ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் விளம்பரங்களில் அனுமதியின்றி பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படத்தைப் பயன்படுத்தியதற்காக அந்த நிறுவனத்திற்கு சுமார் 500 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது இலவச சலுகை விளம்பரத்தில் பிரதமர் மோடியின் புகைப்படங்களை பயன்படுத்தியது. இதற்காக மத்திய அரசிடம் எந்தவித முன் அனுமதியும் பெறவில்லை எனக் கூறப்படுகிறது. தனியார் நிறுவனத்தின் விளம்பரத்தில் பிரதமரின் புகைப்படத்தை பயன்படுத்தியதற்கு நாடு முழுவதும் கண்டனக் குரல்கள் எழுந்தன.
இந்த நிலையில் நாடாளுமன்றத்தில் இந்த பிரச்சனையை ஏதிர்கட்சிகள் எழுப்பினர். ஏதிர்கட்சியின் கேள்விகளுக்குப் எழுத்துப்பூர்வமாக பதிலளித்த தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் ராஜ்யவர்தன் சிங், மத்திய அரசின் அனுமதியில்லாமல் மோடியின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளது என்று கூறினார்.
இதனை தொடர்ந்து, பிரதமரின் புகைபடத்தை அனுமதியின்றி விளம்பரத்திற்கு பயன்படுத்திய ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திடம் அபராதம் வசூலிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அரசு அதிகாரிகளின் பெயர், புகைப்படம் மற்றும் அரசு முத்திரையை தவறாகப் பயன்படுத்துவதை தடுக்கும் தண்டனைச் சட்டத்தின் கீழ் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திற்கு ரூ.500 அபராதம் விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.