ஜனாதிபதித் தேர்தல் விவகாரங்கள் அரசியலில் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கின்றன. ஐக்கிய தேசியக் கட்சி தமது வேட்பாளர் யார் என்பதையிட்டு அதிகம் அலட்டிக் கொள்ளாவிட்டாலும், எதிரணியின் சார்பில் யார் வேட்பாளர் என்ற கேள்விக்கான பதில் இன்னமும் கிடைத்தபாடாக இல்லை.
ஒருபக்கத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, மைத்திரிபால சிறிசேனவை மீண்டும் போட்டியில் நிறுத்துவதற்கு மஹிந்த தரப்பு இணங்கும் என்ற கனவில் இன்னமும் இருக்கிறது. அதற்கான பேச்சுக்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
ஆனால், ராஜபக் ஷ தரப்போ, தமது குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் தான், வேட்பாளர் என்பதில் உறுதியாக இருக்கிறது. பஷில் ராஜபக் ஷ, கோத்தாபய ராஜபக் ஷ, சமல் ராஜ பக் ஷ மாத்திரமன்றி, ஷிராந்தி ராஜபக் ஷவின் பெயர் கூட அடிபடத் தொடங்கியிருக்கிறது.
யார் வேட்பாளர் என்பதை உறுதி செய்து கொண்டு தமது வேட்பாளரை தெரிவு செய்ய முடியாத நிலையை ஐ.தே.கவுக்கு ஏற்படுத்தும் யுக்தியாக இருந்தாலும், இது அவர்களுக்குள்ளேயும் குழப்பங்களும் நம்பிக்கையீனங்களும் இருப்பதை அம்பலப்படுத்தியிருக்கிறது.
கம்பஹாவில் கடந்தவாரம் பொதுஜன முன்னணி உள்ளூராட்சி சபை உறுப்பினர்களின் கூட்டத்தில், உரையாற்றிய பஷில் ராஜ பக் ஷ, தமது கட்சிக்கு வெளியே நிறுத்தப்படும் வேட்பாளர் ஒருவரை ஆதரிக்குமாறு உறுப்பினர்களைக் கேட்டுக் கொள்ளமாட்டோம் என்றும், பொதுஜன முன்னணி வேட்பாளரை நிறுத்தும், மொட்டு சின்னத்திலேயே போட்டி என்றும் உறுதியாகத் தெரிவித்திருக்கிறார்.
இது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும், மைத்திரிபால சிறிசேனவுக்கும் அதிர்ச்சியைக் கொடுக்கக் கூடிய செய்தி.
அண்மையில், ஜனாதிபதித் தேர்தல், கூட்டணி தொடர்பாக மஹிந்த ராஜ பக் ஷ தரப்புக்கும், மைத்திரிபால சிறிசேன தரப்புக்கும் இடையில், நடத்தப்பட்ட பேச்சுக்களில் கூட பஷில் ராஜ பக் ஷ பங்கேற்கவில்லை.
மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தும் திட்டத்தை பஷில் ராஜபக் ஷ கொண்டிருக்கவில்லை.
அதேவேளை, மஹிந்த ராஜபக் ஷ இந்த ஜனாதிபதித் தேர்தலில் தனக்கு இடத்தை விட்டுத் தரக் கூடிய ஒரு ‘டம்மி’யையே வேட்பாளராக நிறுத்த விரும்புகிறார் எனத் தெரிகிறது.
பெங்களூரில் அவர், தாம் நிறுத்தும் வேட்பாளர் வெற்றி பெறுவார் என்றும் அதற்கு பின்னர் அரசியலமைப்பில் திருத்தம் செய்யப்படும் என்றும் கூறியிருக்கிறார். இதன்மூலம், அவர் மீண்டும் ஜனாதிபதியாகும் கனவில் இருக்கிறார் என்பது உறுதியாகியிருக்கிறது.
அவ்வாறு அரசியலமைப்பைத் திருத்துவதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைக்க வேண்டும். அதைவிட, அடுத்த ஜனாதிபதியும் அவருக்கு வழிவிட்டுக் கொடுக்க வேண்டும்.
கோத்தாபய ராஜபக் ஷவோ, சமல் ராஜபக் ஷவோ அவ்வாறு வழிவிட்டுக் கொடுப்பார்களா என்ற சந்தேகம் மஹிந்தவுக்கு இருக்கலாம்.
அதனால் தான் அவர் ஷிராந்தி ராஜபக் ஷவை நிறுத்த திட்டமிடுகிறார் என்ற கதையும் அடிபடத் தொடங்கியிருக்கிறது.
அதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் மத்தியில் பஷில் ராஜபக் ஷ நிகழ்த்தியிருக்கின்ற உரை, மஹிந்த ராஜபக் ஷவுக்குக் கூட சவாலான ஒன்று தான்.
