ஒற்றை என்ஜின் கொண்ட விமானத்தில் தனியாக உலகை சுற்றிவந்த மிக இளம் பெண் எனும் சாதனையை படைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள ஆப்கானிஸ்தான் யுவதியான ஷயீஸ்தா வாயீஸ் கடந்த வாரம் இலங்கையில் தரையிறங்கினார்.
29 வயதான ஷயீஸ்தா வாயீஸ், ஆப்கானிஸ்தானில் பிறந்தவர். குழந்தையாக இருந்தபோது ஆப்கானிஸ்தானிலிருந்து அகதியாக அமெரிக்காவுக்குச் சென்ற ஷயீஸ்தா வாயீஸ், பின்னர் அங்கு விமானம் செலுத்துவதற்குப் பயிற்சி பெற்றார்.
சிவில் விமானங்களை செலுத்துவதற்கான சான்றிதழ் பெற்ற முதல் ஆப்கானிஸ்தான் பெண் எனும் பெருமையும் ஷயீஸ்தாவுக்கு உள்ளது.
இந்நிலையில், ஒற்றை என்ஜின் கொண்ட விமானத்தில் தனியாக உலகை சுற்றிவந்த மிக இளம் பெண் எனும் சாதனையை படைப்பதற்கான முயற்சியில் ஷயீஸ்தா வாயீஸ் ஈடுபட்டுள்ளார்.
அமெரிக்காவில் வசிக்கும் ஷயீஸ்தா, கடந்த மே 13 ஆம் திகதி அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்திலுள்ள டேட்டோனா கடற்கரையிலிருந்து தனது சாதனைப் பயணத்தை ஆரம்பித்தார். Bonanza A36 a ரக விமானமொன்றில் அவர் இப்பயணத்தை மேற்கொள்கிறார்.
ஸ்பெய்ன், எகிப்து, இந்தியா, சிங்கப்பூர், அவுஸ்திரேலியா உட்பட 18 நாடுகளின் 30 நகரங்களில் தரையிறங்கி மீண்டும் புளோரிடாவை சென்றடைவது ஷயீஸ்தாவின் திட்டம்.
இந்நிலையில் கடந்த 27 ஆம் திகதி அவர் இலங்கையிலும் தரையிறங்கினார். இலங்கையில் தரையிறங்குவதற்கு அவர் முன்கூட்டியே திட்டமிட்டிருக்கவில்லை. எனினும், மோசமான காலநிலை காரணமாக அவர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கிச் செல்ல வேண்டியிருந்தது.
சிவில் விமான போக்குவரத்து அதிகாரசபையினால் ஷயீஸ்தா வாயீஸுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. விமானப் பயிற்சி பெறும் பெண்கள், மாணவர்கள் உட்பட பலர் இந்நிகழ்வில் பங்குபற்றினர்.
ஆப்கானிஸ்தானில் அகதி முகாமொன்றில் பிறந்தவர் ஷயீஸ்தா. 1987 ஆம் ஆண்டு ஆப்கான் – சோவியத் யுத்தத்திலிருந்து தப்புவதற்காக அவரின் குடும்பம் அமெரிக்காவுக்குப் புலம் பெயர்ந்தது.
தனியாக உலகை சுற்றிவரும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள ஷயீஸ்தாவுக்கு பல நாடுகளில் வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. தான் பிறந்த ஆப்கானிஸ்தானுக்கும் அண்மையில் அவர் சென்று திரும்பினார்.
ட்ரீம்ஸ்சோர் (Dreams Soar) எனும் லாபநோக்கற்ற அமைப்பொன்றையும் அவர் ஸ்தாபித்துள்ளார். இளம் பெண்கள், விஞ்ஞானம், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் முதலான துறைகளில் கல்வி பயில்வதை ஊக்குவிப்பதை தான் இலட்சியமாகக் கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு தடவையும் விமானமொன்றின் கதவை திறக்கும்போதும் என்னைப் போன்ற பின்னணி கொண்ட ஒரு யுவதிக்கு எப்படி இத்தகைய அதிஷ்டசாலியாக முடிந்தது| என என்னை நான் கேட்டுக்கொள்வேன். ஊண்மை என்னவெனில் அனைவரும் என்னைப் போல் ஆக முடியும்| என்கிறார் ஷயீஸ்தா வாயீஸ்.
படங்கள்: