவதாரங்கள் அமைந்துள்ளன.
இவை ஒவ்வொன்றும் வித்தியாசமான வழிபாட்டு முறையாகும். இதில் பத்திரகாளி அம்மன் வழிபாடு அனைவரையும் ஒரு கணம் மெய்சிலிர்க்க வைக்கின்றது. சிலர் இத் தெய்வத்திற்கு கோழி, ஆடு போன்றவற்றைப் பலி கொடுக்கின்றனர்.
இவ்வாறான செயற்பாடுகள் இன்று மலையகத்தில் பெரும்பாலான இடங்களில் நடைபெறுகின்றன.
இவ்வாறான அம்மன் வழிபாடுகளில் மிகவும் சிந்திக்கக் கூடியவகையில் ஒன்றாக லிந்துலை, சென்றெகுலர்ஸ் தோட்டத்தில் ஸ்ரீ முத்து மாரியம்மன் ஆலயத்தில் வருடாந்தம் இடம்பெற்றுவரும் தேர்த் திருவிழாவைக் குறிப்பிடலாம்.
இந்தத் திருவிழாவையொட்டி அமைக்கப்படும் தேர் பெண்கள் அணியும் ‘சேலைகளை’ கொண்டு அமைக்கப்படுகிறது. இந்த “சேலைத்தேர்” பலரும் அறியாத ஒரு விடயமாகவே உள்ளது.
சேலைத்தேர் என்பது முழுதும் சேலைகளால் உருவாக்கப்பட்டதாகும். அந்தத் தோட்டத்தில் வாழ்ந்த கருப்பண்ணன் என்ற தொழிலாளி ஒருவரினால் 1932 ஆம் ஆண்டளவில் இந்தத் தேர் உருவாக்கப்பட்டுள்ளது.
இவர் கைக்கத்தி (கவ்வாத்துக்கத்தி) என்று சொல்லக் கூடிய கத்தியிலேயே இதனை வடிவமைத்துள்ளார்.
தமிழ்நாட்டின் (தென்னிந்தியா) நாமக்கல் பிரதேசத்தில் இவ்வகையான சேலைத்தேர் “நாமக்கல்” தேர் என்றே அழைக்கப்படுகின்றது.
இந்தத் தோட்டத்தில் வாழும் பெரும்பாலான மக்கள் இந்தியாவில் பெரம்பத்தூர் மற்றும் நாமக்கல் பிரதேசங்களில் இருந்து இலங்கைக்கு வந்துள்ளவர்களாவர்.
அதனால் அந்த பிரதேச பண்பாடு, சமய வாழ்க்கைமுறை மற்றும் கலாசாரங்களை இங்கும் பின்பற்றிவருகின்றனர்.
இந்தத் தோட்டத்தில் வாழும் பெண் வருடத்தில் முதன்முதலாக கொள்வனவு செய்யும் சேலையை அம்மன் கோயிலுக்கு ஒதுக்கி விடுவார்களாம்.
அந்தத் தோட்டத்தில் 300 பெண்கள் இருந்தால் கிட்டத்தட்ட 200 க்கும் மேற்பட்ட சேலைகள் ஆலயத்தை வந்தடைகின்றனவாம்.
பின்னர் சேலைகளை வழங்கியவர்களின் பெயர்கள்பற்றி அவற்றுக்கு அடையாளமிடப்படுகின்றன. அந்த சேலைகளினால் தேரை அலங்கரிக்கின்றனர்.
முற்றிலும் வண்ண வண்ண சேலைகளின் மூலம் இந்தத் தேர் அலங்கரிக்கப்படுகிறது. ஆணிகள் பாவிக்கப்படுவதில்லை.
சனல்களினாலேயே கட்டப்படுகின்றது.
தேரின் தூண்களுக்கு வர்ண பூச்சுக்கள் பூசப்படுவதில்லை. இந்தத் தேரில் அம்மன் சிலை வைக்கப்பட்டு பக்தர்கள் புடைசூழ வீதிஉலா இடம்பெறுகிறது.
ஆனால், தற்போது ட்ரக்டர் வண்டி மூலம் தேர் கொண்டு செல்லப்படுகின்றது. விழா முடிவுற்றதும் இந்த சேலைகள் குறித்த அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்படுகின்றது.
இந்த சேலையை பெண்கள் மிக முக்கியமான காரியங்களின்போதும், வைபவங்களின்போதும் அணிவர். அம்மன் தேருக்கு பாவித்த சேலையை உடுத்தும்போது பெண்களின் மனதில் பயபக்தியும், ஒழுக்கமும், தீய செயல்களை தவிர்த்து மனப்பக்குவம் ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதுபோன்ற வழிபாட்டுமுறை மலையகத்தில் மேற்படி தோட்டத்தில் மாத்திரமே இடம் பெற்று வருகிறது. இதன் காரணமாகவே ஏனைய மலையக தோட்டபுறங்களுக்கு இவ்வாறு ஒரு சேலைத்தேர் இருப்பது தெரியவில்லை.