அஸ்வின் மாதவன் இயக்கத்தில் ‘கலாசல்’ என்ற படத்தின் மூலம் நடிகை அம்பிகாவின் மகனும், லிவிங்ஸ்டனின் மகளும் தமிழ் சினிமாவில் அறிமுகமாகின்றனர்.
கலைத்தாய் பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் பி.சி.பாலு தயாரிக்கும் படம் ‘கலாசல்’. இதில் அம்பிகாவின் மகன் ராம் கேசவ் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.
நாயகியாக லிவிங்ஸ்டன் மகள் ஜோவிதா அறிமுகமாகிறார். இவர்களுடன் ராதாரவி, அம்பிகா, முருகதாஸ், மதன்பாப், அபிஷேக், பானுசந்தர், சாய்பிரியா ஆகியோர் நடிக்கிறார்கள்.
பாபுகுமார் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்துக்கு நிஜாமுதீன் இசை அமைக்கிறார். கோபி கிருஷ்ணா படத்தொகுப்பு செய்கிறார்.
அஸ்வின் மாதவன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். இவர் சுந்தர்.சி, பத்ரி ஆகியோரிடம் உதவியாளராக பணியாற்றியவர்.
படம் பற்றி இயக்குனரிடம் கேட்டபோது..
சினிமாவில் சாதனை புரிந்த அம்பிகாவின் மகன், லிவிங்ஸ்டன் மகள் இருவரையும் வைத்து முதல் படம் இயக்குவதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி.
மனிதனின் தேவைகள் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. நமக்கு தேவை இல்லை என்று நினைக்கிற விஷயங்களை கடவுளுக்கு காணிக்கையாக செலுத்திவிட்டு, வேண்டியதை கேட்டு பெறுவது ஒரு வியாபாரம் தான்.
நாம் வேண்டாம் என்று செலுத்துகிற காணிக்கை விஷயங்கள் கார்பரேட் முதலாளிகளால் அப்பாவி மக்கள் மீது எப்படியெல்லாம் திணிக்கப்பட்டு வியாபாரமாக்கப்படுகிறது என்பதுதான் இந்த படத்தின் கதை” என்றார்.
படப்பிடிப்பு வருகிற 9-ந்தேதி தொடங்குகிறது.