தமிழகத்தை தமிழ் உணர்வு கொண்ட யார் வேண்டுமானாலும் ஆளலாம் என்று நடிகர் கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில், நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களைச் சந்தித்தார். அப்போது, அரசியலில் நுழைவதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து அவர் தனது உரையில் குறிப்புணர்த்தியதாக தெரிவிக்கப்பட்டது.
அதையடுத்து, அவர் மீது விமர்சனங்கள் எழுந்தன. அவர் தமிழரே இல்லாத நிலையில், தமிழ்நாட்டை ஆள நினைப்பதாகவும் விமர்சனங்கள் எழுந்தன. இதற்கு பதிலளித்த ரஜினிகாந்த், தான் பச்சைத் தமிழன்தான் என்று பதிலளித்தார்.
இந்த நிலையில், கமல்ஹாசனின் கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
தனியார் தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்பது குறித்தான செய்தியாளர்கள் சந்திப்பில் இன்று வெள்ளிக்கிழமை கலந்துக்கொண்ட கமல் ஹாசன் செய்தியாளர்களின் பலதரப்பட்ட கேள்விகளுக்கும் அப்போது பதிலளித்தார்.
‘என் வாழ்க்கையிலுருந்து உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமானால், என்னை பொறுத்தவரை, கேரள மக்கள் என்னை ஒரு மலையாளியாகத்தான் நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள்’ என்றார்.
அதனால் நான் தமிழனும்தான், மலையாளியும்தான் என்பதற்காக என்ன சொல்ல முடியும் என அவர் அப்போது கேள்வி எழுப்பினார்.
அதற்காக அந்த மாநிலத்திற்கு முதலமைச்சராக வேண்டுமா என்று கேட்டால், அதில் எனக்கு ஆர்வம் இல்லை என்று கமல் ஹாசன் விளக்கம் அளித்தார்.
நான் வாக்களிக்க துவங்கிய காலத்திலிருந்தே அரசியலில் இருக்கத்தான் செய்கின்றேன், போட்டியிடும் அரசியலில் தான் நான் இல்லை என்றும் கமல்ஹாசன் அப்போது தெரிவித்தார்.
`அரசியல்வாதிகளுக்கு சேவை நோக்கம் இல்லை‘
அத்தோடு இப்பொழுது அரசியலில் உள்ளவர்கள் சேவை செய்யும் நோக்கத்தில் அதில் ஈடுபடவில்லை என்பதை நான் சொல்லி தான் தெரிய வேண்டுமா என்று கமல் ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
‘சிஸ்டம்’ கெட்டுப்போயுள்ளது என ரஜினிகாந்த் கூறியுள்ளது குறித்து கருத்து கூற கூறி அவரிடம் கேள்வி எழுப்பட்டபோது அதற்கு பதிலளித்த கமல் ஹாசன், எல்லோரும் கூறும் குற்றச்சாட்டை தான் ரஜினி கூறியுள்ளார் என்றும், வித்தியாசமாக ஒன்றும் கூறவில்லை, அதே நேரத்தில் அவர் தப்பாகவும் ஒன்றும் கூறவில்லை என்றார்.