சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் பலர் மஹிந்தவை ஒதுக்கி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சுதந்திரக் கட்சியின் தலைவராக ஏற்றுக்கொண்டுள்ளபோதிலும் அவர்களுள் பலர் மஹிந்தவை கண்டால் நடுங்கவே செய்கின்றனர்.கடந்த வாரம்கூட அவ்வாறான ஒரு சம்பவம் நாடாளுமன்றில் இடம்பெற்றது.
நாடாளுமன்றிருக்குச் சென்ற மஹிந்த பகல் உணவை எடுப்பதற்காக நாடாளுமன்றின் உணவுச்சாலைக்குச் சென்றார்.அங்கு ஓர் ஓரத்தில் அமர்ந்துகொண்டு அமைச்சர் பைஸர் முஸ்தபா உணவு உண்டுகொண்டிருப்பதைக் கண்டு அவர் அருகே சென்று ”என்ன பைசர் சாப்பிடுறீங்கபோல” என்றார்.
இதை எதிர்பார்த்திடாத அமைச்சர் சடாரென எழுந்து -அடக்கம் ஒடுக்கமாக நின்று ”ஆமாம் சேர்” என்றார்.
அமைச்சரின் முதுகிலே சின்னதாக ஒரு அடியைப் போட்டுவிட்டு ”என்ன பைஸர்! மாகாண சபைத் தேர்தலையும் ஒத்திப்போடப் போகிறீர்கள் போல” என்று கூறிவிட்டு அடுத்த மேசைக்குச் சென்றுவிட்டார் மஹிந்த.
பைஸருக்கோ இந்தக் கேள்விக்கான பதிலை வழங்கிவிட வேண்டும்போல் இருந்தது.உடனே சோற்றுப் பீங்கானை தூக்கிக்கொண்டு மஹிந்த அமர்ந்திருந்த ஆசனத்துக்குப் பக்கத்தில் போய் அமர்ந்தார்.
”நான் என்ன சேர் செய்வது?இது நான் எடுத்த முடிவு இல்லயே.என்ன நடந்திருக்கும் என்று உங்களுக்குத் தெரியும்தானே.” என்றார் பைஸல்.
” மேலிடத்து உத்தரவ ஏற்று சும்மா சிக்கலில் வீழ்த்துடாதீங்க பைஸர் ” என்று ஒருவகையான தொனியில் கூறினார் மஹிந்த.
இந்த விடயத்தில் மஹிந்த தன்மீது குற்றம் சுமத்திவிடக்கூடாது என்பதில் பைஸர் குறியாக இருந்தது பைஸரின் செயற்பாட்டில் தெரிந்தது.சாப்பாட்டில் கவனம் செலுத்தாது மஹிந்தவை சமாளிப்பதிலேயே கவனம் செலுத்தினார்.
மஹிந்த அங்கும் ,இங்கும் எழுந்து செல்லும்போதெல்லாம் பைசரும் சோற்றுப் பீங்கானோடு மஹிந்தவின் பின்னால் ஓடித்திரிந்தமை கண்கொள்ளா காட்சியாக இருந்தது.
மஹிந்த அப்போது ஊட்டிய பயம் இப்போதும் நல்லா வேல செய்துபோல.
[எம்.ஐ.முபாறக்-சிரேஷ்ட ஊடகவியலாளர் ]