`
கரைக்கு வந்த தங்கம், அதை வாங்கி வரச் சொன்ன நபரின் கைகளுக்கு போகவில்லை. தங்கத்தைக் கடத்தி வரும் வழியில் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துவிட்டார்கள் என நாடகமாடி கடத்தி வந்த தங்கத்தை அபகரித்துள்ளனர்.
இலங்கையில் இருந்து தமிழகத்துக்குத் தங்கம் கடத்தி வருவதும், இங்கிருந்து இலங்கைக்குக் கஞ்சா, பீடி இலைகள், போதை ஏற்படுத்தும் வலிநிவாரணி மாத்திரைகள் உள்ளிட்டவற்றைக் கடத்திச் செல்வதும் சமீபகாலமாக அதிகரித்து வருகின்றன.
இந்தச் சம்பவங்களில் ஈடுபடும் கடத்தல்காரர்கள், இத்தொழிலில் ஈடுபடுத்தப்படுபவர்களால் ஏமாற்றப்படுவதும் வழக்கமாகி வருகிறது. இத்தகைய எத்தனுக்கு எத்தன் ஏமாற்று வேலைகளால் கடத்தல் புள்ளிகள் ‘திருடனுக்குத் தேள்கொட்டிய கதை’ நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
கடந்த மாதம் இலங்கைக்குக் கடத்துவதற்காக சுமார் 200 கிலோ கஞ்சாவைக் கடத்தல்காரர்கள், வேறு சிலரிடம் ஒப்படைத்துள்ளனர்.
கஞ்சாவை பெற்ற அந்த நபர்கள், அவற்றை இலங்கை நபரிடம் ஒப்படைக்காமல், உள்ளூரைச் சேர்ந்த ஒரு கடத்தல்காரரிடம் கைமாற்றி விட்டுள்ளனர்.
இந்தத் தகவலை மோப்பம் பிடித்த க்யூ பிரிவு போலீஸார் கஞ்சாவைக் கைப்பற்ற சென்றநிலையில், அவை அந்தக் கடத்தல்காரர் மூலம் இலங்கைக்குக் கடத்திச் சென்ற விவரம் மட்டுமே கிடைத்துள்ளது.
இதனால் போலீஸார் போதைப் பொருளைக் கைப்பற்ற முடியாததுடன், போதைப் பொருளுக்கு உரிமையுடைய கடத்தல்நபரும் பெரும் தொகையை இழந்துபோனார்.
இந்நிலையில் இலங்கையிலிருந்து கடத்தி வரப்பட்ட சுமார் ரூ.2 கோடி மதிப்புள்ள தங்கத்தைக் கடத்தி வந்த நபர்களே அபகரித்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஒருவர் இலங்கை தலைமன்னார் கடற்பகுதியில் சுமார் 6.5 கிலோ தங்கத்தை வைத்திருப்பதாகவும் அதை வாங்கிவந்து தந்தால் குறிப்பிட்ட தொகை தருவதாகவும் சுந்திரமுடையான் பகுதியைச் சேர்ந்த வேலுசாமி, புலிப்படை கணேசன் ஆகிய இருவரிடமும் கூறியுள்ளார்.
இதையடுத்து அவர்கள் கடந்த மாதம் 11-ம் தேதி தலைமன்னார் கடற்பகுதிக்குச் சென்று 2 கோடி மதிப்புள்ள 6.5 கிலோ தங்கத்தை வாங்கிக்கொண்டு திரும்பியுள்ளனர்.
ஆனால், கரைக்கு வந்த தங்கம், அதை வாங்கிவரச் சொன்ன நபரின் கைகளுக்குப் போகவில்லை. மாறாக உச்சிப்புளி பகுதியைச் சேர்ந்த முனியய்யா என்பவரிடம் அந்தத் தங்கத்தை விற்பனை செய்ய கொடுத்துவிட்டு, தங்கத்தைக் கடத்தி வரும் வழியில் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துவிட்டார்கள் என நாடகமாடி கடத்தி வந்த தங்கத்தை அபகரித்துள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர் தங்கத்தைக் கடத்தி வந்த இருவரிடமும் பல கோணத்தில் விசாரணையில் ஈடுபட்டதன் விளைவாக இவர்கள் நடத்திய போலி நாடகம் அம்பலமாகியுள்ளது.
இதைத்தொடர்ந்து தங்கத்தை விற்பதற்காகக் கொடுத்திருந்த முனியய்யாவைத் தேடிச் சென்ற நிலையில் அவர் தங்கத்துடன் தலைமறைவானது தெரியவந்துள்ளது.
இந்நிலையில் தன் கணவரைக் காணவில்லை என முனியய்யாவின் மனைவி மகேஸ்வரி மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவிடம் புகார் கொடுத்த சம்பவம் நடந்துள்ளது. மேலும், கடத்தல் தங்கத்தைக் கேட்டு கொலை மிரட்டல் விடுவதாகவும் புகார் கொடுத்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து ராமேஸ்வரம் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு உச்சிப்புளி காவல்துறையினர் தகவல் தெரிவித்ததைத் தொடர்ந்து ராமேஸ்வரம் சுங்கத்துறையினர் தங்கத்தை கடத்தி வந்தவர்களையும் கடத்தி வரப்பட்ட தங்கத்துடன் தலைமறைவான முனியய்யாவைவும் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கடத்தல் தொழிலில் ஈடுபடுவர்கள் நம்பிக்கையான நபர்களையே தங்கள் தொழிலுக்கு உதவியாக வைத்துக்கொள்வது வழக்கம். அந்த நம்பிக்கை அடிப்படையில் கடத்திவரப்பட்ட தங்கத்தை உரியவரிடம் ஒப்படைக்காமல் எஸ்கேப் ஆகியுள்ளனர் இருவரும்.
அதன் மூலம் கிடைத்த தங்கத்தை விற்பனை செய்வதற்காகக் கொடுத்த முனியய்யாவும் தங்கத்தை விற்றுத் தராமல் தலைமறைவாகிவிட்டார். மொத்தத்தில் எத்தனுக்கு எத்தனாக நடந்த இந்தச் சம்பவத்தால் கடத்தல் புள்ளிகள் கலங்கிப்போய் உள்ளனர்.