டெல்லி காவல்துறையின் விசாரணையில் இருக்கும் தினகரன் விசாரணை முடிந்து சென்னை திரும்புவது சந்தேகம் தான் என்று தகவல் வெளியாகியுள்ளது.
தேர்தல் ஆணையத்தினால் முடக்கப்பட்டுள்ள இரட்டை இலை சின்னத்தை மீட்பதற்காக அதிகாரிகளுக்கு 50 கோடி ரூபாய் வரை லஞ்சம் கொடுக்க முயன்றதாக தினகரன் மீது டெல்லி போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது.
தினகரனுக்கு இடைத்தரகராக இருந்ததாக சுகேஷ் சந்திரசேகரையும் கைது செய்துள்ளது டெல்லி போலீஸ். அவரிடம் விசாரணை செய்தபோது தினகரன் லஞ்சம் தர முயன்றதை ஒப்புக்கொண்டுள்ளார். இதையடுத்து, டெல்லி போலீஸார் சென்னைக்கே வந்து தினகரனுக்கு சம்மன் கொடுத்து சென்றனர்.
தினகரனும் இன்று டெல்லி சென்று, குற்றப்பிரிவு புலனாய்வு காவல்துறையினர் முன் ஆஜர் ஆகினார். தினகரனோடு அவருடைய உதவியாளர் ஜனார்தனனையும் விசாரணைக்கு அழைத்திருந்தனர்.நேற்று நண்பகலில் காவல்துறையினர் விசாரணையை துவக்கினார்கள்.
முதலில் கேட்கபட்ட கேள்விகளுக்கு தினகரன் தரப்பில் இருந்து தெரியாது என்றே பதில் வந்துள்ளது. அதனால் தினகரனை வேறு அறையில் அமர சொல்லிவிட்டு, அவருடைய உதவியாளிரிம் விசாரணையை ஆரம்பித்துள்ளார்கள்.
துவக்கத்தில் சில பேப்பர்களை காட்டியதும் ஜனார்தனன் ஆடிபோய் உள்ளார்.
அந்த பேப்பர்கள் குறித்து எந்த பதிலையும் சொல்லாமல் முரண்டுபிடித்ததால், அடுத்ததாக ஜனா – சுகேஷ் இடையே நடைபெற்ற செல்போன் உரையாடலை போட்டு காட்டியுதும், பதில் சொல்ல முடியாமல் திணறிவிட்டார் ஜனார்த்தனன்.
அதன் பின்னர் மீண்டும் தினகரனிடம் விசாரணயை ஆரம்பித்துள்ளார்கள். இந்த முறை ஜனார்தனன், ஒப்புக்கொண்ட தகவல்களை வைத்தே தினகரனிடம் கேள்விகளை ஆரம்பித்துள்ளார்கள்.
ஆனால், ஜனார்தனன் சொன்ன தகவல் பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்றே மறுத்து வந்துள்ளார் தினகரன். தொடர்ந்து அதிகாரிகள் கிடுக்குபிடியால் தனது உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாக கூறிவிட்டார் தினகரன். கிட்டதட்ட ஏழு மணிநேரம் வரை இந்த விசாரணை படலம் நீடித்துள்ளது.
தினகரனை இன்று மீண்டும் விசாரணைக்கு வர காவல்துறையினர் உத்தரவிட்டுள்ளார்கள். ஆதாரங்களை கையில் வைத்துக் கொண்டு இன்று மீண்டும் கேள்விகளை ஆரம்பிக்க உள்ளார்கள்.
“அனைத்து ஆதாரங்களும் கைப்பற்றிய பிறகு தான் நாங்கள் விசாரணையை ஆரம்பித்துள்ளோம், எங்கள் கணிப்புபடி அவர் எங்களிடம் எதையும் மறுக்க முடியாது.
ஒரு நிலையில் ஒப்புக்கொண்டு தான் ஆக வேண்டும். அப்போது அவருடைய கைது தவிர்க்க முடியாது.” என்கிறார்கள் விசாரணையில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள்.
மத்திய அரசு ஏற்கெனவே சசிகலா குடும்பத்தின் மீது ஏககடுப்பில் இருக்கும் நிலையில், இந்த வழக்கை வைத்து அந்த குடும்பத்துக்கு நெருக்கடிகளை கொடுக்கும் என்ற பேச்சு உள்ளது.
அ.தி.மு.கவின் இரண்டு அணிகளின் பேச்சுவார்த்தை திங்கள்கிழமை அன்று நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுவதால் அந்த நேரத்தில் தினகரன் தரப்பு சென்னையில் இருப்பதை மத்திய அரசு விரும்பவில்லை.
இதனால் டெல்லி காவல்துறையின் விசாரணை வளையத்தில் இருந்தே தினகரன் மீண்டு வருவது கடினம் என்ற தகவலும் உலவுகிறது.
இந்த வழக்கில் தினகரன் கைதாவது உறுதி என்கிறார்கள். மொத்தத்தில் டெல்லி சென்றுள்ள தினகரன் சென்னை திரும்புவது கடினம் தான்.
-அ.சையது அபுதாஹிர்