இப்போது தங்கம் குறித்து ஒரு விவாதம் எழுந்துள்ளது. 500 கிராம் தங்கம் வைத்துக்கொள்ளலாம் என்பதாக ஓர் அறிவிப்பு வந்தது… பின், இது புதிய அறிவிப்பு இல்லை… முன்பே உள்ளதுதான் என்றார்கள்.
சரி இந்த விவாதத்தை விடுங்கள். 80 ஆண்டுகளுக்கு முன் 4500 சவரன் தங்கம் வாங்கும் அளவுக்கு ஒருவர் சம்பளம் வாங்கி இருக்கிறார். அவரைக் குறித்துத்தான் இந்தக் கட்டுரை.
கவியரசர் கண்ணதாசனின் புகழ்பெற்ற பாடல்களில், ‘ஆட்டுக்குட்டி முட்டையிட்டு கோழிக்குஞ்சு வந்ததுன்னு’ என்று தொடங்கும் ‘பதினாறு வயதினிலே’ படப் பாடலும் ஒன்று.
அந்தப் பாட்டில், “கிட்டப்பாவின் பாட்டைக் கேட்டேன்; சின்னப்பாவை நேரில் பார்த்தேன்; கொட்டகொட்ட வருகுதம்மா… சங்கீதமா பெருகுதம்மா” என்ற வரியை நுழைத்திருப்பார் கவியரசர்.
ஏன் ‘கிட்டப்பா’ என்கிற பெயரைச் சேர்க்க வேண்டும்… அத்தனை ஆளுமை கொண்டவரா அந்த மனிதர்? கவியரசரை, கவிஞர்கள் வசப்படுத்தலாம்… பாடகருமா என்ற கேள்விக்குப் பதில் மிக எளிதுதான்.
இந்த உலகில் 29 ஆண்டுகளே வாழ்ந்த அற்புதக் கவிஞன் பட்டுக்கோட்டையார்போல 27 ஆண்டுகள் மட்டுமே (1906–1933) வாழ்ந்து மறைந்த தேனமுதக் குரலோன்தான் கிட்டப்பா.
எஸ்.ஜி.கிட்டப்பா என்கிற அந்தச் சங்கீத ஓடையின் இசைக்குள் தன்னைத் தேடிய இசைமேதை கே.பி.சுந்தராம்பாள். அந்தத் தேடலில் கிட்டப்பாவின் மனைவியானது காலத்தின் பதிவு.
செங்கோட்டை திருவிதாங்கூர் சமஸ்தானத்தைச் சேர்ந்த கங்காதர ஐயர் பிள்ளைகள் காசி ஐயர், கிட்டப்பா ஐயர். நாகூர் தர்கா ஆஸ்தான வித்வான் உஸ்தாத் தாவூத் மியான்தான், இந்தச் சகோதரர்களின் இசைக்கு குரு.
இந்துஸ்தானி, கர்நாடக சங்கீதத்தில் புலமை வாய்ந்தவர். உஸ்தாத் தாவூத் மியானிடம் பயிற்சி பெற்றதனால், கிட்டப்பாவின் பாடல்களில் இந்துஸ்தானி இசைச் சாயல் அதிகமாகவே இருக்கும்.
இசையில் தன்னுடைய முத்திரையை கிட்டப்பா பதிக்க ஆரம்பித்த அதே காலகட்டத்தில் தன்னுடைய குடும்பத்தின் வறுமையைப் போக்க பயணங்களில் பாடத் தொடங்கியது சுந்தராம்பாள் எனும் குயில்.
கோவையில் நாடகத்தை முடித்துக்கொண்டு செங்கோட்டை வழியாக ரயிலில் பயணித்த அந்த இளைஞர் காதுகளில், இதுவரை கேட்டிராத ஒரு குரல், ரயிலின் இரைச்சலை மீறி வந்துசேர ஒரு கணம் திகைத்துப் போனார்.
“இதுவரையில் என் குரலைத்தான் மிகவும் உச்சஸ்தாயி குரல் என்று பிறர் சொல்லக் கேட்டிருக்கிறேன். இன்று நானே தடுமாறிப் போய் நிற்கிறேனே, யாரம்மா நீங்கள்” என்று பாவாடை, தாவணியுடன் பாடிக் கொண்டிருந்த அந்தப் பெண்ணிடம் கேட்டார் கிட்டப்பா.
“என் பேரு சுந்தராம்பா… ஏதோ வயித்துப் பிழைப்புக்காக, எனக்குத் தெரிஞ்சதை இங்கே பாடிக்கிட்டு விருப்பப்பட்டு மக்கள் கொடுப்பதை வாங்கிக்கொள்கிறேன்.
