நாட்டில் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட பயங்கரவாத தற்கொலைத் தாக்குதலை நடத்திய 9 பேரில் 8 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் உள்நாட்டவர்கள் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்திட்சகர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.
அத்துடன், வெடிக்க வைக்கப்பட்ட குண்டுகள் அனைத்தும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டுள்ளன. அவை வெல்லம்பிட்டியவில் உள்ள செப்புத் தொழிற்சாலை ஒன்றில் தயாரிக்கப்பட்டுள்ளன. தொழிற்சாலையின் உரிமையாளரும் தற்கொலைத் தாக்குதலை நடத்தியுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, குண்டுத் தாக்குதல்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் இன்றுவரை 60 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் குற்ற விசாரணைப் பிரிவு மற்றும் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் விசாரணைக்கு உள்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.
இதேவேளை, பயங்கரவாத தாக்குதல்களில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 359 பேராக உயர்வடைந்துள்ளது.