முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறப்பில் மர்மம் இருக்கிறது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் 4 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.
மெரினா கடற்கரையில் புதைக்கப்பட்டுள்ள ஜெயலலிதா உடலைத் தோண்டி எடுத்து மீண்டும் பிரேதப் பரிசோனை செய்ய வேண்டும் என்று வழக்கில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்தாண்டு செப்டம்பர் 22-ம் தேதி சென்னை ஆயிரம்விளக்கு அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 75 நாள்கள் கழித்து டிசம்பர் 5-ம் தேதி காலமானார்.
அவருக்குச் சிகிச்சை அளிக்க வெளிநாடுகளிலிருந்து மருத்துவர்கள் வந்தனர். டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்தும் மருத்துவர்கள் பலதடவை வந்து பார்த்துவிட்டுச் சென்றார்கள்.
மருத்துவமனைக்கு வந்த தமிழகப் பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவைக்கூட ஜெயலலிதாவை நேரில் பார்க்கவிடவில்லை என்று குற்றச்சாட்டுகள் எழுந்தன.
பி.ஜே.பி தேசியத் தலைவர் அமித்ஷா, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின், ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் என யாரையுமே ஜெயலலிதாவை நேரில் பார்க்க அனுமதிக்கவில்லை என்று குற்றம்சாட்டப்பட்டது.
ஆனால், சசிகலா மட்டும் ஜெயலலிதாவை அருகில் இருந்து கவனித்துக்கொண்டார் என்று சொன்னார்கள்.
இப்படி முரண்பாடுகள் நிறைந்த நிலையில், ‘ஜெயலலிதா உடல்நிலையில் முன்னேற்றம், இட்லி சாப்பிட்டார், கோட்டைக்குச் செல்ல ரெடியாகிவிட்டார், எழுந்து உட்கார்ந்தார்.
சர்க்கரைப் பொங்கல் சாப்பிட்டார், சாம்பார் சாதம் சாப்பிட்டார், ட்ரெட் மில்லில் நடந்தார், நர்ஸ்களுடன் பேசினார்’ என்றெல்லாம் அ.தி.மு.க மூத்த நிர்வாகிகளான பொன்னையன், சி.ஆர்.சரஸ்வதி, வளர்மதி, கோகுல இந்திரா ஆகியோர் சொன்னார்கள்.
‘ஜெயலலிதா எப்போது வீடு திரும்பப் போகிறார் என்பதை அவர்தான் முடிவு செய்ய வேண்டும்’ என்று அப்போலோ தலைவர் பிரதாப் ரெட்டியும் சொன்னார்.
ஆனால், டிசம்பர் 5-ம் தேதி பிணமாகத்தான் ஜெயலலிதா போயஸ் தோட்டம் கொண்டுசெல்லப்பட்டார். இருதயம் திடீரென்று செயலிழந்துவிட்டதால், ஜெயலலிதா மரணம் அடைந்துவிட்டார் என்று சாவுக்கு விளக்கமும் சொன்னது அப்போலோ.
அந்த அறிவிப்பிலும் ஏகப்பட்ட குழப்பங்கள். எனவே, ‘ஜெயலலிதா முகத்தைக்கூட வெளியே காட்டாமல்… என்னென்னமோ செய்துவிட்டார்கள்’ என்ற கோபம் கட்சியினரிடையே இன்னமும் இருந்துவருகிறது.
”அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருக்கிறது; சி.பி.ஐ விசாரணை நடத்த வேண்டும்” என்று ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்து வலியுறுத்திவருகிறார்.
நடிகை கெளதமி, இதுதொடர்பாக பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதினார். நடிகர் பார்த்திபனும் ஜெயலலிதா சாவில் சந்தேகம் இருப்பதாகக் கூறியிருந்தார்.
இப்படி, ஜெயலலிதா மரணத்தில் மர்மங்கள் புதைந்து இருப்பதாக அ.தி.மு.க அடிமட்டத் தொண்டர்களிடையே குமுறல் இருந்துகொண்டுதான் இருக்கிறது.
ஆனால், முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசு, ஜெயலலிதா மரணம் குறித்த பிரச்னையில் மெளனம் காத்து வருகிறது. இதுகுறித்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு ஒன்றில், ‘சி.பி.ஜ விசாரணை தேவையில்லை’ என்று அரசுத் தரப்பின் நிலைப்பாடு பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், சென்னை அயனாவரத்தைச் சேர்ந்த மியாஜான் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், ”ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் அனைத்தும் மர்மான முறையில் இருந்தது.
ஆஸ்பத்திரியில் சிகிசைக்கு அனுமதிக்கப்படுவதற்கு முந்தைய நாள் மெட்ரோ ரயில் சேவையை தொட ங்கிவைக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
அப்போது, அவர் உடல்நலத்துடன்தான் இருந்தார். மருத்துவமனையிலும் ஜெயலலிதாவை வெளியே காட்டவே இல்லை. ஜெயலலிதா உடலில் பல ஊசிகள் போடப்பட்டு இருந்ததற்கான தடயங்கள் இருந்தன.
ஜெயலலிதாவின் சொத்து விவரங்கள் அனைத்தும் சசிகலாவுக்குத்தான் தெரியும். எனவே, ஜெயலலிதா சாவில் மர்மம் இருக்கிறது. எனவே, ஜெயலலிதா உடலைத் தோண்டி எடுத்து முன்னணி டாக்டர்களைக் கொண்டு பிரேதப் பரிசோதனை செய்ய உத்தரவிட வேண்டும்.
ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவரை நியமிக்கவும் மத்திய உள்துறைச் செயலாளருக்கு உத்தரவிட வேண்டும்” என்று கோரி இருந்தார்.