திருநாவுக்கரசர்… தமிழகத்தின் மூத்த அரசியல்வாதி. இளம் வயதிலேயே துணை சபாநாயகரான இவர், எம்.ஜி.ஆரின் செல்லப்பிள்ளை. அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதியில் தொடர்ந்து ஆறுமுறை போட்டியிட்டு வென்றவர்.
அ.தி.மு.க உடைந்தபோது ஜெயலலிதாவின் பக்கம் நின்று, அவர் பெரும் அரசியல் சக்தியாக உருவெடுக்கத் துணை நின்றார். பிறகு, அ.தி.மு.கவிலிருந்து விலகி பாரதிய ஜனதா எம்.பி ஆனார். இதையடுத்து,
காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த இவர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவரானார். கடந்த 40 ஆண்டுக்கால தமிழக அரசியலில் முக்கிய இடம் வகிக்கும் திருநாவுக்கரசரிடம், மனஅழுத்தம் ஏற்பட்ட தருணங்களைப் பற்றிக் கேட்டோம்.
திருநாவுக்கரசர்
“இன்றைய சூழல்ல டென்ஷன், ஸ்ட்ரெஸ் இல்லாத மனுஷனைப் பார்க்கவே முடியல. கிராமப்புறத்துல வாழ்றவங்களைவிட நகரப்பகுதிகள்ல வாழ்றவங்களுக்கு ஒவ்வொரு மணிநேரமும் போராட்டம்தான்.
காலையில கண் முழிச்சி பால் வாங்கப் போறதுல இருந்து ராத்திரி வீடு திரும்புறவரைக்கும் வேலைகள் இருக்கு. அதுலயும் உடனடியா எடுக்கவேண்டிய முடிவுகள் வேற வரிசைகட்டி நிக்கும். அவங்கவங்க வாழ்க்கைக்கு ஏத்தமாதிரி டென்ஷன் இருக்கத்தான் செய்யும்.
எம்.ஜி.ஆருடன் திருநாவுக்கரசர்
குறிப்பா எங்களைமாதிரி அரசியல்வாதிகளுக்கு வெற்றியும் தோல்வியும் மாறிமாறி வரும். திடீர்னு பதவி கிடைக்கும், திடீர்னு எந்தப்பதவியும் இருக்காது.
நல்லா பழகுனவங்களும், நம்பிக்கையானவங்களும்கூட துரோகம் பண்ணுவாங்க. இது ரொம்ப மன அழுத்தத்தை உண்டாக்கும். இக்கட்டான நேரங்கள்ல, அதை ரொம்பவும் சீரியஸா எடுத்துக்கிட்டா, அது பதற்றத்தை உண்டாக்கி, மன அழுத்தத்தையும் மன இறுக்கத்தையும் தரும். இந்தமாதிரி நேரங்கள்ல தைரியம், மன உறுதி, மனத்தெளிவு ரொம்பவும் அவசியம்.
என்னைப் பொறுத்தவரை இந்த மாதிரி விஷயங்களை ரொம்ப ஈஸியா எடுத்துக்குவேன். நெருங்கின சொந்தத்துல உள்ளவங்க இறந்துபோனா என்னால அதை ஏத்துக்க முடியாது; அப்போ ரொம்பவும் மனசு கஷ்டமாகும்.
எனக்கு ஆறு வயசு இருக்கும்போதே என்னோட அம்மா இறந்துட்டாங்க. அதுக்குப் பிறகு அம்மாவோட தங்கையை அப்பா கல்யாணம் பண்ணிக்கிட்டார்.
சின்னம்மாவோட அரவணைப்பிலதான் நான் வளர்ந்தேன். அதேமாதிரி எங்க பெரியப்பாதான் என்னை வளர்த்தெடுத்தார். அவர் எங்க ஊர்ல உள்ள உடமரத்துக் காளியோட பக்தர். அதை மட்டும்தான் கும்பிடுவார்.
என்னோட வாழ்க்கையில என்னென்ன நடக்கும்னு ஒரு சித்தர் மாதிரியே சொல்வார். அவர் சொன்னபடி நிறைய பலிச்சுது. நான் படிக்கிற காலத்திலயே, `நீ படிச்சு வக்கீலாவ… ஆனா வக்கீல்தொழில் பார்க்கமாட்ட. இருந்தாலும் உலகம் புகழுற மாதிரி பேர் வாங்குவ’னு சொன்னார்.
அவர் சொன்னமாதிரி வக்கீலுக்குப் படிச்சேன், ஆனா வக்கீல் தொழில் பார்க்கல. 1977 – ம் வருஷம் நடந்த சட்ட மன்றத் தேர்தல்ல அறந்தாங்கித் தொகுதியில வேட்பாளராகப் போட்டியிட்டு ஜெயிச்சேன். தொடர்ந்து ஆறுதடவை அந்தத் தொகுதி எம்.எல்.ஏ ஆனேன்.
முதல்தடவை ஜெயிச்சப்பவே, எம்.ஜி.ஆர் என்னை தமிழகச் சட்டமன்றத்தோட துணை சபாநாயகரா ஆக்கினார். 1979 – ம் வருஷம் எல்லா நாடுகள்ல உள்ள சபாநாயகர்களுக்கும் ஆஸ்திரேலியாவுல ஒரு மாநாடு நடந்துச்சு.
