ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவரது நடவடிக்கைகள் அனைத்தும் ஜெயலலிதாவை மிஞ்சும் வகையில் இருந்தது.
ஜெயலலிதா, கடந்த டிசம்பர் 5ம் தேதி காலமானார். அவரது மறைவுக்குப் பிறகு சசிகலாவை தலைமை ஏற்க வருமாறு அ.தி.மு.க.வின் முன்னணி நிர்வாகிகள் வலியுறுத்தினர்.
இதையடுத்து டிசம்பர் 28ம் தேதி பொதுக்குழுவில் சசிகலா, பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். அடுத்து அவர் பொதுச் செயலாளராக பதவி ஏற்றுக் கொண்டார்.
அடுத்து சசிகலாவை முதல்வராக வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. சசிகலாவின் தலைமையை ஏற்காத அ.தி.மு.க.வினர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவை ஆதரித்து வருகின்றனர்.
ஜெயலலிதா உயிரோடு இருந்தக் காலக்கட்டத்தில் போயஸ் கார்டன் இல்லம் முன்பும், அப்போலோ மருத்துவமனை முன்பும் காத்திருந்த தீபாவை கண்டுக் கொள்ளாத அ.தி.மு.க.வினர் இப்போது ஆதரவு தெரிவிப்பதாக சொல்வதுதான் அரசியல்!
ஜெயலலிதா உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தியபோது கூட்டத்தோடு கூட்டமாக வந்து அஞ்சலி செலுத்தி விட்டு சென்றார் தீபா. ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு தீபாவிற்கு கொடிப்பிடிக்கத் தொடங்கி உள்ளனர் அதிருப்தி அ.தி.மு.க.வினர்.
தீபா, அரசியலுக்கு வருவதாக இன்று அறிவித்துள்ளார். ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24ம் தேதி அரசியல் தொடர்பான அடுத்தக்கட்ட அறிவிப்பை வெளியிடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பத்திரிகையாளரை சந்தித்த தீபா, ஜெயலலிதாவைப் போலவே ஆங்கிலத்தில் சரளமாக பேசினார். நிருபர்களின் கேள்விகளுக்கு அமைதியாக பதிலளித்தார்.
ஆனால் அந்த பதில்களில் உருப்படியான, தெளிவான தகவல்கள் எதுவுமே இல்லை. பேட்டியின் போது தீபாவின் மேனரிஷம் முழுவதும் ஜெயலலிதாவைப் போல தெரிந்தது.
ஜெயலலிதா பேட்டி அளிக்கும் போது அவருக்கு அருகில் யாரும் நிற்க முடியாது. ஆனால் தீபா அருகிலேயே நிருபர்கள் நிற்க முடிந்தது. இதற்கு முன்பு தொண்டர்களை தீபா சந்தித்த போது டென்ஷனாகி வீட்டுற்குள்ளே சென்று விட்டார்.
ஆனால் இந்த முறை அவரிடம் அந்த டென்ஷன் இல்லை. ஜெயலலிதாவின் ஸ்டைலை சசிகலாவும், தீபாவும் அப்படியே பின்பற்றி வருகின்றனர். தீபாவைப் பார்க்கும் போது இளமை கால ஜெயலலிதாவை நினைவுப்படுத்துவதாக சொல்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி அரசியலுக்குள் கால்பதிப்பதாக தெரிவித்த தீபாவுக்கு அரசியல் பாடத்தை கற்றுக் கொடுக்க தனி டீமே களமிறங்கி இருக்கிறது.
அந்த டீம், தீபாவிடம் எப்படி தொண்டர்களிடமும், பத்திரிகையாளர்களிடமும் பேச வேண்டும் என்று சொல்லிக் கொடுத்துள்ளனர். அதை அப்படியே பின்பற்றி வருகிறாராம் தீபா.
ஜெயலலிதாவின் வழியை பின்பற்றுவோம் என்று சொல்லி இருக்கிறார் தீபா. ஜெயலலிதாவின் வழி என்பது சாதாரணமானது இல்லை. அதை பின்பற்ற தனி துணிச்சல் தேவை.
எம்.ஜி.ஆரின் உடல் கொண்டு செல்லப்பட்ட ராணுவ வண்டியிலிருந்து ஜெயலலிதா தள்ளி விடப்பட்ட பிறகு அ.தி.மு.க.வின் தலைமை பதவிக்கு வர அவரின் உழைப்பு சாதாரணமானது அல்ல.
அவரைப் போல இருக்கும் தீபாவும், ஜெயலலிதா ஸ்டைலில் மட்டுமல்ல…. மற்ற செயல்களிலும் அவரைப்போல தனித்துவமாக செயல்பட்டால் மட்டுமே அரசியலில் முத்திரைப் பதிக்க முடியும்.
இதுகுறித்து தீபாவின் ஆதரவாளர் இளையராஜா கூறுகையில், “அம்மாவின் வாரிசான தீபாவின் தலைமையில் செயல்பட நாங்கள் முடிவு எடுத்து விட்டோம்.
அரசியலுக்கு வருவதாக மட்டுமே தீபா அறிவித்துள்ளார். அதை நாங்கள் வரவேற்றாலும் இன்றைய சூழ்நிலையில் எம்.ஜி.ஆர்., அம்மா வழிநடத்திய அ.தி.மு.க.வையும், தொண்டர்களையும் காப்பாற்ற வேண்டிய கடமை அவருக்கு உள்ளது.
இதனால் தீபா, உடனடியாக மக்களையும், தொண்டர்களையும் சந்திக்க தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள வேண்டும். அப்போது தீபாவுக்கு அதிகளவில் ஆதரவு கிடைக்கும்.
காலதாமதமில்லாமல் எம்.ஜி.ஆர்., அம்மாவின் தொண்டர்களை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு தீபாவுக்கு உள்ளது. தீபாவை சந்திக்க என்னுடைய தலைமையில் திருவேற்காடு பகுதியிலிருந்து 30 வேன்களில் இன்று தி.நகர் வந்துள்ளோம்” என்றார்.