இனவெறுப்புப் பரப்புரைகளை மேற்கொண்டு, முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்களைத் தூண்டி வந்த பொது பலசேனா அமைப்பின் பொதுச்செயலர் கலகொடஅத்தே ஞானசார தேரர் தலைமறைவாகியுள்ளார்.
அவரைக் கைது செய்வதற்கு பல காவல்துறைக் குழுக்கள் தேடுதலில் ஈடுபட்டுள்ளதாக சிறிலங்கா காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
குழப்பம் விளைவித்தல், காவல்துறையினருக்கு தடையை ஏற்படுத்தி அச்சுறுத்தியமை இன மற்றும் மத நல்லிணக்கத்தைக் குழப்பும் வகையில் செயற்பட்டமை போன்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், ஞானசார தேரரைக் கைது செய்வதற்கு காவல்துறைக் குழுக்கள் பல நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
காவல்துறையினரின் கோரிக்கைக்கு அமைய, ஞானசார தேரர் நாட்டை விட்டுத் தப்பிச் செல்ல முடியாதவாறு, கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தின் மூலம் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஞானசார தேரருக்கு எதிராக பல முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அழைப்பாணை விடுக்கப்பட்ட போதிலும் அவர் முன்னிலையாகவில்லை.
இந்த நிலையிலேயே தலைமறைவாக உள்ள அவரைக் கைது செய்வதற்கு காவல்துறைக் குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன என்று காவல்துறை பேச்சாளர் பிரியந்த ஜெயக்கொடி தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே ஞானசார தேரர் தலைமறைவாக இருப்பதாக பொது பலசேனாவின் பொதுச்செயலர் டிலந்த விதானகே தெரிவித்தார்.
“கைது செய்யப்பட்ட பின்னர் அவர் படுகொலை செய்யப்படலாம் என்பதால், அவரை வெளியே வரவேண்டாம் என்று நாம் கூறியிருக்கிறோம்.” என்று தெரிவித்தார்.