சிலாபம் இராஜாங்கணை பகுதியில் 15 வயது சிறுமியை பாலியல் வன்புணர்விற்குட்படுத்தியதுடன் அவரின் மரணத்திற்கு காரணமாக செயற்பட்டமையினால் மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவருக்கு சிலாபம் மேல்நீதிமன்ற நீதிபதி ரவிந்து அமல் ரணராஜ மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.
சிலாபம் கரவிட்டஹார பகுதியை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான ரண்கொத் பேடிகே நிசாந்த பிரேமரத்ன என்பவர் நாத்தாண்டியா 50 ஏக்கர் பகுதியில் வசிக்கின்ற இரு பிள்ளைகளின் தாய் ஒருவருடன் தகாத உறவினை பேணி வந்துள்ளார்.
சிறிது காலத்தின் பின்னர் பேடிகே தனது மூன்று பிள்ளைகளையும் நிர்கதியான நிலையிட்டு விட்டு தகாத உறவு வைத்திருந்த பெண்ணிடம் சரணடைந்து வசித்து வந்துள்ளார்.
புதிய பெண்ணை மனைவியாக ஏற்றுக்கொண்ட பேடிகேவிற்கு குழந்தை ஒன்றும் பிறந்துள்ளது.
அத்துடன் நாத்தாண்டியா பெண்ணிற்கு ஏற்கனவே திருமணமாகியுள்ளதுடன் இரு பெண் பிள்ளைகளும் காண்பபடுகின்றனர்.
அவரின் மூத்த பெண் பிள்ளைக்கு 15 வயது ஆன நிலையில் கல்வியினையும் இடைநிறுத்தி வீட்டில் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில், பேடிகே உத்தியோகபூர்வமற்ற புதிய மனைவியின் மூத்த மகளினை கடத்திக்கொண்டு மஹாவெவ பகுதியில் அமைந்துள்ள தேங்காய் தோட்டமொன்றில் காணப்படுகின்ற குடிலுக்கு சென்றுள்ளார்.
காரணம் இவர் மரம் ஏறி தேங்காய் பறிப்பவர் என்பதால் அவருக்கு குறித்த தோட்டத்தில் வசிப்பதற்கு குடில் ஒன்று வழங்கப்பட்டுள்ளது.
குறித்த 15 வயது சிறுமியை 42 வயதுடைய பேடிகே தனது மனைவி என தோட்ட உரிமையாளருக்கு அறிவித்துள்ளதுடன், சிறிது காலத்தின் பின்னர் பேடிகேவின் அண்ணாவும் அவருடன் அதே குடிலில் வசித்து வந்துள்ளார்.
15 வயதுடைய சிறுமியுடன் தாம்பத்திய உறவுகளை பேணி வந்த பேடிகே, காலையில் தொழிலுக்கு செல்ல புறப்பட்டுக்கொண்டிருக்கும் போது உணவு தாமதமாகியமையினால் தேங்காய் பறிக்கும் இரும்பினால் குறித்த சிறுமியை தாக்கியுள்ளார்.
இந்நிலையில் இன்னலுற்ற சிறுமி சிறிது காலத்தின் பின்னர் யாருமற்ற நேரத்தில் குறித்த குடிலிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சிறுமி, கழுத்தில் சுறுக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டிருக்கலாம் என சந்தேகிப்பதாக காவற்துறையினர் தெரிவிக்கின்றனர்.
எனினும் சிறுமியின் மரணத்திற்கு பேடிகேவே காரணம் என நீதிமன்றம் தீர்மானித்தமையை தொடர்ந்து பேடிகேவிற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன், அவரின் அண்ணாவும் சம்பவத்துடன் தொடர்புடைவர் என தெரிவித்து கைது செய்யப்பட்டிருந்த நிலையில், குற்றமற்றவர் என தெரிவித்து விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2015 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 15 ஆம் திகதி இந்த சம்பவம் நடைபெற்றது.
வழக்கு தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டமையினால் ஜுரிகள் சபைக்கு மாற்றப்பட்ட நிலையில், நேற்றைய தினம் வழக்கிற்கான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.