திருகோணமலை – பாலையூற்று பகுதியில் இன்று (05) அதிகாலை கணவனொருவர் தனது மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளார்.
திருகோணமலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலையூற்று முருகன் கோயிலடியைச் சேர்ந்த, நல்லிதன் தமயந்தி (வயது- 26) என்பவரே, இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
குடும்ப தகராறு காரணமாக, மனைவியை கணவன் தாக்கி கொலை செய்துள்ளதாக, ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
உயிரிழந்த பெண்ணின் சடலம், திருகோணமலை பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில், கொலை செய்யப்பட்ட பெண்ணின் கணவரான ராசய்யா ரேஹனை (வயது- 34) கைது செய்யப்பட்டுள்ளார்.
இளம் தாய் சடலமாக மீட்பு
ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வந்தாறுமூலை விஷ்ணு கோவில் வீதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் இருந்து, இளம் தாய் ஒருவர் இன்று (05) சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக, ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
வந்தாறுமூலை விஷ்ணு கோவில் வீதியில் வசிக்கும், 24 வயதான அழகரத்தினம் டிசாந்தினி எனும் இளம் குடும்பப் பெண்ணே, இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இவரது சடலம், வீட்டின் வாசல் கதவருகே மீட்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் இடம்பெற்றபோது, பெண்ணின் 31 வயதான கணவனும், ஒரு வயது குழந்தையும் வீட்டில் இல்லை எனவும், அவரது அலைபேசி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
காங்கேசன் துறை கடற் பரப்பில் 14 இலங்கை அகதிகள் கைது!!!
தமிழக ஈழ அகதிகள் முகாமிலிருந்து, சட்டவிரோதமாக படகில் தாயகம் திரும்பிய 10 பேர், காங்கேசன்துறை கடற்பரப்பில் வைத்து, இன்று (05) அதிகாலை 2 மணியளவில் கைது செய்யப்பட்டனர் என கடற்படையினர் தெரிவித்தனர்.
அவர்களில், வாடைக்கு படகோட்டி வந்த தமிழகத்தைச் சேர்ந்த ஒருவரும் அடங்குவதாக, கடற்படையினர் மேலும் தெரிவித்தனர்.
திருகோணமலையைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் விசாரணைகள் மற்றும் மலேரியா தடுப்பு பரிசோதனையின் பின்னர் காங்கேசன்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும், கடற்படையினர் மேலும் தெரிவித்தனர்.
பொலிஸாரின் விசாரணையின் பின்னர் 10 பேரும் மல்லாகம் நீதவான் முன்னிலையில் இன்று ஆஜர்படுத்தப்படுவர்.