கடுமையான வறட்சியினால் பாதிக்கப்பட்ட மகாராஷ்டிரா மாநிலத்தில் குடிநீர் எடுத்து வருவதற்காக ஒருவரே பல பெண்களை திருமணம் செய்யும் கொடுமை நிலவி வருகின்றது.
மகாராஷ்டிராவின் சுமார் 19 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் வறட்சியால் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் வெகு தொலைவில் இருந்து குடிநீர் கொண்டு வருவதற்காக ஒருவரே பல பெண்களை திருமணம் செய்து கொள்வது அதிகரித்து வருகிறது.
தானே மாவட்டம், ஷாகாபூர் தாலுகாவில் டென்கான்மல் என்ற கிராமத்தைச் சேர்ந்த சகாராம் பகவத் (65வயது) என்பவருக்கு 3 மனைவிகள் உள்ளனர். இது குறித்து அவர் கூறுகையில், நான் தினக்கூலியாக பணியாற்றி வருகிறேன்.
எங்கள் கிராமத்தில் வெகுதொலைவில் உள்ள மலைப் பகுதியில் இரண்டு கிணறுகள் உள்ளன.
அந்த கிணறுகளில் இருந்துதான் குடிநீர் எடுத்து வர வேண்டும். அந்த இரண்டு கிணறுகளிலும் நூற்றுக்கணக்கான மக்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பார்கள்.
எனது முதல் மனைவி சமையலையும் குழந்தைகளையும் கவனித்துக் கொள்வார். எனவே மற்ற இரண்டு பேரை திருமணம் செய்தேன்.
அவர்கள் இருவரும் வீட்டுக்குத் தேவையான குடிநீரை கொண்டு வருகிறார்கள் என்று தெரிவித்துள்ளார்
சகாராம் பகவத் மட்டுமன்றி அந்த கிராமத்தைச் சேர்ந்த பெரும்பாலான ஆண்கள், குடிநீர் சுமப்பதற்காகவே ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை திருமணம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.