பிலிப்பைன்ஸில், ஒரு சிற்றோடையைக் கடக்கும்போது தங்கையின் காலைக் கவ்வி இழுத்த முதலையோடு போராடி, தங்கையை அண்ணன் உயிருடன் மீட்ட உருக்கமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.
15 வயது அண்ணன் ஹசிம், 12 வயது தங்கை ஹைனாலிசா ஜோஸ்நபி. பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த இந்த உடன்பிறப்பு கள், கடந்த வெள்ளிக்கிழமையன்று தெற்கு பிலிப்பைன்ஸின் பலவான் பகுதியில் நடந்து சென்றுகொண்டிருந்தனர். அங்கே உள்ள ஓடை ஒன்றின் சிறிய மூங்கில் பாலம் வழியே கடக்க முயன்றனர்.
ஹசிம் கரையேறிவிட்ட நிலையில் திரும்பிப் பார்த்தபோது, 14 அடி முதலை ஒன்று ஹைனாவின் காலைக் கவ்வி இழுத்துக் கொண்டிருந்திருக்கிறது. பாலத்தின் மூங்கில்களுக்கு இடையில் தொங்கியபடி துடித்திருக்கிறார், ஹைனா.
இதைச் சற்றும் எதிர்பார்க்காத ஹசிம் அதிர்ச்சிக்குள்ளாகி யிருக்கிறார். எனினும் பதற்றப்படாமல், பெரிய பெரிய கற்களை எடுத்து முதலையின் மேல் ஆவேசமாக வீசியுள்ளார். ஒரு கட்டத்துக்கு மேல், இனியும் தாமதிக்க முடியாதென முதலையருகே சென்று, ஹைனாவை கரைப்பக்கம் இழுத்து மீட்டுள்ளார்.
கடுமையான காயங்களுடன் துடித்த ஹைனா, பாலபக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தற்போது நலமாக உள்ளார். சம்பவம் குறித்து ஹசிம் கூறும்போது, “முதலில் அவளாகத்தான் விழுந்துவிட்டாள் என நினைத்தேன். பின்னர் கவனித்ததும்தான், முதலை இழுத்திருப்பது தெரிந்தது. உடனே ஓடிப்போய் அவளைக் காப்பாற்றினேன்” என்றார்.
அந்தத் திகிலிலிருந்து இன்னும் விடுபடாத ஹைனா, “முதலை என்னைவிட ரொம்பப் பெரியதாக இருந்தது. பயந்துபோய் கதறி அழத் தொடங்கிட்டேன். முதலையின் வாயையும் உள்ளே அதன் பற்களையும் பார்த்து மிரண்டுபோய்விட்டேன். நான் இறந்துபோயிடுவேன்னுதான் நினைச்சேன். ஆனா, என் அண்ணனால் நான் உயிர் பிழைத்தேன். ஐ லவ் யூ அண்ணா” என உருகினார், ஹைனா.
மருத்துவமனையில் பாலபக் காவலர்கள் கூறும்போது, “முதலைகள் மிகவும் ஆபத்தானவை. ஆனால், அதனிடமிருந்து ஹைனாவைக் காப்பாற்றியதற்கு ஹசிமுக்கு காவல்துறை சார்பில் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார்.