எனக்கு ராகம், இசை, தாள சுதி ஒன்றும் தெரியாது. அய்யா… பாட்டில் தவறிருந்தால் மன்னித்துவிடுங்கள்” என்றார் அந்தப் பெண். நெக்குருகி நின்ற அந்த இளைஞரான கிட்டப்பாதான், சுந்தராம்பாளை நாடகக் கம்பெனிகளிலும், மேடைகளிலும் பாட வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்தார்.
சுந்தராம்பாளின் குரல் வளம் அவரை அடுத்தகட்டத்துக்கு அழைத்துச் சென்றது. இசைப் பாடல் பாடுதல், நாடகங்களில் துணை நாயகி பாத்திரம்… பின்னர், நாயகி என்று வலம் வர… குரல் துணை நின்றது.
கே.பி.எஸ். நடித்த நாடகங்களில் நாயகனாக இணை சேர்ந்தவர்தான் கிட்டப்பா. அன்றிருந்த நாடக, சினிமா உலகம் பாடலில் திறன் பெற்றவர்களுக்கே நடிக்கவும் வாய்ப்புக் கொடுத்தது.
நாடகங்களில் கே.பி.சுந்தராம்பாளின் குரல் மட்டுமே அன்று உச்சஸ்தாயியில் பொங்கிய குரல். அந்தக் குரலுக்கு ஏற்றார்போல் இணைந்து பொங்கும் சம ஆண் குரல், அந்தக் காலகட்டத்தில் மிகவும் அரிதாக இருந்தவேளையில் குரலில் உச்சம் பெற்றிருந்த கிட்டப்பாவுக்கு, சுந்தராம்பாளுடன் இணைந்து பாடி, நடிக்கும் வாய்ப்பு அமைந்தது.
ஒரே நேர்கோட்டில் பயணிப்பவர்கள், வாழ்க்கையில் இணைவதும் வியப்புக்குரிய ஒன்றல்ல. காலம் அவர்களை தம்பதிகளாக்கியது.
இசைத் தம்பதிகளின் ஆற்றல் அவர்களை கீழை நாடுகளில் நிகழ்ச்சிகள் கொடுக்க அழைப்பு அனுப்பியது. அரங்கத்தில் நுழைய டிக்கெட் கிடைக்காத ரசிகர்கள், கச்சேரி – நாடகம் முடியும்வரை (அப்போதெல்லாம் ஒலிபெருக்கி வைக்கப்படுவதில்லை) வெளியிலேயே நின்று அவர்களின் குரலை மட்டும் கேட்பார்கள்.
‘பொதிகை மலை ஓரத்திலே’ என்று ஆரம்பிக்கும் சுந்தராம்பாளின் பாட்டுக்கு இருந்த மவுசைப் பார்த்து 1926-ல் அதை இசைத்தட்டுகளாக வெளியிட்டது கொலம்பியா நிறுவனம்.
ஜாலியன் வாலா பாக் கொடூரப் படுகொலை சம்பவத்தின்போது (1919) மகாகவி பாரதி, மதுரகவி பாஸ்கரதாஸ் ஆகியோரின் பாடல்களை மேடையிலேயே பாடி, சுதந்திர வேட்கையைத் தூண்டவைத்தது கே.பி.எஸ்ஸின் கணீர் குரல்தான்.
மனைவி சுந்தராம்பாளையும், சுதந்திரப் போராட்டத்தில் மறைமுகமாகக் களம் இறக்கிய கணவர் கிட்டப்பா, ராட்டை நூல் நூற்றார், கிடைத்த சொற்ப வருமானத்தைத் தமக்கென பயன்படுத்தாமல் சுதந்திரப் போராட்டப் பணிக்கு வழங்கினார்.
தீரர் சத்தியமூர்த்தி ஏற்பாடு செய்த கூட்டங்களில் கிட்டப்பா – சுந்தராம்பாள் தம்பதியர் தேச பக்திப் பாடல்களைப் பாடி, மக்களிடையே விடுதலை வேட்கையைப் பரப்பி வந்தனர்.
“சுந்தராம்பா- கிட்டப்பா சேர்ந்து பாடறாங்களாம்” என்று வீதிமுனையில் கூடி நின்று வாய்மொழியாகவே பரவவிட்டனர் அந்தக் கால ரசிகர்கள்.
ஆற்றல்மிக்க தம்பதியருக்கு பல வழிகளில் தொல்லைகளைக் கொடுத்து அசைக்கப் பார்த்தது, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம். வெள்ளையர் அரசுக்கு வேலை வைக்காமல்.