அந்த கூட்டத்தில் தமது கட்சி அடிமட்டத் தொண்டர்களில் இருந்து உருவாக்கப்பட்டது என்றும், அவர்களின் விருப்பங்களுக்கு அமையவே முடிவுகள் எடுக்கப்படும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.
அதைவிட இந்தக் கட்சியில் தலைவர்கள் உருவாக முன்னர், தொண்டர்கள் தான் அதனைக் கட்டியெழுப்பினார்கள் என்ற கருத்தையும் அவர் முன்வைத்திருப்பது முக்கியமானது..
உண்மையில், மஹிந்த ராஜ பக் ஷ பொதுஜன முன்னணியின் நிழல் தலைவராக இருந்தாலும் இன்றுவரை அவர் அதற்கு வெளிப்படையாகத் தலைமை தாங்கவில்லை.
கட்சியின் கட்டமைப்பு அறிவிக்கப்பட முன்னரே அதனை பஷில் ராஜபக் ஷ தான் கட்டியெழுப்பினார். ஆனால், அவரும் தன்னை தலைவராக அறிவிக்கவில்லை.
அதிகபட்ச ஜனநாயகமுள்ள கட்சியாக, தொண்டர்களின் கருத்தையே பிரதிபலிக்கக் கூடிய கட்சியாகவே அவர் பொதுஜன முன்னணியை அடையாளப்படுத்தியிருக்கிறார்.
அதனைவிட “கட்சியின் தலைமை ஜனாதிபதி வேட்பாளரைத் தீர்மானிக்க முடியாது, உறுப்பினர்கள் விரும்புகின்றவரைத் தான் நிறுத்த முடியும்” என்றும் பஷில் ராஜபக் ஷ கூறியிருப்பது தான் சிக்கலான விடயம்.
இதற்கு முன்னர் பஷில் ராஜபக் ஷவும் சரி, பொதுஜன முன்னணியினரும் சரி, மஹிந்த ராஜபக் ஷ கைகாட்டுபவர் தான் ஜனாதிபதி வேட்பாளர் என்று கூறி வந்தனர்.
இப்போது பஷில் ராஜபக் ஷ, அதற்கு மாறாக, முடிவெடுக்கும் அதிகாரத்தை மஹிந்தவிடம் கொடுக்காமல் உறுப்பினர்களிடம் கொடுக்க முனைந்திருக்கிறார்.
ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவுக்கு பொதுஜன முன்னணி ஆதரவளிக்கப் போகிறது என்ற தகவல்கள், அந்தக் கட்சியினரை பெரிதும் உற்சாகமிழக்கச் செய்திருக்கிறது. யாரை எதிர்த்தோமோ அவருக்கே வாக்களிக்குமாறு மஹிந்த ராஜபக் ஷ உத்தரவிட்டு விடுவாரோ என்ற பயம் அவர்களுக்கு வந்திருக்கிறது.
கம்பஹாவில் நடந்த கூட்டத்தில் அந்தப் பயத்தையும், கவலையையும் அவர்கள் வெளிப்படுத்தியிருக்கிறார்கள். அந்தக் கட்டத்தில் தான், முடிவெடுக்கும் அதிகாரம் உறுப்பினர்களிடம் தான் இருக்கிறது என்ற உறுதிமொழியைக் கொடுத்திருக்கிறார் பஷில் ராஜபக் ஷ
இந்தநிலையில், பொதுஜன முன்னணியில், அசைக்க முடியாத தலைவராக கணிக்கப்பட்ட மஹிந்த ராஜபக் ஷ, இரண்டாமிடத்துக்குத் தள்ளப்பட்டு விட்டார்,
அதேவேளை, கோத்தாபய ராஜ பக் ஷ மற்றொரு கணக்கைப் போட்டு இயங்கிக் கொண்டிருக்கிறார். தன்னை ஜனாதிபதித் தேர்தலுக்குத் தயாராகுமாறு மஹிந்த ராஜபக் ஷ கூறி விட்டார் என்றும் அமெரிக்க குடியுரிமையால் அதற்கு தடை ஏதும் வராது என்றும் உற்சாகத்துடன், அவசரப்பட்டு கூறப் போய், இப்போது அவர் சிக்கலில் இருக்கிறார்.
கோத்தாபய ராஜபக் ஷ கூறியது தவறு என்றும், பொதுஜன முன்ன ணியின் (8ஆம் பக்கம் பார்க்க)
ஜனாதிபதி வேட்பாளர் யார் என்று முடிவாகவில்லை என்றும் மஹிந்த ராஜபக் ஷ, பஷில் ராஜபக் ஷ, சமல் ராஜபக் ஷ உள்ளிட்ட அனைவருமே கூறி விட்டார்கள்.