அதுல கலந்துக்கறதுக்காக என்னை எம்.ஜி.ஆர் அனுப்பி வெச்சார். நான் மாநாட்டுல இருந்தப்போ என்னோட பெரியப்பா எதிர்பாராதவிதமா இறந்துட்டார்.
எனக்குத் தெரிஞ்சா நான் கஷ்டப்படுவேன்னு சொல்லாம விட்டுட்டாங்க. இந்தியா வந்தபிறகுதான் என்கிட்ட சொன்னாங்க. ரொம்ப அக்கறையோட என்னை வளர்த்தவர் இறந்த கடைசி நேரத்துல பார்க்கக்கூட முடியாமப் போச்சேனு ரொம்ப கஷ்டமா இருந்துச்சு.
அதுக்கப்புறம் எம்.ஜி.ஆரின் மறைவு என்னை மிகவும் பாதிச்சது. அரசியலில் என்னை அடையாளம்காட்டி வார்த்தவர், வளர்த்தவர். அவரின் மறைவு எனக்கு ஆறா பெருந்துயர். இந்த மூன்று மரணங்களையும் கடந்துபோக ரொம்பவும் சிரமப்பட்டேன்.
1988 – ல அ.தி.மு.க இரண்டு பிரிவா உடைஞ்சுச்சு. 1989 -ம் ஆண்டு நடந்த தேர்தல்ல ஜெயிச்சி ஜெயலலிதா எதிர்க்கட்சித் தலைவரா ஆனாங்க. அப்போ ஒரு பிரச்னையால சட்டசபைக்கு வர்றதில்லைனு முடிவெடுத்தாங்க. அவங்களுக்குப் பிறகு என்னை எதிர்க்கட்சித்தலைவரா ஆக்கலாம்னு பல பத்திரிகைகள்ல எழுதினாங்க.
எங்க கட்சிக்காரங்க எம்.எல்.ஏக்கள் பலரும் நான்தான் அடுத்து எதிர்க்கட்சித்தலைவர்னு வாழ்த்தெல்லாம் தெரிவிச்சாங்க. ஆனா, எனக்குப் பதிலா எஸ்.ஆர். ராதாவை எதிர்க்கட்சித் தலைவராக்குனாங்க. இந்த முடிவை யாரும் எதிர்பார்க்கலை.
எனக்கு நிகழ்ந்த முதல் அவமானம். என்னால அதைத் தாங்க முடியல. சிலகாலம் கழிச்சி ஆறு எம்.எல்.ஏக்களோட தனியா பிரிஞ்சி வந்து எம்.ஜி.ஆர். அண்ணா தி.மு.கவைத் தொடங்கினேன்.
1998 -ம் வருஷம் நடந்த பாராளுமன்றத் தேர்தல்ல காங்கிரஸ் கூட்டணியில எம்.பிக்காக நின்னேன். அப்போ அகில இந்திய காங்கிரஸ் தலைவரா சீதாராம் கேசரி இருந்தார்.
எனக்கு கை சின்னம் கிடைக்கலை. ஆப்பிள் சின்னம்தான் கிடைச்சுது. முதல்முறையா என் சொந்த மாவட்டத்துல சந்தித்த தோல்வி அது. 20 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்துல தோல்வி அடைஞ்சேன்.
அதுக்கு அடுத்த வருஷம் நடந்த எம்.பி தேர்தல்ல நின்னு ஜெயிச்சேன். இப்போ கடைசியா 2016 – ல அறந்தாங்கி தொகுதியில என் பையன் ராமச்சந்திரன் ஆயிரத்து எண்ணூறு வாக்கு வித்தியாசத்துல தோற்றுப்போனார். இந்தத் தோல்வியும் எனக்கு ரொம்ப கசப்பான அனுபவமா இருந்துச்சு.
இந்த மாதிரி வாழ்க்கையில கஷ்டமான நேரங்களை ரொம்பச் சாதாரணமா எடுத்துக்கொள்ளும் பக்குவம் காலப்போக்குலதான் வரும். எனக்கு கடவுள் நம்பிக்கை உண்டு. எல்லா தெய்வங்களையும் கும்பிடுவேன். ஏற்ற இறக்கங்களைத் தாண்டி இன்னும் அரசியல்ல இருக்கிறதுக்கு எங்க பெரியாப்பாவோட ஆசீர்வாதமும் உடமரத்துக்காளியோட அருளும்தான் காரணம். இதுமட்டுமல்லாம ஆசனா ஆண்டியப்பன்கிட்ட நான் யோகா கத்துக்கிட்டேன்.
ஜக்கி வாசுதேவ், ராம்தேவ் ஆசிரமங்கள்ல தங்கியிருந்து யோகா பயிற்சி எடுத்திருக்கேன். டெல்லியில இருக்கும்போது மொரார்ஜி தேசாய் இன்ஸ்டிட்யூட்டுல தியானப் பயிற்சி எடுப்பேன்.
இதையெல்லாம்விட நான் ரொம்ப வெளிப்படையானவன். யார் மீதும் தனிப்பட்ட விரோதம் பாராட்ட மாட்டேன். அதனால எல்லா கட்சியிலயும் அரசியல் மனமாச்சர்யங்களைக் கடந்து எனக்கு நிறைய நண்பர்கள் இருக்காங்க. அதுதான் என்னோட மனசையும் உடம்பையும் தெம்பாவும் உற்சாகமாவும் வெச்சிருக்கு” என்கிறார் திருநாவுக்கரசர்.