1933-ம் ஆண்டில் எதிர்பாராவிதமாக இயற்கைக்கு முரணான மரணத்தை எதிர்கொண்டார் கிட்டப்பா. அன்றுடன் நகைகள், ஆடம்பரங்கள், அலங்கார சூடல்கள் அனைத்துக்கும் விடை கொடுத்துவிட்டார் கே.பி.எஸ்.
‘இனி, எந்த ஆடவருடனும் இணையாக திரையிலோ, நாடக மேடையிலோ தோன்றமாட்டேன்’ என்ற அறிவிப்பு ஏதும் கொடுக்காமலேயே அதை நடைமுறைப்படுத்திக்கொண்டார்.
‘நந்தனார்’ என்ற நாடகத்தைப் படமாக்க விரும்பிய தொழிலதிபர் கிஷன்சந்த் தாஸ் (1931), பேசும் படமாக அதைத் தயாரிக்க முன்வந்தார். நாடகத்தில் ஆண் வேடமிட்டு, நந்தனாராக நடித்திருந்த கே.பி.எஸ்-தான் திரையிலும் நாயகன் – நாயகி. ஒரு பெண், எப்படி ஆண் வேடமிட்டு நடிக்கலாம் என்ற கேள்வி, அப்போது ஆணாதிக்கப் போக்கினரால் பெரிதும் விவாதிக்கப்பட்டது தனிக்கதை.
‘நந்தனார்’ படம் வெளிவந்து சக்கைப் போடு போட்டது. ஆனாலும், அன்றிருந்த குறைந்தபட்ச தொழில் நுட்பத்தை வைத்துப் படத்தை முடிக்க மூன்று ஆண்டுகள் பிடித்திருக்கிறது.
காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தி, சென்னையில் மகாத்மா காந்தி தங்கியிருந்த ஆசிரமத்துக்கே கே.பி.எஸ்-ஐ அழைத்துப் போய் அறிமுகம் செய்துள்ளார்.
“சுதந்திரப் போராட்டத்தில் உங்கள் பாடல்களைப் பங்கெடுக்க வைத்திடுங்கள். அது, இப்போதைய அவசியத் தேவை” என்று காந்தியே அழைப்பு விடுக்க, விடுதலைப் போரில், கே.பி.எஸ். குரல் வேகமாக ஒலிக்கத் தொடங்கியது.
தமிழகத்துக்கான சட்டமன்றத் தேர்தலில் (1937) பெருந்தலைவர் காமராஜ், தீரர் சத்தியமூர்த்தியுடன் காங்கிரஸ் கட்சிக்காகப் பிரசாரம் மேற்கொண்ட வகையில் பண்டிட் நேருவின் மனதிலும் இடம்பிடித்தார் கே.பி.எஸ்.
ஜெமினி நிறுவன அதிபர் வாசன் (1953) தயாரித்த, ‘அவ்வையார்’ திரைப்படத்தில் அவ்வையாராகவே வாழ்ந்து நடித்தவர் கே.பி.எஸ்.
மக்களுக்கு கே.பி.எஸ். என்றால் அவ்வையார் தோற்றம் நினைவுக்கு வரும் அளவுக்கு பாத்திரத்தின் உயிராக்கம் இருந்தது.
தமிழ்நாட்டில் காமராஜர் முதல்வராக (1958) இருந்தபோது, கே.பி.எஸ். சட்டமன்ற மேலவை உறுப்பினராக (எம்.எல்.சி) அங்கீகரிக்கப்பட்டார்.
திரைத் துறையிலிருந்து அந்தப் பதவியை பெற்ற முதல் பெண்மணி என்ற சிறப்பு அவருக்கு கிடைத்தது.
இந்தியா- சீனா போர்க்காலத்தின்போது (1962) தனது சட்ட மேலவை உறுப்பினர் பதவியின் மூலம் கிடைத்த மொத்த பணத்தையும் போர்க்கால நிதியாக கொடுத்த கே.பி.எஸ்., 1980-ம் ஆண்டில் நோய்த் தாக்குதலால் மரணமடைந்தார்.
நந்தனாராக நடிக்க 1931-ம் ஆண்டில் கே.பி.எஸ் வாங்கிய சம்பளம் 1 லட்சம் ரூபாய். அந்த நேரத்தில், தங்கத்தின் விலை சவரனுக்கு 21 ரூபாய்தான். அதாவது, 4,500 சவரன்களை வாங்கும் அளவு கே.பி.எஸ். குரலுக்கு சம்பளம் கொடுக்கப்பட்டது.