இதிலிருந்து, அவர்களுக்குள் இந்த விடயத்தில் ஒருமைப்பாடு இல்லை என்பது உறுதியாகியிருக்கிறது.
கோத்தாபய ராஜபக் ஷவை வேட்பாளராக நிறுத்துகின்ற விடயத்தில் இரண்டு சிக்கல்கள் உள்ளன. ஜனாதிபதியாகத் தெரிவாகிய பின்னர் அவர், மஹிந்தவின் சொல்லுக்கு கட்டுப்படுவாரா என்பது அதில் முதலாவது.
இரண்டாவது சிக்கல், அவரை போட்டியில் நிறுத்தினால் வெற்றி பெற முடியுமா என்ற சந்தேகம்.
வெற்றிபெறக் கூடிய ஒருவரையே வேட்பாளராக நிறுத்துவது என்பதில் மஹிந்த தரப்பு உறுதியாக இருக்கிறது. ஜனாதிபதித் தேர்தலில் தோல்வி ஏற்பட்டு விட்டால், அடுத்து வரும் தேர்தல்களில் பொதுஜன முன்னணி சிக்கல்களை சந்திக்கும். அதன் பயணத்தில் தொய்வு வந்து விடும்.
கோத்தாபய ராஜபக் ஷவுக்கு சிறுபான்மையினரின் வாக்குகள் கிடைக்காது என்பது பொதுவான கணிப்பு. அது தான் மஹிந்த தரப்பை யோசிக்க வைத்திருக்கிறது.
ஆனால், தனக்கு அல்லது பொதுஜன முன்னணி வேட்பாளருக்கான வெற்றியை உறுதிப்படுத்த கோத்தாபய ராஜபக் ஷ சில விஞ்ஞானபூர்வமான அணுகுமுறைகளையும், கணக்குகளையும் போட முனைகிறார்.
2015ஆம் ஆண்டு தேர்தலில் மஹிந்த ராஜபக் ஷ 4 இலட்சம் வாக்குகளால் தான் தோல்வியடைந்தார். அவர் இரண்டரை இலட்சம் வாக்குகளைக் கூடுதலாகப் பெற்றிருந்தால், அவரால் வென்றிருக்க முடியும் என்று அவர் அண்மையில் ஒரு செவ்வியில் கூறியிருக்கிறார்.
சிறுபான்மையின மக்களின் ஆதரவு இல்லாமல், ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற முடியும் என்பது அவரது கணிப்பு.
கொழும்பு , கம்பஹா மாவட்டங்களில், மஹிந்த ராஜபக் ஷவுக்கு கிடைத்திருக்க வேண்டிய பாரம்பரிய வாக்குகள் கிடைக்கவில்லை என்றும், அவர் கூறியிருக்கிறார்.
இந்த இரண்டு மாவட்டங்களில் இருந்தும், வழக்கமாக கிடைக்கக் கூடிய பாரம்பரிய வாக்குகளை உறுதிப்படுத்திக்கொண்டால், அடுத்ததாக மிதக்கும் வாக்காளர்களின் ஆதரவுடன் வென்று விடலாம் என்று அவர் கணக்குப் போடுகிறார்.
தமிழ், முஸ்லிம் வாக்குகள் முக்கியமானவை என்பதை அவர் ஏற்றுக் கொண்டாலும், அவற்றை மாத்திரம் நம்பிக் கொண்டிராமல், பாரம்பரிய வாக்காளர் தளத்தை வைத்துக்கொண்டே வெற்றியைப் பெற்று விடலாம் என்று அவர் நினைக்கிறார்.
ஆனால், மஹிந்த ராஜபக் ஷ இந்தளவுக்கு சாதாரணமாக எடை போடக் கூடியவர் அல்லர். அவர் தனக்குக் கிடைக்கக் கூடிய ஒரு வாக்கைக் கூட இழக்க விரும்பாத அரசியல்வாதி. அதனை அவர் அண்மையில், தமிழ் ஊடகஆசிரியர்களுடன் நடத்திய ஒரு சந்திப்பில் கூட கூறியிருக்கிறார்.
2015 ஜனாதிபதித் தேர்தலின் எல்லா முடிவுகளும் அறிவிக்கப்பட முன்னரே, வடக்கு, கிழக்கில் உள்ள தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை முடிவுகளை வைத்துக்கொண்டே, தனக்கு தோல்வி உறுதி என கணித்து, அதிகாலையிலேயே அலரி மாளிகையை விட்டு வெளியேற முடிவு செய்தவர் அவர்.
அப்படிப்பட்டவர், அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளர் விடயத்தில் அவ்வளவு சுலபமாக முடிவுகளை எடுத்து விடமாட்டார். சூடு கண்ட பூனையல்லவா அவர் ?
-சத்ரியன்