அமெரிக்க ஜனாதிபதியாக பதவி வகித்த ஜான் எப்.கென்னடி, 1963-ம் ஆண்டு நவம்பர் மாதம் 22-ந்தேதி ஆஸ்வால்டு என்பவரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
ஆனாலும் அவருடைய படுகொலை குறித்து பல்வேறு கருத்துகள், அதன் பின்னணி போன்றவை குறித்த சந்தேகங்கள் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக எழுப்பப்பட்டு வருகிறது.
இது தொடர்பான அலுவல் ரீதியான கோப்புகளை அமெரிக்க அரசாங்கம் ரகசியமாக பாதுகாத்து வருகிறது.
இந்த நிலையில் ஜான்கென்னடி சுட்டுக்கொல்லப்பட்டது தொடர்பான ரகசிய கோப்புகளை பொதுமக்களின் பார்வைக்காக வெளியிடப்போவதாக ஜனாதிபதி டிரம்ப் நேற்று அதிரடியாக அறிவித்தார்.
இதுபற்றி அவர் கூறும்போது, “கென்னடி படுகொலை தொடர்பான ரகசிய ஆவணங்கள் பகிரங்கமாக வெளியிடப்படாமல் வெகு காலமாக முடக்கி வைக்கப்பட்டு இருக்கிறது.
அலுவல்பூர்வமான அந்த அனைத்து ஆவணங்களையும் விரைவில் பொதுமக்களின் பார்வைக்காக முதல் முறையாக வெளியிடுவதை அனுமதிப்பேன்” என்றார்.
அரசு ரகசியமாக பாதுகாத்து வைத்துள்ள அந்த ஆவணங்களில் என்ன கூறப்பட்டு இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள அமெரிக்க மக்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருப்பதாக வாஷிங்டன் நகரில் இருந்து வெளிவரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த கோப்புகள் அக்டோபர் 26ஆம் தேதி, அமெரிக்க தேசிய காப்பகத்தால் திறப்பதாக திட்டமிடப்பட்டிருந்த நிலையில், அதன் காலத்தை நீட்டிக்க அதிபருக்கு அதிகாரம் உண்டு.
கடந்த 1963 ஆம் ஆண்டு, டெக்சாஸின் டாலஸ் பகுதியில், கென்னடி சுட்டுக் கொல்லப்பட்டார்.
தேசிய காப்பகம், இந்த கொலை தொடர்பான பெரும்பாலான கோப்புகளை ஏற்கனெவே வெளியிட்டுவிட்ட நிலையில், கடைசிகட்ட கோப்புகள் மட்டும், இன்னும் பூட்டப்பட்டு பாதுகாக்கப்படுகிறது.
`மேலும் தகவல்களை பெரும் பொருட்டு, அதிபர் என்ற முறையில், பல ஆண்டுகளாக பூட்டப்பட்டு இருந்த கென்னடியின் கோப்புகளை திறக்க நான் அனுமதிப்பேன்` என்று டிரம்ப் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
1992ஆம் ஆண்டு, அமெரிக்க காங்கிரஸ், ஆவணங்கள் வெளியிடப்படும் தேதிகள் நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் இல்லாதவையாக இருக்குமென்றால், அதிபர் கென்னடி குறித்த ஆவணத்தை 25ஆண்டுகளில் வெளியிடலாம் என தெரிவித்துள்ளது.
இந்த காப்பகம் வெளியிடப்படாத மூன்று ஆயிரம் ஆவணங்களுக்கு மேல் கொண்டுள்ளது. இதற்கு முன்பு முப்பது ஆயிரம் ஆவணங்களுக்கு மேல் வெளியிடப்பட்டுள்ளன.
இந்த ஆவணங்களை அதிபர் மொத்தமாக வெளியிடுவாரா அல்லது தொகுப்பாகவா என்பது குறித்து இன்னும் தெளிவாக தெரியவில்லை.
`வாஷிங்டன் போஸ்ட்` பத்திரிக்கையின் அறிக்கைப்படி, கென்னடி கொலை குறித்த நிபுணர்கள், கடைசிகட்ட ஆவணங்களில், அவரின் கொலைகுறித்த பெரிய ஆச்சரிய தகவல்கள் ஒன்றுமில்லை என்று தெரிவித்துள்ளனர்.
ஆனால், கொலைக்கு முன்பாக, மெக்சிகோ நகரில் ஆஸ்வோல்ட்டின் நடவடிக்கைகள் குறித்து இந்த கோப்புகள் கூறலாம்.
கொலை நடந்த அன்றே டாலஸில் ஆஸ்வோல்ட் கைது செய்யப்பட்டார். கொலை செய்ததை மறுத்த அவர், தன்னை ஒரு பலிகடா என குறிப்பிட்டார்.
காவல்துறையின் விசாரணையில் இருந்த போதே, ஆஸ்வோல்ட் அங்குள்ள இரவு விடுதியின் உரிமையாளர் ஜாக் ரூபியால் கொல்லப்பட்டார். கென்னடியின் கொலையே, அமெரிக்க வரலாற்றின் மிகவும் சக்திவாய்ந்த சதி கோட்பாடாக உருவாகியது.
`அமெரிக்க மக்கள் உண்மையை அறியும் தகுதியை பெற்றுள்ளனர். குறைந்தபட்சம், இத்தனை ஆண்டுகளாக அரசு எதை மறைத்து வைத்தது என்பதையாவது அவர்கள் அறியும் தகுதி பெற்றுள்ளனர்` என்று கென்னடி குறித்த புத்தகம்எழுதியவரும், வெர்ஜீனியா பல்கலைக்கழகத்தின், அரசியல் பிரிவின் இயக்குநரான லாரி சபடோ ஏ.பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.